
காந்திமதி லஷ்மணன்
பெண்கள் அதிகம் பயணப்படாத பிசினஸ் பாதையிலும் தடம்பதித்த வெற்றி முகங்களின் அனுபவ அணிவகுப்புத் தொடர் இது. இந்த இதழில், ஈரோடு `ஷிகா பெட்டல்ஸ்’ நிறுவன உரிமையாளர், காந்திமதி லஷ்மணன்.
இளம் வயது பிசினஸ் கனவை நிறைவேற்ற, அனைத்துப் படிநிலைகளையும் சரியாகக் கடைப்பிடித்திருக்கிறார், காந்திமதி. இதனால், துல்லியமான வெற்றி இவருக்கு எளிதில் வசமாகியிருக்கிறது. ஃப்ளவர் பொக்கே விற்பனையில் ஈரோட்டின் அடையாளமாக இருக்கிறார். ஈவென்ட் டெகரேஷன் தொழிலும் கலக்கிவருகிறார். ஏராளமான பெண் தொழில்முனைவோரை உருவாக்கிய பெருமையுடைய காந்திமதி, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.
10 ரூபாய் வருமானம்!
“என் பூர்வீகம் நாமக்கல் அருகிலுள்ள பாலப்பட்டி கிராமம். நடுத்தர விவசாயக் குடும்பம். அப்பா, அரசுப் பள்ளி ஆசிரியர். அம்மா விவசாயி. பத்தாவதுவரை அரசுப் பள்ளியில்தான் படித்தேன். தொழில்முனைவோராவது என் இளமைக்கால கனவு. செய்யும் செயல் எதுவானாலும், அதை நேர்த்தியாகச் செய்வதிலும் அழகாகக் காட்சிப்படுத்துவதிலும் முனைப்பு காட்டினேன். `எண்ணம் செயலாகும்’ என்பதைப் பிற்கால பிசினஸ் அனுபவத்தில் உணர்ந்தேன். போஸ்ட் டிப்ளோமா முடித்ததும், 1993-ம் ஆண்டு, ஈரோட்டில் சித்தப்பா தொடங்கிய ஷேர் புரோக்கிங் தொழிலில் நானும் என் அண்ணனும் பங்குதாரர்களாக இணைந்தோம். ஓய்வில்லாமல் உழைத்தோம். சில ஆண்டுகளில் தொழில் பெரிய அளவில் வளர்ந்தது.
1995-ம் ஆண்டு, எங்கள் நிறுவனத்தின் கீழ்த்தளத்தில் என் அக்கா, சிறிய அளவில் பொக்கே ஷாப் ஒன்றைத் தொடங்கினார். தனியார் கல்லூரியில் உடற்கல்வி இயக்குநராகவும் அவர் வேலை செய்தார். எனவே, என் வேலையோடு சேர்த்து பொக்கே ஷாப்பையும் கவனிச்சுக்கிட்டேன். இந்த நிலையில் சில தனிப்பட்ட காரணங்களால், 1998-ம் ஆண்டு, ஷேர் புரோக்கிங் தொழிலில் இருந்து விலகினேன். அந்த நிறுவனத்தில் எனக்கிருந்த 25 சதவிகிதப் பங்குகளை என் அண்ணனிடமே ஒப்படைச்சேன். பிறகு, அக்காவின் பொக்கே ஷாப்பை நானே எடுத்து நடத்தினேன். அப்போ ஒருநாள் வருமானமே 10 ரூபாய்தான்! ஒரு வருஷம் தொழில் நஷ்டத்துலதான் போனது. ஆனாலும், பெரிய வெற்றி கிடைக்கும்னு உறுதியா நம்பினேன்.

டிரெண்டி யுக்தி!
அண்ணன், அக்கா, நான்... எங்க மூவரின் பெயர்களிலிருந்தும் தலா ஓர் எழுத்துடன், மலரின் இதழ்களைக் குறிக்கும் பெயரைச் சேர்ந்து, `shiga petals’னு நிறுவனத்துக்குப் பெயர் வெச்சேன். வியாபார வாய்ப்புகள் உள்ள துறையில் தொழில் தொடங்கி வெற்றி பெறுவது ஒரு ரகம். ஒரு துறையில் புதிதாக வியாபார வாய்ப்பை உருவாக்கி வெற்றி பெறுவது மற்றொரு ரகம். நான் இரண்டாவது ரகத்தைத் தேர்வு செஞ்சேன். 25 வருஷங்களுக்கு முன்பு ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஃப்ளவர் பொக்கேவுக்கான தேவையும் விழிப்புணர்வும் மிகக் குறைவாகவே இருந்தது. அந்த நிலையை மாற்றுவதை என் முதல் நோக்கமா வெச்சுக்கிட்டேன்.
