உலக வங்கி வங்கியின் தலைவராக இருக்கும் டேவிட் மால்பாஸின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், அதற்கு முன்னர் பதவி விலகுவதாக அவர் அறிவித்தார். அதனால் வரும் ஜூன் மாதத்துடன் அவரது பதவிக்காலம் முடிகிறது.

அந்தப் பதவிக்கு யாரை நியமனம் செய்வது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோசனை நடத்தினார். அதில், சர்வதேச நிதி நிறுவனமான `மாஸ்டர் கார்டு' நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பால்சிங் பங்காவை, உலக வங்கியின் அடுத்த தலைவர் பதவிக்கு ஜோ பைடன் பரிந்துரை செய்தார்.
63 வயதான அஜய் பங்கா இந்தியாவில் சீக்கிய குடும்பத்தில் பிறந்தவர். 2010 முதல் 2021 வரை `மாஸ்டர் கார்டு' நிறுவனத்தின் சி.இ.ஓ பதவியில் இருந்தவர். அமெரிக்கன் செஞ்சிலுவைச் சங்கம், கிராஃப்ட் ஃபுட்ஸ் மற்றும் டவ் இன்க் ஆகியவற்றின் உயர் பதவிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
அஜய் பங்கா வேட்புமனு தாக்கல் செய்தபோது, ``உலகளாவிய பிரச்னைகளுக்கு நிதியுதவியை சமாளிக்க அதிக தனியார்துறை நிதியைத் திரட்ட வேண்டும். தனியார் துறை பங்கேற்பு இல்லாமல் போதுமான நிதி திரட்ட இயலாது. உலக வங்கியின் இலக்குகளை அடைய ஆபத்தை பகிர்ந்துகொள்ளக்கூடிய தனியார் நிதிகளைத் திரட்டும் அமைப்பை உருவாக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மார்ச் 29-ம் தேதியுடன் உலக வங்கி தலைவர் பதவிக்கான விருப்ப மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது. ஆனால், அஜய் பங்கா மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு எதிராக யாரும் உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டியிட முன்வரவில்லை.
இதனால் உலக வங்கி தலைவர் பதவிக்கு அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் பதவியேற்கும் அஜய் பங்கா 5 ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார்.