
சக்சஸ் ஸ்டோரி
ஒரே நாளில் பில்லியனராவது எத்தனை பெரிய மாற்றம்..! அப்படிப்பட்ட அதிசயிக்கத்தக்க மாற்றம் ஃபல்குனி நாயருக்கு வாய்த்திருக்கிறது.
அழகு, ஆரோக்கியம், ஃபேஷன் சம்பந்தப் பட்ட பொருள்களை ஆன்லைன் மற்றும் ரீடெய்ல் கடைகள் வாயிலாக விற்பனை செய்துவரும் `நைகா’ நிறுவனத்தின் பங்கு, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளன்றே சுமார் 80% வரை அதிகரித்ததைத் தொடர்ந்து, அதன் நிறுவனரான ஃபல்குனி நாயரின் சொத்து மதிப்பு ரூ.48,405.50 கோடியாக அதிகரித்துள்ளது. புதிய பங்கு வெளியீட்டின் மூலம் சொந்த முயற்சியில் பில்லியனரான பெருமையை ஃபல்குனி நாயர் பெற்றது மட்டுமல்லாமல், ஓரே நாளில் இந்தியாவின் பெண் பணக்காரர்கள் பட்டியலிலும் இடம்பெற்றுவிட்டார்.

இந்த நிறுவனப் பங்கின் விலை கணிசமாக அதிகரித்ததையடுத்து, இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.04 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. இதன் காரணமாக பிரிட்டானியா, கோத்ரேஜ், இண்டிகோ போன்ற ஜாம்பவான் நிறுவனங் களின் சந்தை மதிப்புடன் தற்போது `நைகா’ ஒப்பிடப்படுகிறது. 2012-ம் ஆண்டு வரையில் ‘கோட்டக் மஹிந்த்ரா கேப்பிடல்’ என்கிற இந்தியாவின் முன்னணி முதலீட்டு வங்கியில் 18 ஆண்டுக் காலம் தலைவராகப் பணியாற்றியவர் ஃபல்குனி நாயர். 2012-க்குப் பிறகு, தொழிலதிபராக வேண்டும் என்ற கனவை நிறைவேற்றுவதற்காக `நைகா’ நிறுவனத்தைத் தொடங்கினார். அன்று முதல் இன்று வரை அவர் தலைமையிலான `நைகா’ நிறுவனம், ஆன்லைன் வர்த்தகத்தில் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்ததுடன் இந்தியாவில் மிக முக்கியமான பியூட்டி பிராண்டாகவும் உருவெடுத்துள்ளது. ஆன்லைன் தவிர, தற்போது 70 நேரடி விற்பனைக் கடைகளை இந்தியா முழுவதும் கொண்டுள்ளது `நைகா’.
வித்தியாசமாக யோசித்தால் வெற்றிதான்!