அப்போ, கடைக்கு வந்து பொக்கே வாங்குவோர் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. அதனால், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்களின் வரவேற்பறையில் பொக்கே வைப்பதற்கான தினசரி ஆர்டர்களைப் பிடிச்சேன். தவிர, கடை கடையா ஏறி இறங்கி ஆர்டர் கேட்டேன். என் முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. பொக்கே விற்பனை தவிர, மற்ற வகை பூக்களையும் விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். கூடவே, கல்யாணம் உட்பட பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்கும் ஃப்ளவர் டெகரேஷன் ஆர்டர்களைச் செய்துகொடுக்க ஆரம்பிச்சேன்.
வெற்றிப் பாதை!
பெண் வாடிக்கையாளர்கள் விசேஷங்களுக்குச் செல்லும் போது புடவைக்குப் பொருத்தமான பூக்களை வாங்குவாங்க. ஒருமுறை ஒரு பெண் எதிர்பார்த்த கலரில் எந்தப் பூவும் என்கிட்ட கைவசம் இல்லை. அந்த கஸ்டமர் அதிருப்தியடைய, எனக்கு ரொம்பவே வருத்தம். வெளிநாட்டில் வாங்கிய ஃப்ளவர் கலர் ஸ்பிரேயர் இருந்தது. அதைக்கொண்டு கைவசம் இருந்த பூ மீது ஸ்பிரே மற்றும் கை வேலைப்பாடுகள் செஞ்சு அந்தப் பெண் கேட்ட கலரில் பூக்களை உருவாக்கினேன். பிறகு, அதுபோன்ற புடவை மேட்சிங் பூக்களுக்கான வரவேற்பு அதிகமானது.
தவிர, அலங்கார சீர்வரிசை தட்டு டெகரேஷன் மற்றும் விற்பனையிலும் ஈடுபட்டேன். இப்படி ஒரேநேரத்துல பலவிதமான ஆர்டர்களை செய்துகொடுத்தேன். ஓய்வில்லாத அளவுக்குத் தொழில் வேகமா வளர்ந்தது. எந்த நேரமும் பிசினஸ் சிந்தனைதான். சரியான வேலையாட்களும் அமைஞ்சதால, சில ஆண்டுகளிலேயே வெற்றிப் பாதைக்குத் திரும்ப முடிந்தது.
2002-ல் எனக்குக் கல்யாணமானது. என் பிசினஸ் பயணத்துல இணைந்த கணவர் லஷ்மணன், நிறுவன வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.
இந்திய அளவிலான நிலவரம் தெரியலை. ஆனா, தமிழக அளவில் புடவை மேட்சிங் பூக்கள் விற்பனையை முதலில் தொடங்கியது நான்தான். அந்தத் தருணத்துல பூக்களைக்கொண்டு, பல்வேறு நிற ஃப்ளவர் ஸ்பிரேயரைப் பயன்படுத்தி புடவை மேட்சிங் பூக்களை உருவாக்கினேன். பெண்கள் பலரையும் தொழில்முனைவோராக்கும் நோக்கத்துல, புடவை மேட்சிங் பூக்களுக்கான செய்முறைப் பயிற்சி கொடுக்க முடிவெடுத்தேன். `பயிற்சி கொடுத்தா உனக்குப் போட்டியா பலர் உருவாகி, உன் பிசினஸ் பாதிக்கும்’னு பலரும் சொன்னாங்க. ஆனா, என் முடிவில் உறுதியா இருந்தேன். பலநூறு பெண்களுக்குப் பயிற்சி கொடுத்தேன். புடவை மேட்சிங் பூக்களுக்கான வரவேற்பும் தயாரிப்பும் தமிழகம் முழுக்க பிரபலமானது.
எனக்குள் எழும் கேள்வி!
