
கேள்வி - பதில்

எனக்கும் என் மனைவிக்குமாகச் சேர்த்து ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி ஒன்று இருக்கிறது. எனக்கு மட்டும் தனியாக ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியும் இருக்கிறது. தற்போது எனக்கு பைபாஸ் ஆபரேஷன் செய்ய வேண்டியுள்ளது. இந்த நிலையில், என்னிடமுள்ள இரண்டு பாலிசிகளின் மூலமும் நான் எப்படி க்ளெய்ம் பெறலாம்?

ரங்கராஜன், திருநின்றவூர், சென்னை
ஆர்.குருராஜன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர், இன்டகிரேட்டட் இன்ஷூரன்ஸ்
“ஏற்கெனவே ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துவிட்டு, இரண்டாவதாக இன்னொரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்கும்போது, முதலில் எடுத்த பாலிசியின் விவரங்களைச் சமர்ப்பித்து, தெரிவித்திருந்தால் மட்டுமே இரண்டு பாலிசிகளிலிருந்தும் இழப்பீட்டுத் தொகையை க்ளெய்ம் செய்ய முடியும்.
அப்படி நீங்கள் செய்திருக்கும்பட்சத்தில், முதலில் எடுத்த பாலிசி மூலம் க்ளெய்ம் செய்யலாம். அந்த பாலிசி மூலமான முழுத் தொகையைப் பெறுவதற்கான மருத்துவ விவரங்களைச் சமர்ப்பிக்கலாம். அதன்பின், முதல் பாலிசியில் க்ளெய்ம் செய்த அனைத்து விவரங்களையும், அதற்காக அளித்த நகல்களையும் சமர்ப்பித்து, கூடுதலாக எவ்வளவு தொகை க்ளெய்ம் செய்யவேண்டியுள்ளதோ, அந்தத் தொகையை இரண்டாவது பாலிசியின் மூலம் க்ளெய்ம் செய்யலாம்.’’

என்னிடம் உள்ள ரூ.7 லட்சத்தைக் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யத் திட்ட மிட்டுள்ளேன். இந்த ஃபண்டுகள் மூலமான வருமானத்துக்கு எப்படி வருமான வரி கட்ட வேண்டும்?
ப.மணி, பொள்ளாச்சி
எஸ்.சதீஷ்குமார், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்
“ரூ.2.50 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வருமான வரி எதுவும் கிடையாது. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5% வருமான வரி வசூலிக்கப்படும். ரூ.5 லட்சத் திலிருந்து ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 10% வரி வசூலிக்கப்படும்.
உங்களிடம் இருக்கும் ரூ.7 லட்சம் எப்படி வந்தது என்பதற்கான ஆதாரம் தேவைப்படும். அந்தத் தொகைக்கு வரி கட்டவில்லை என்றால், அதற்கு வரியைக் கட்டிவிட்டுப் பிறகுதான் முதலீடு செய்ய வேண்டும்.
கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளின் யூனிட்களை மூன்றாண்டுகளுக்குமுன் விற்பனை செய்தால், அதன் வருமானம் உங்கள் வருமானத் துடன் சேர்க்கப்பட்டு, மேலே குறிப்பிட்ட அடிப்படை வருமான வரம்புக்கேற்ப வரி கட்ட வேண்டும். மூன்றாண்டுகள் கழித்து விற்று லாபம் பார்த்தால், பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு லாபத்துக்கு 20% வரி கட்டினால் போதும்.”
தனியார் நிறுவனம் ஒன்றில் டீமேட் கணக்கு வைத்திருக்கிறேன். பங்கு மதிப்பு ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரைக்கும் ஆண்டுக் கட்டணம் ரூ.100 வாங்குகிறார்கள். ரூ.2 லட்சத்துக்கு மேல் ரூ.400 வாங்குகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள பங்குகளை வைத்திருந்தேன். அதில் ரூ. 2.10 லட்சம் மதிப்புள்ள பங்குகளை விற்றுவிட்டேன். இப்போது என் டீமேட் கணக்கில் ரூ.40,000 மதிப்புள்ள பங்குகள்தான் உள்ளன. இனி என்னிடம் டீமேட் கணக்குக் கட்டணம் வாங்குவார்களா?

கயல், சென்னை
ஏஆர். வாசுதேவன், மண்டல மேலாளர், சி.டி.எஸ்.எல்
“பி.எஸ்.டி.ஏ டீமேட் கணக்கில், 50,000 ரூபாய்க்குக் குறைவான மதிப்புள்ள பங்குகளுக்கு ஆண்டுக் கட்டணம் கிடையாது. எனவே, உங்களுடைய டீமேட் கணக்கிற்கு ஆண்டுக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
அதேநேரத்தில், ஒருவர் ஒரு டீமேட் கணக்கிற்கு மேல் வைத்திருந்தால் அவர் பி.எஸ்.டி.ஏ-க்கு தகுதி பெற மாட்டார். பொதுவாக ஆண்டுக்கட்டணத்தை நான்கு காலாண்டுகளாகப் பிரித்து, ஒவ்வொரு காலாண்டிற்கும் 25 ரூபாய் என்று கணக்கிட்டு வசூலிப்பார்கள். எந்தக் காலாண்டிலாவது உங்களுடைய பங்கு மதிப்பு 50,000 ரூபாயைத் தாண்டினால், அதற்கு 25 ரூபாய் கட்டணம் விதிக்கப்படும்.”

என் வயது 50. மொத்தமாக 2 லட்சம் ரூபாயை மூன்று மியூச்சுவல் ஃபண்டுகளில் பிரித்து ஆறு ஆண்டுகளுக்கு முதலீடு செய்துள்ளேன். கோட்டக் எமர்ஜிங் ஈக்விட்டி ஸ்கீம் - ரூ.50,000, ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு ஃபண்ட் - ரூ.30,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் எம்.ஐ.பி - ரூ.1,20,000 எனப் பிரித்து முதலீடு செய்துள்ளேன். எனது முதலீடு சரியா?
கிருஷ்ணா, காரைக்குடி
எஸ்.ராமலிங்கம், நிதி ஆலோசகர்
“உங்கள் போர்ட்ஃபோலி யோவிலுள்ள ஃபண்டுகள் கடந்த 1, 3, 5, 7 வருடங்களில் சிஏஜிஆர் (CAGR) லாபத்தொகையாக ஈக்விட்டி மிட் & ஸ்மால்கேப் ஃபண்டான கோட்டக் எமர்ஜிங் ஈக்விட்டி ஸ்கீம் (36.61, 17.96, 25.25, 20.15%), பேலன்ஸ்டு ஃபண்டான ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு ஃபண்ட் ( 26.43, 12.21, 19.00, 16.23%), கடன் சார்ந்த ஹைபிரிட் கன்சர்வேட்டிவ் ஃபண்டான ஆன ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் எம்.ஐ.பி ( 6.9, 7.17, 9.59, 9.33% ) என்ற விகிதங்களில் வழங்கி வந்துள்ளன.
முதலீட்டுக் காலம் ஆறு ஆண்டுகள் என்னும் போது ஐ.சி.ஐ.சி.ஐ புருடென்ஷியல் எம்.ஐ.பி ஃபண்டினை ஐ.சி.ஐ.சி.ஐ பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டிற்கு (1, 3, 5, 7 வருடங்களில் 17.39, 10.23, 14.09, 13.74% சி.ஏ.ஜி.ஆர் ஈட்டியுள்ளது) மாற்றிக்கொண்டால் மேலும் கொஞ்சம் லாபத்தை ஈட்டலாம்.”
தொகுப்பு : தெ.சு.கவுதமன்
கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.