பரீட்சை என்பது தேவையான தீமை என்பது போல, கடன் வாங்குவது சரியல்ல என்றாலும், இன்றைய தேதியில் கடன் வாங்காமல் இருப்பது கடினமாகிவிட்டது. கடன் என்பது பல கோடிக்கணக்கான மக்களுக்கு அன்றாடத் தேவைகளை முன்கூட்டியே வாங்கி அனுபவிப்பதற்கு உதவுகிறது.
நம் மக்கள் எல்லாவற்றையும் இன்றே அனுபவிக்க ஆசைப்படுகிறார்கள். மேலும், நம்மைப் போன்ற வளரும் பொருளாதாரத்தில் கடன் வாங்குவது எப்போதும் அதிகமாகவே இருக்கும். ஆகவே, நம்மவர்களில் பலர் கடன் வாங்க ஆசைப்படுவதில் ஆச்சர்யமே இல்லை!

கனவு... தேவை... கடன்
நமது ஜி.டி.பி-யுடன் ஒப்பிடும்போது, இந்திய குடும்பங்களின் கடன் 11.30 சதவிகிதமாக இருந்தது 10 ஆண்டுகளுக்கு முன்பு. இப்போது அது கணிசமாக உயர்ந்திருக்கிறது.
முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு சில லட்சம் ரூபாய் கொடுத்து கார் வாங்குவது பெரிய கனவாக இருந்தது. இன்றோ பல லட்சங்கள் தந்து, நம் இளைஞர்கள் கார் வாங்குகிறார்கள். கணவன், மனைவி இருவரும் வேலை செய்யும் பட்சத்தில் ஆளுக்கொன்று என இரு கார்கள் வைத்துக்கொள்கிறார்கள். இது போதாதென்று பல இளைஞர்களின் இன்றையக் கனவு எம்.பி.ஏ (MBA – Mercedes Benz, BMW, Audi) வகையிலான விலை உயர்ந்த கார்களைத்தான்!
அதுபோல, பல நடுத்தரக் குடும்பங்களின் மிகப் பெரிய ஆசை தங்களது குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்தல், நல்ல கல்வி கிடைத்தால், தாங்கள் பட்ட கஷ்டங்களைத் தங்களது குழந்தைகள் படாது என்னும் அசராத நம்பிக்கையே இதற்குக் காரணம். இதற்கும் பல குடும்பங்கள் கடனை நாட வேண்டியுள்ளது.
இன்றைக்கு வெளிநாடு டூர் செல்ல வேண்டும் என்பது இன்னும் பல நடுத்தரக் குடும்பங்களின் கனவாகும்!
இந்தத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பணம் தேவை. பணம் அதிகமாக வைத்திருப்பவர்கள் அல்லது முன்கூட்டியே திட்டமிட்டிருப்பவர்கள், கையில் இருக்கும் பணத்தைக் கொடுத்து, தங்களது எதிர்காலக் கனவுகளைப் பூர்த்தி செய்துகொள்வார்கள். பணம் கையில் இல்லாதவர்கள் கடன் வாங்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
கடன் வழங்கும் நிறுவனங்கள்
கடன் தரும் நிறுவனங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
வங்கிகள்: பொதுவாக, வங்கிகள் நன்றாக வடிகட்டிய பின்புதான் கடன் கொடுக்கும். அதேசமயம், அதற்கான வட்டி விகிதமும் இருப்பதிலேயே குறைவாக இருக்கும். வங்கிகளுக்குள் ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் போன்ற பெரிய வங்கிகளின் கடன் வட்டி விகிதம், சிறிய வங்கிகளின் வட்டி விகிதத்தைவிட குறைவாக இருக்கும்.

ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள்/ வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (NBFC – Non Banking Financial Companies): சிறிய ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனங்களின் வட்டி விகிதம் இருக்கும். இவற்றின் வட்டி விகிதம், வங்கிகளைவிட கூடுதலாக இருக்கும். அதேசமயம், பிராசஸிங் சற்று இலகுவாக இருக்கும். இந்த வகைக்குள், சற்று பெரிய நிறுவனங்கள் குறைவான வட்டிக்குக் கடன் தருவார்கள். சிறிய நிறுவனங்கள் சற்று அதிக வட்டிக்குக் கடன் கொடுப்பார்கள்.