ஈவென்ட் டெகரேஷன், பொக்கே உள்ளிட்ட பூக்கள் விற்பனை, புடவை மேட்சிங் பூக்கள் விற்பனைன்னு ஒன்றின் மூலம் மற்றொரு தொழில் பிரபலமானது. என் பிசினஸ் மாநில எல்லைகளைக் கடந்து வேகமா வளர்ந்தது. ஒரே தொழில்நுட்பத்தை மட்டுமே எப்போதும் நம்பியிருக்கக் கூடாது. அதனால, அஞ்சு வருஷத்தோட பயிற்சி கொடுப்பதை நிறுத்திட்டு புதிய தொழில் பாதைகளை நோக்கிப் பயணிக்க ஆரம்பிச்சேன். என் தொழில்களுக்காக ஆறு மாடி சொந்தக் கட்டடம் கட்டினோம். ஃப்ளவர் டெகரேஷன் உட்பட நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்தின் உள் மற்றும் வெளி அலங்கார ரெக்கரேஷன் வேலைகள் அனைத்தையும் செய்து கொடுக்க ஆரம்பிச்சேன். `எல்லோரும் செய்யறதுபோலவே டெகரேஷன் செய்ய நாம எதற்கு?’ - இந்தக் கேள்வியுடன்தான் என்னோட ஒவ்வொரு ஆர்டரிலும் வேலை செய்வேன்.
டிரெடிஷனலாவும் மாடர்னாவும் தனித்துவமா எல்லா ஆர்டரிலும் வேலை செய்வோம். இதற்காக, வெளிநாடுகளிலிருந்து தொடர்ந்து பல்வேறு வகையான மலர்களை இறக்குமதி செய்கிறோம். ஒருமுறை நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் திடீர்னு பூக்களின் விலை பலமடங்கு அதிகமாகிடுச்சு. திட்டமிட்டபடி ஃப்ளவர் வேலைகளை செய்து முடிச்சதுல எனக்கு மூணு லட்சம் ரூபாய் நஷ்டம். என் சிரமத்தை வாடிக்கையாளர் மேல திணிக்க மனமில்லாமலும், நல்ல காரியத்தில் நஷ்டமாகிடுச்சுன்னு அபசகுணமா பேசக் கூடாதுங்கிறதாலும் எதுவும் சொல்லலை. எதிர்பார்ப்புக்கும் அதிகமாகவே அந்த ஆர்டரில் வேலை செய்ததால மகிழ்ச்சியடைந்த அந்த வாடிக்கையாளர், கல்யாண ஆர்டரையும் எனக்கே கொடுத்தார். அதனால கிடைச்ச லாபத்தில் படிப்படியா முந்தைய நஷ்டத்தை ஈடு செஞ்சேன். இப்படியான சம்பவங்கள் அவ்வப்போது நடக்கும். ஆனாலும், எனக்கான கொள்கையிலிருந்து விலகிச்செல்லாமல் பிசினஸை நடத்திட்டிருக்கேன்.
கலங்காத உள்ளம்!
ஈரோடு பகுதியில் ஃப்ளவர் பொக்கே பயன்பாட்டுக்கான வரவேற்பு இப்போ அதிகமாகிடுச்சு. வெளியூர், வெளிமாநில, வெளிநாட்டு ஆர்டரையும் எடுக்கிறோம். இன்றைக்கும் புடவை மேட்சிங் பூக்கள் மற்றும் அலங்கார சீர்வரிசை தட்டுகள் தயாரிப்பிலும் ஈடுபடுகிறேன். நாங்க நடத்தும் ஈவென்ட் டெகரேஷன் நிகழ்ச்சி எங்க நடந்தாலும், பெரும்பாலும் நான் நேரில் போய் ஊழியர்களை உற்சாகப்படுத்துவேன்.
`எங்க பட்ஜெட்டுக்கு ஏற்ப நீங்களே டிசைன் செய்து, சிறப்பா பண்ணிக்கொடுத்திடுங்க’னு நிறைய வாடிக்கையாளர்கள் சொல்வாங்க. இந்த நம்பிக்கையைத் தொடர்ந்து தக்க வெச்சிருக்கிறதுதான் எங்க நிறுவனத்தின் பெருமை. ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்னைகளை எதிர்கொள்வோம். அதையெல்லாம் புதிய வாய்ப்புகளாகவே பார்ப்போம். அதனால, எந்தப் பிரச்னையைக் கண்டும் கலங்கி உட்கார மாட்டேன். இன்றும் பிசினஸுக்காக ஒருநாளைக்கு 20 மணிநேரம் உழைக்கிறேன். தனித்தன்மை, கிரியேட்டிவிட்டி, காலமாற்றத்துடன் இணைந்து பயணிக்கிறதால வெற்றியைத் தொடர்ந்து வசப்படுத்த முடியுது!''
