
மூலிகை நாப்கின்கள் தயாரிக்கிறது பத்தி கத்துக்கிட்டேன். கையாலேயே தயாரிச்சு, மருத்துவ கவுன்சில் பரிசோதனைக்கு அனுப்பி, அப்ரூவல் வாங்கினேன்.
``மூணு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு உடம்பு சரியில்லாம போனப்போ, அதுக்குக் காரணம் நான் பயன்படுத்தின, ரசாயனங் களால் தயாரான நாப்கின்கள்தான்னு புரிஞ்சது. அதை விடுத்து பருத்தி மற்றும் மூலிகை நாப்கினுக்கு மாறினதுக்கு அப்புறம் என் பிரச்னை சரியாச்சு. அதிலிருந்துதான் மூலிகை நாப்கின் பிசினஸை நான் ஆரம்பிக் கிறதுக்கான ஐடியா கிடைச்சது’’ - சுய தொழில்முனைவோருக்கான தைரியத்துடனும் தெளிவுடனும் பேசுகிறார், ராமநாதபுரத்தை சேர்ந்த ஷர்மிளா பேகம். ஒன்பது வகையான மூலிகைகளைக் கொண்டு இவர் தயாரிக்கும் நாப்கின்கள், இன்று வெளிநாடு வரை விற்பனையாகின்றன.
ஷர்மிளா வீட்டின் இரண்டாவது மாடியில், ஐந்து பெண்கள் வட்டமாக அமர்ந்து பரபரப் பாக நாப்கின்களை தயாரித்துக்கொண்டிருந் தனர். ``இதுதான் சார் என் குட்டி ஃபேக்டரி’’ என்று சிரித்தவர் அது உருவான கதையை பேச ஆரம்பித்தார். ‘`என் கணவர் தனியார் நிறுவனத்துல வேலை பார்க்கிறார். ரெண்டு மகன்களும் வெளியூர்ல மேற்படிப்பு படிக் கிறாங்க. மூணு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, ஆஸ்பிட்டல் அட்மிஷன் அளவுக்கு போச்சு. நான் பயன்படுத்தின நாப்கினால ஏற்பட்ட பிரச்னை அதுன்னு சொன்ன டாக்டர், அது பற்றி விளக்கினாங்க. `ரசாயன வகை நாப்கின் கள்ல உறிஞ்சும் தன்மைக்காக சேர்க்கப்படுற `எஸ்.ஏ.பி' (SAP Super Absorbent Polymers - SAP), கர்ப்பப்பை புற்றுநோய் வரை ஏற்படுத்தக் கூடியது. மேலும் மெலிதான வடிவமைப்புக்காக வும், வாசனைக்காகவும் இதில் சேர்க்கப்படுற ரசாயனங்கள், நறுமணங்கள் எல்லாம் பெண் ணுறுப்பிலும், கர்ப்பப்பையிலும் பல பிரச்னை களை ஏற்படுத்தக்கூடியது. பயன்படுத்த வசதியா இருக்குனு இந்தக்காலப் பெண்கள் இதையே விரும்புறாங்க, உடம்பை கெடுத்துக் கிறாங்க’னு டாக்டர் சொன்னாங்க.
`இதுக்கு என்னதான் மாற்றுவழி டாக்டர்’னு நான் கேட்டப்போ, `காட்டன் நாப்கின்கள் பயன்படுத்தலாம். பிறப்புறுப்பில் நாப்கின் களால பிரச்னைகளை சந்திக்கிறவங்க, மூலிகை நாப்கின்கள் பயன்படுத்தலாம்’னு சொன்னாங்க. அவங்க சொன்ன மாதிரி, நானே மூலிகைகளை அரைச்சு பருத்தி துணி யில வெச்சு நாப்கினா பயன்படுத்தினேன். பிரச்னைகள் நீங்குச்சு, ஆரோக்கியம் மேம் பட்டுச்சு. எனக்குத் தெரிஞ்ச பெண்கள்கிட்ட எல்லாம், ‘ரசாயன நாப்கின்களை தவிர்த்துடுங்க, நீங்களும் இந்த மாதிரி செஞ்சு பயன்படுத்துங்க’னு சொன்னேன். யாரும் கேக்கல. உடம்பை கெடுத்துக்கிறாங்களேனு வருத்தமா இருந்துச்சு. அப்போதான் என் மகள்கள், ‘மூலிகை நாப்கினுக்கு அவங்க எதிரா இருக்காங்கனு இல்ல. ஆனா, உன்னை மாதிரியெல்லாம் யாரும் மெனக்கெட்டு இதை செய்ய மாட்டாங்க, அவங்களுக்கு அதுக்கு நேரமும் இல்ல. நீ செஞ்சு கொடுத்தா வேணும்னா வாங்கிப் பயன்படுத்துவாங்க’னு சொன்னாங்க. அப்போதான் இதை பிசினஸா செய்யும் ஐடியா எனக்கு வந்துச்சு’’ என்றவர், பிசினஸுக்கு போட்ட கியர்கள் பற்றி சொன்னார்....
