
ஆட்டோமொபைல்
பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், கடந்த அக்டோபர் 31 வரை மோட்டார் கார்கள் மற்றும் பஸ்கள் உள்ளடக்கிய மின்சார மோட்டார் வாகனங்களின் பதிவு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் (VAHAN) தேசிய வாகன இ-பதிவு சேவையின் தரவுகளின்படி, 2021-ம் ஆண்டு பதிவு செய்யபட்ட வாகனங்களின் எண்ணிக்கை 13,884-ல் இருந்து இந்த ஆண்டு 31,281 வாகனங்களாக உயர்ந்துள்ளது. இது 125% வளர்ச்சி.
2021-ல் 10,200 ஆக இருந்த டாடா கார் களின் பதிவு, இந்த ஆண்டு அக்டோபர் 31 வரை இரண்டரை மடங்காக அதிகரித்து 25,795-ஆக உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஆண்டு 161 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்றது; இந்த ஆண்டு அக்டோபர் வரை 426 கார்களை விற்றுள்ளது.

பி.ஒய்.டி (BYD) நிறுவனம் கடந்த ஓராண்டாகதான் எலெக்ரிக் கார்களை விற்கத் தொடங்கியது. அதற்குள் 339 கார்களை விற்றுவிட்டது. மஹிந்திரா நிறுவனம் 11 எலெக்ட்ரிக் கார் களைக் கடந்த ஆண்டு விற்றது. இந்த ஆண்டு 271 எலெக்ட்ரிக் கார்களை விற்றுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருக்கிறது. கடந்த அக்டோபர் வரையில் 68,424 இரு சக்கர மின் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 29% அதிகம்.
எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அதிகம் விற்ற நிறுவனங்களின் பட்டியலில் ஓலா எலெக்ட்ரிக் (15,095), ஒகினாவா (11,754), ஆம்பியர் (8,812), ஹீரோ எலெக்ட்ரிக் (8,014), ஏதர் (6,976), டி.வி.எஸ். (5,205), பஜாஜ் ஆட்டோ (1,265) உள்ளன.
இனிவரும் நாள்களில் எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் விற்பனை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.