40 ஊழியர்கள்... பல கோடி டர்ன் ஓவர்!

திருமணம், நிச்சயதார்த்தம், கிரஹப்பிரவேசம், பல்வேறு நிறுவன நிகழ்ச்சிகள் உட்பட ஆண்டுக்கு 100 - 150 பெரிய நிகழ்ச்சிகளுக்கான டெகரேஷன் ஆர்டர்களை செய்துவருகிறார் காந்திமதி. அக்கா சிவகாமியுடன் பார்ட்னராக இணைந்து, `வைபவா’ என்ற தனி நிறுவனத்தையும் நடத்துகிறார். இந்த நிறுவனத்தின் மூலம், சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட்டில் ஆண்டுக்கு 100 - 150 நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். ஒவ்வொரு ஆர்டருக்கும் 200-க்கும் அதிகமான பகுதி நேரப் பணியாளர்களைப் பயன்படுத்துகிறார்.
40 ஊழியர்களுக்கு முதலாளியான காந்திமதி, ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்கிறார்.
இதுதான் பிராசஸ்!
வாடிக்கையாளர்கள் எங்கள் அலுவலகத்துக்கு நேரில் வந்து அவங்க தேவைகளைச் சொல்வார்கள். தேவைப்பட்டால் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு நேரில் செல்வோம். பிறகு, ஆலோசனை செய்து, பட்ஜெட் அடிப்படையில் ஆர்டரை உறுதிசெய்து அந்த புராஜெக்ட்டுக்குப் பெயர் வைப்போம்.
வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பு மற்றும் நிகழ்ச்சிக்கு வரக்கூடிய விருந்தினர்களின் ரசனைக்கேற்ப டெகரேஷன் உள்ளிட்ட எங்களுடைய வேலைகள் அனைத்தையும் செய்வோம். நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்கள் எங்கள் வாடிக்கையாளரிடம் சென்று, `நிகழ்ச்சி ஏற்பாடுகள் சூப்பர்!’ எனச் சொல்ல வைப்பதே எங்கள் இலக்கு.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்துக்கும் நான் டிசைன் செய்து கொடுப்பேன். அதை, எங்க அலுவலக நிர்வாக மற்றும் செயல்படுத்தும் குழுவினர் செய்து முடிப்பார்கள்.
நிறுவன செயல்பாடுகள் மற்றும் ஒவ்வொரு ஆர்டர் செயல்பாடுகளும் `5S’ எனப்படும் ஜப்பானிய செயல்முறையின் மூலம்தான் நடக்கும்.
நிகழ்ச்சி முடிந்தபிறகு கஸ்டமரிடம் ஃபீட்பேக் கேட்போம். பிறகு, ஒவ்வொரு கஸ்டமர் வீட்டு நிகழ்ச்சியையும் எப்படித் திட்டமிட்டு நிறைவு செய்தோம் என்பதை வீடியோவாக எங்கள் நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிடுவோம்.
என் அனுபவத்திலிருந்து...
புதிதாகத் தொழில் தொடங்கினால், மக்களிடம் நாம் பரிச்சயமாக, குறிப்பிட்ட காலம் தேவைப்படும். எனவே, ஆண்டுக்கு இவ்வளவு வருமானம் கிடைக்கும் என்ற முன்திட்டமிடலுடன் தொழிலைத் தொடங்கினால் ஏமாற்றமே கிடைக்கும். தொழில், வளர்ச்சிப் பாதைக்குச் செல்லும்வரை நிதானமும் பொறுமையும் அவசியம்.
நம் தொழில், மக்களின் தேவைக்கு அல்லது பிரச்னைக்குப் பயன்தரக்கூடியதாகவும் தீர்வு காணும் வகையில் இருந்தாலும்தான் நீண்டகால வளர்ச்சியைப் பெற முடியும்.
எங்களுடைய கஸ்டமருக்கு எந்த நெருக்கடிகளையும் கொடுக்காமல் எல்லா வேலைகளையும் சரியாகச் செய்து முடித்து, அவர்களை விருந்தினர் போல ரிலாக்ஸ்டாக உணர வைக்கிறோம். இதுபோன்ற அணுகுமுறையைத் தொழில்முனைவோர் அனைவரும் கடைப்பிடித்தால் வெற்றி நிச்சயம்!