உலகம் முழுவதிலும் உள்ள இளம் தலைமுறையைச் சேர்ந்த முதல் 100 கோடீஸ்வர்களின் பட்டியலை டைம் இதழ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியிட்ட பட்டியலில், ரிலையன்ஸ் ஜியோ தலைவர், பில்லியனர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர் அவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க வணிகத் தலைவரான அம்ரபாலி கான் என்பவரும் இந்தப் பட்டியலில் உள்ளார்.
வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, அரசியல், உடல்நலம், அறிவியல் மற்றும் எதிர்காலத்தை வடிவமைக்கும் வளர்ந்து வரும் 100 தலைவர்களை இந்தப் பட்டியல் எடுத்துக்காட்டுகிறது என டைம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பட்டப்படிப்பை முடித்தவர். வாரிசு அடிப்படையில் நிறுவனப் பதவிகளைப் பெற்றாலும், குழுமத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அவர் கடுமையாக உழைத்து வந்தார்.

இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவின் இயக்குநர் பதவியில் கடந்த ஜூன் மாதம் ஆகாஷ் அம்பானி பதவி உயர்வு பெற்றார். இவர் 22 வயதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் போர்டில் இடம்பெற்றார்.
நான்கு கோடிக்கு மேல் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள ஜியோ நிறுவனத்தின் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை கையாள்கிறார் என்று டைம் நெக்ஸ்ட் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியத் தொழிலதிபர் முகேஷ் வாரிசான ஆகாஷ் அம்பானி, வணிகத்தில் உயருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்காகத் தனது வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தார்.
கூகுள் மற்றும் ஃபேஸ்புக்கில் இருந்து பல பில்லியன் டாலர் முதலீடுகளில் நிறுவனத்துக்குள் கொண்டு வர அவர் முக்கியமான பங்கு வகித்தார் என்று டைம்ஸ் இதழ் ஆகாஷ் அம்பானியைப் பாராட்டியுள்ளது.