மழை பொய்த்துவிட்டது, நிலத்தடி நீர் வற்றிவிட்டது, காவிரியும், முல்லைப்பெரியாறும் கிடைக்கப் போராட்டம், தேசிய நதி நீர் இணைப்பு என தன் சட்டையில் உள்ள ஓட்டையைக் காணாதவன், பாராளுமன்றத்தில் ஒட்டடை என குறை கூறினானாம் என்ற கதையாக பேசிக்கொண்டு இருப்பதுதான் நம்மில் பலரது தற்போதைய நிலை.
நீர் என்பது குடிநீர் மற்றும் விவசாயம் என்பதற்கு மட்டுந்தான? உலகின் தலைசிறந்த நாகரிகங்களின் பிறப்பிடமாக இருந்தவை ஆற்றுப்படுகைகள். இன்று, நாம் வசிக்கும் நகரில் ஆறுகள் இருந்தனவா, இல்லையா, எத்தனை இருந்தன என யோசிக்க ஒருநாள் கூட நமக்கு அவகாசம் இல்லாமல் நாகரிகத்தின் உச்சியை அடைய ஓடுகிறோம், எங்கிருந்து வந்தோம் என்பதை மறந்துவிட்டு.

மதுரை, உலகின் பழமையான நகரங்களில் ஒன்று. அத்துடன் வைகை நதிக்கரையில் முளைத்த நாகரிகத் தொட்டில். ஆனால், வையையைத் தவிர மதுரைக்கு வேறு ஆறுகள் உண்டா? என கேட்கும் இப்போதைய மக்கள் அதிகம். இருப்பதை பாதுக்காக்கத் தவறிவிட்டோம், ஆனால் இன்னும் அதை உணராமல் இருக்கும் மடத்தனத்திற்கு முடிவுகட்டும் விதமாக மதுரை மாநகரின் “ஆறுகளைத் தேடி…” என மதுரை ‘நாணல் நண்பர்கள் இயக்கம்’ ஒரு நிகழ்ச்சியினை 23-08-2015 அன்று நடத்தினர்.
நம்மைப் பொறுத்தவரை ஆறுகள் என்றால் காவிரி, வைகை, தாமிரபரணி, பாலாறு போன்ற பெரும் நதிகள்தான். ஆனால் நம்மைச் சுற்றியிருக்கும் துணையாறுகள், கிளையாறுகள், சிற்றாறுகள், காட்டாறுகள், ஓடைகள் என்பவனப் பற்றி கவனம் கொள்வதேயில்லை. ஆறுகள், மணல் கடத்தலால் சிதைந்து கழிவுநீர் ஓடையாகிப் போவதைப் பற்றியே கவலை கொள்ளாத நாம் குளம், குட்டைகளையா தேடப்போகிறோம்.
மதுரை, வைகை மட்டுமல்லாமல் இன்னும் பல நீர் நிலைகளுக்கு நடுவே அமைந்த நகரம் என்பதால்தான் ‘ஆலவாய்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. மதுரையைச் சுற்றி பத்துக்கும் மேற்பட்ட ஆறுகள் உள்ளன. இதில் குண்டாறு, கமண்டல ஆறு, வறட்டாறு ஆகிய ஆறுகளைத் தேடிச் சென்றது ‘நாணல் நண்பர்கள் இயக்கக்குழு’. வறண்ட பாலைவனமாய்க் காட்சியளிக்கும் ஆற்றுப்படுகைகளைக் காண்பித்து, அதன் வரலாற்றையும் விளக்கினர்.
இதுகுறித்து இயக்கத்தின் அமைப்பாளர், தமிழ்தாசன் கூறுகையில், "மேற்குதொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகும் குண்டாறு, கமண்டல ஆறு, வரட்டாறு ஆகிய ஆறுகள் மதுரை, விருதுநகர் மாவட்டங்களை கடந்து செல்கின்றன. ஒரு காலத்தில் தாங்கள் கடந்து சென்ற கிராமங்களை எல்லாம் வெள்ளத்தால் காணாமல் போகச் செய்த ஆறுகள், இன்று இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டன. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இப்பகுதிகளில் நடத்திய ஆய்வுகளின் மூலம் கிடைத்த எச்சங்கள் மனித நாகரிகத்தின் சான்றுகள்.
இன்று பலவாறு சூறையாடப்பட்டு காணாமல் போய்க் கொண்டிருக்கும் ஆறுகளை ஆவணப்படுத்துவதன் மூலம் ஒரு நகரின் வரலாறு, நாகரிகம், வேளாண்மை, மரபுசார் அறிவு, பல்லுயிர் வளம் என பலவற்றையும் காக்க முடியும். இதற்காக முதலில் செய்யப்படவேண்டியது, ஆறுகளை அடையாளப்படுத்த வேண்டும், மேம்படுத்துதல் வேண்டும், ஆறு-மக்கள் இடையேயான பாரம்பரிய உறவுகளை புதுப்பித்துத் தொடர வேண்டும்" என்றார்.
இக்குழுவின் ஆறுகள் பாதுகாப்பு முயற்சியின் முதற்படியாக , ஆறுகளை மீட்பதற்காக மதுரை ஆட்சியருக்கு மனு ஒன்றினை தயாரித்து, அதில் பங்கேற்பாளர்கள் அனைவரும் கையெழுத்திட்டு சமர்ப்பித்துள்ளனர்.
நாகரிக மனிதன் தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் கயவனாகிப் போகமாட்டான் என்கிற தீவிர நம்பிக்கையில் பணிகள் தொடரட்டும்..!

ராகினி ஆத்ம வெண்டி மு.