தனிநபர்கள்: இவர்களிடம் கடன் வாங்கும்போது வட்டி விகிதம் மேற்கண்ட இரண்டு கேட்டகிரியையும்விட அதிகமாக இருக்கும். அதேசமயம், கடன் வாங்குவதும் மிக மிக எளிதாக இருக்கும். இந்த மூன்று கேட்டகிரியையும் கடன் வாங்குபவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
கடன் கேட்கும்முன்...
வங்கிகளில் நீங்கள் கடன் கேட்கச் செல்லும்போது என்னென்னவற்றை அவர்கள் அலசி ஆராய்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
1. முதலில், உங்களின் அடையாளம் மற்றும் முகவரிச் சான்று. அனைத்துவிதமான சான்றுகளிலும் (பான் கார்டு, பாஸ்போர்ட், ஆதார் கார்டு, வோட்டர் ஐ.டி, வங்கிக் கணக்குகள் மற்றும் பிற ஆவணங்கள்) உங்களின் பெயரை ஒரே மாதிரி வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் முகவரி மாறியிருந்தால், அதை உங்களது சான்றுகளில் உடனடியாக மாற்றிக்கொள்ளுங்கள். அனைத்து ஆவணங்களிலும் முகவரி ஒரே மாதிரியாக இருப்பது நல்லது.

2. உங்களின் வருமான வரிக் கணக்குத் தாக்கலைக் குறைந்தது மூன்று வருடங்களுக்குக் கேட்பார்கள். நீங்கள் வேலை செய்து வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர் என்றால், உங்களின் கடந்த மூன்று வருடப் படிவம் 16-ஐ கேட்பார்கள். அது உங்களிடம் இல்லையென்றால், நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்திடம் கேட்டு வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வாங்கும் சம்பளச் சான்றிதழையும் கேட்பார்கள் என்பதால், அதையும் தயாராக வைத்திருப்பது அவசியம்.
3. கடந்த மூன்று அல்லது ஆறு மாத வங்கிக் கணக்கின் ஸ்டேட்மென்டினைக் கேட்பார்கள். அதில், உங்கள் வருமானம் எங்கிருந்து வருகிறது, தொடர்ந்து வருமானம் வருகிறதா, வந்த பணம் எங்கு செல்கிறது என்பதையெல்லாம் ஆராய்வார்கள். மேலும், வேறு எந்தெந்தக் கடனுக்கு நீங்கள் இ.எம்.ஐ செலுத்துகிறீர்கள் என்பதையும் பார்ப்பார்கள். இவையெல்லாம் போக, நீங்கள் புதிதாகக் கேட்கும் கடனைச் செலுத்த உங்களிடம் கூடுதலாகப் பணம் இருக்கிறதா என்பதை ஆராய்வார்கள். ஆகவே, உங்களுக்குக் கழுத்தளவு கடன் இருந்தால், மேலும் கடன் கேட்கச் செல்லாமல் இருப்பது நல்லது. முடிந்தவரை உங்களின் வரவு செலவுகளை வங்கிக் கணக்கு மூலம் கொண்டு வருவது நல்லது. உங்கள் வங்கிக் கணக்கில் அதிக டிரான்ஸாக்ஷன் இருக்கும்போது உங்களிடம் நல்ல கேஷ் ஃப்ளோ உள்ளதைக் காண்பிக்கும். அது கடன் கொடுப்பவர்களுக்கு நல்ல நம்பிக்கையைக் கொடுக்கும்.