``மூலிகை நாப்கின்கள் தயாரிக்கிறது பத்தி கத்துக்கிட்டேன். கையாலேயே தயாரிச்சு, மருத்துவ கவுன்சில் பரிசோதனைக்கு அனுப்பி, அப்ரூவல் வாங்கினேன். ஆரம்பத்துல எனக்குத் தெரிஞ்ச பெண்கள்கிட்ட ரசாயன நாப்கின்கள்ல ஒளிஞ்சிருக்குற ஆபத்தையும், மூலிகை நாப்கின்களோட நன்மைகளையும் எடுத்துச் சொல்லி வீடு வீடா விற்பனை செஞ் சேன். அதை பயன்படுத்தினவங்க எல்லாரும், நல்ல வித்தியாசத்தை உணர்ந்தாங்க. அதனால அவங்க தங்களுக்குத் தெரிஞ்ச பெண்களுக்கும் இதை பரிந்துரை செய்ய, வியாபாரம் கொஞ்சம் கொஞ்சமா விரிவடைந்தது. ஒரு சில கடைகள்ல இதை பத்தி கேள்விப்பட்டு, அவங்களே வந்து என்கிட்ட ஆர்டர் கொடுத் தாங்க. ஆனா, அந்த எண்ணிக்கையை கையால தயாரிக்கிறது எனக்குக் கஷ்டமா இருந்தது.
திருவாரூர்ல, நாப்கின் தயாரிக்கிற மெஷின்கள் நாலு வாங்கினோம். இன்னிக்கு ஒரு நாளைக்கு 1,000 நாப்கின்கள் தயாரிக்கிற அளவுக்கு தொழில் முன்னேறியிருக்கு. எங்க தெருவில் உள்ள பெண்களுக்கு வேலைவாய்ப் பும் ஏற்படுத்தித் கொடுத்துருக்கேன். லார்ஜ் (Large), எக்ஸ்ட்ரா லார்ஜ் (Extra large), லைனர் நாப்கின் (liner napkin), டெலிவரி நாப்கின்னு (Delivery napkin) நான்கு விதமான மூலிகை நாப்கின்கள் தயாரிக்குறோம். வேப்பிலை, துளசி, சோற்றுக்கற்றாழை, கழச்சிக்காய் பொடி உள்ளிட்ட ஒன்பது வகையான மூலிகைகளை நாங்களே தயார் செய்றோம். சில மூலிகைகள் கிடைப்பது மிகவும் சிரமமா இருந்தது. பின்னர் திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் மூலிகைகளை பதப் படுத்தி விற்பனை செய்யப்படுவதை அறிந்து, அங்க மூலிகைகளை வாங்கி, அரைத்து, நாப்கின்கள் தயார் செய்றோம்’’ என்பவரின் நாப்கின்களுக்கு வெளிநாடுகள் வரை கஸ்டமர்கள் உள்ளனர்.
``ஒருவர் பரிந்துரைத்து ஒருவர் வந்து சேர்ந்துனு... இப்படித்தான் கஸ்டமர்கள் வட்டம் உருவானது. இப்போ மதுரை, திண்டுக்கல், சென்னை, திருநெல்வேலி, திருவாரூர், கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் வரை விற்பனை செய்றோம். அதுமட்டு மில்லாம, மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகள் வரை கஸ்டமர்கள் இருக்காங்க. சந்தைகளில் விற்கும் மெல்லிய ரக நாப்கின் களை விட எங்களோட மூலிகை நாப்கின்கள் விலை சற்று அதிகம். `கெடுதல் தர்ற பொருளையே அந்த விலைகொடுத்து வாங்கிட்டு இருந்தோம். நல்லது செய்யுற பொருளை அதுக்கும் அதிக விலைகொடுத்து வாங்க யோசிக்கலாமா...’னு கஸ்டமர்கள் புரிஞ்சுக்கிட்டு எங்களுக்குத் துணையா இருக்காங்க. அந்த வகையில இது பெண்கள் தந்த வெற்றி. வர வர ஆர்டர்கள் அதிகரிச் சுட்டேதான் இருக்கு. மாசம் 50,000 ரூபாய் வரை வருமானம் பார்க்குறோம். லாப நோக்கத்தோடு பிசினஸ்ல எதையும் கமர் ஷியலா யோசிக்க மாட்டோம். வாடிக்கை யாளர்களின் ஆரோக்கியம்தான் முக்கியம்’’ - தன் குழுவினருடன் நிறைவாகப் புன்னகைக் கிறார் ஷர்மிளா பேகம்.