கிரெடிட் ரிப்போர்ட்
வங்கிகள் உட்பட அனைத்துக் கடன் கொடுக்கும் நிறுவனங்களும் உங்களின் கிரெடிட் ரிப்போர்ட்டை முக்கியமாக ஆராய்கின்றன. கடன் வாங்காமலே இருப்பது நீங்கள் மிகவும் பாதுகாப்பானது என நினைப்பீர்கள். ஆனால், கடன் கொடுப்பவர்களோ, நீங்கள் கடந்த காலத்தில் கடன் வாங்கி ஒழுங்காகக் கட்டியிருக் கிறீர்களா என்பதை ஆராய விரும்புவார்கள். ஆகவே, ஓரிரு கடன்களை வைத்துக்கொள்வது நல்லது.
இதற்கு ஓர் எளிய வழி, ஒரு கிரெடிட் கார்டை வாங்கிக் கொள்ளுங்கள். உங்களின் சில செலவுகளை அதன்மூலம் கொண்டு வாருங்கள். அதற்கு அந்தந்த மாதங்களில் நேரம் தவறாமல் பணத்தைக் கட்டிவிடுங்கள். அது உங்களுக்கான ஒரு நல்ல கடன் வரலாற்றை உருவாக்கித் தரும். எப்போதாவது உங்களுக்குக் கடன் தேவைப்படும்போது, அந்த வரலாறு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

இந்தியாவில் கடன் குறித்த தகவல்களை வைத்திருக்கும் ஆறு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் மிகவும் பாப்புலரானது சிபில். இந்த நிறுவனம் கொடுக்கும் ஸ்கோரைப் பல நிதி நிறுவனங் களும் வங்கிகளும் பயன்படுத்திக்கொள்கின்றன. மைக்ரோ ஃபைனான்ஸ் ஏரியாவில் மிகவும் பாப்புலரான கிரெடிட் ஸ்கோர் நிறுவனம், க்ரிஃப் ஹைமார்க் (Crif highmark) ஆகும். இந்த நிறுவனங்கள் அனைத்தும் வருடத்துக்கு ஒருமுறை ஒவ்வொரு நபருக்கும் அவர்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டை இலவசமாகக் கொடுக்க வேண்டும் என நமது ரிசர்வ் வங்கி கட்டளை யிட்டுள்ளது. ஆகவே, அவ்வப்போது ஒருமுறை உங்களது கிரெடிட் ஸ்கோரை இலவசமாக வாங்கிப் பார்த்துக்கொள்வது நல்லது. அப்படிப் பார்க்கும்போது உங்களது பெயரில் வேறு யாராவது தவறுதலாகக் கடன் வாங்கி இருக்கிறார்களா என்பது தெரியவரும்.
கடன் வாங்கும் தகுதி
உங்களின் மாதாந்தர நிகர வருமானத்தில், உங்களின் வருமானத்தைப் பொறுத்து, 40% - 60% உங்களின் வீட்டுச் செலவுகளுக்குத் தேவைப்படும். எஞ்சிய தொகைதான் உங்கள் புதிய கடனை அடைக்க உதவும். ஆகவே, கடன் வாங்கச் செல்லும்முன் உங்களிடம் கடனைத் திருப்பிச் செலுத்த உபரி உள்ளதா என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இவை தவிர, உங்களின் கடன் வாங்கும் நோக்கமும் பரிசீலிக்கப்படும். வீடு வாங்குவதற்கு, கார் வாங்குவதற்கு வங்கிகள் சுலபமாகக் கடன் தரும். தனிநபர் கடன் என்றாலோ அல்லது அடமானக் கடன் என்றாலோ சற்று யோசிப்பார்கள். உங்களின் வருமானம் அபாரமாக இருக்கும்போது, யோசிக்காமல் கடன் தருவார்கள். ஆனால், உங்கள் வருமானம் குறைவாக இருந்தால் ஒருமுறைக்கு இருமுறை கடன் தர யோசிப்பார்கள்.

இவை தவிர, நீங்கள் வாங்கப்போகும் சொத்தைப் பொறுத்து ஆவணங்கள் தேவைப்படும். அதுபோல, நீங்கள் பிற நிறுவனங்களில் வாங்கியுள்ள கடன்களை, உள்ளது உள்ளபடி சொல்லிவிடுங்கள். நீங்கள் பொய் சொன்னால், உங்கள் கிரெடிட் ரிப்போர்ட் அதைக் காண்பித்துவிடும். ஆகவே, உண்மையைச் சொல்லிவிடுவது நல்லது.
கடன் கொடுக்கும் நிறுவனங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர், லிங்டுஇன் போன்ற சமூக வலைதளங்களில் உங்களைப் பற்றிய உண்மைகளைத் தேடுகின்றன. நீங்கள் ஒழுங்காகப் பணத்தை திருப்பிச் செலுத்தக்கூடியவரா என்பதை அவற்றின் மூலம் அறிந்துகொள்கின்றன. ஆகவே, சமூக வலைதளங்களில் உங்களைப் பற்றிய விஷயங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது.
மேலும், ஆன்லைன் நிறுவனங்கள் உங்களின் செல்போனை வைத்து உங்களை ட்ராக் செய்கின்றன. பெருவாரியான நிதி நிறுவனங்கள்/ வங்கிகள் நெகட்டிவ் லிஸ்ட் என வைத்துள்ளன. இந்தப் பட்டியலில் பொதுவாக, காவல் துறையினர், பத்திரிகை நிருபர்கள், வக்கீல்கள், அரசியல்வாதிகள் போன்றோர் அடங்குவர். மேலும், சில நகரங்களில் சில ஏரியாக்களில் வசிப்பவர்களுக்குக் கடன் கொடுக்கமாட்டார்கள். ஆகவே, நெகட்டிவ் லிஸ்ட்டில் அல்லது நெகட்டிவ் ஏரியாவில் நீங்கள் இருந்தால், கடன் வாங்குவதற்கு சற்றுக் கூடுதலாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன்
இன்று வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு அதிக வட்டியில் நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்கின்றன. அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் உங்களை வந்து பார்வையிடுகின்றனர். உங்களுக்கு கிரெடிட் ஸ்கோர் இல்லாதபோதும் உங்களுக்கு இந்த நிறுவனங்கள் கடன் தர முன்வருகின்றன. உங்களையும், உங்களின் அக்கம்பக்கத்தினரையும் இன்டர்வியூ செய்த பிறகு இந்த நிறுவனங்கள் உங்களுக்குக் கடன் தரும் முடிவை எடுக்கின்றன. உங்களிடம் இருக்கும் சொத்து மற்றும் சமூகத்தில் நன்னடத்தைப் போன்றவற்றை வைத்தும் இந்த நிறுவனங்கள் கடன் கொடுப்பதை முடிவு செய்கின்றன. ஒருவர் குடிகாரராக இருக்கும் பட்சத்தில், அவருக்குக் கடன் கொடுக்கும் நிறுவனங்கள் சற்று யோசிக்க ஆரம்பித்துவிடுவார். அதே சமயம், ஆர்வமாகத் தொழில் செய்பவர்களுக்கு, நிதி நிறுவனங்கள் ரிஸ்க் எடுத்து அதிகமான கடனை வழங்கத் தயாராக இருப்பதும் உண்மை.

தனிநபர் கடன்
நம்மில் பலரும் பல தேவைகளுக்காக பர்சனல் லோன் வாங்குகிறோம். பொதுவாக, நல்ல கிரெடிட் ஸ்கோர் இருப்பவர்களுக்குத்தான் பர்சனல் லோன் எளிதாகக் கிடைக்கும். இன்று வங்கிகள் நல்ல வாடிக்கையாளர்களுக்கு இந்த வகைக் கடனை மிகவும் சுலபமாக்கிவிட்டனர். ஏ.டி.எம்மில் விண்ணப்பித்து பர்சனல் லோன் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு இன்று நம் நாடு வளர்ந்துவிட்டது. ஆனால், வட்டி விகிதம் பிற கடன்களைவிட இதற்கு அதிகம். மேலும், தனிநபர் கடன் பெற விரும்புவோர், மேலே குறிப்பிடப்பட்ட ஆவணங்களை எடுத்துக்கொண்டு கடன் பெறவுள்ள வங்கியை நாடலாம்.