
புதிய தொடர் - 1வ.நாகப்பன், பங்குச் சந்தை நிபுணர்
நண்பர் ஒருவர் வந்திருந்தார். “என் பெண் ப்ளஸ் டூ முடிச்சுட்டா; எந்தக் கல்லூரியில் என்ன கோர்ஸ்ல சேர்க்கலாம்னு குழப்பமா இருக்கு” என்றார். “என்ன மார்க்?’’ என்று கேட்டேன். அவர் சொன்னார். அவர் மகள் எடுத்திருந்த மதிப்பெண்களுக்கு எந்தக் கல்லூரியிலாவது அட்மிஷனே கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால், அவருக்கு ஒரே குழப்பமாம். அவர் மனம் நோகாமல் ஆலோசனை ஒன்றைச் சொல்லி அனுப்பினேன்.

இன்னொரு நண்பர் இருக்கிறார். போன் செய்து, “என் மகளை எந்தக் காலேஜ்ல சேர்க்கறதுனு தெரியல” என்றார். அவருக்கும் அதே குழப்பம். குழப்பம் வந்தால் உடனே எனக்கு போன் அடிக்க வேண்டும் என்று எப்படித்தான் தெரிகிறதோ! வழக்கம்போல, “என்ன மார்க்” என்றேன். ‘‘மூணு சப்ஜெக்ட்ல சென்ட்டம்; டோட்டல் 96%” என்றார். “அருமையான மார்க் ஆச்சே; கேட்ட கோர்ஸ் கிடைக்குமே’’ என்றேன். “அதான் பிரச்னையே. எந்த காலேஜ்ல சேர்க்கறதுன்னு தெரியலை’’ என்றார்.
அவரவருக்கு அவரவர் பிரச்னை. ஒன்றுமே இல்லைன்னாலும் பிரச்னை. சாய்ஸ் அதிகம் இருந்தாலும்கூட பிரச்னைதான். இன்று முதலீட்டாளர்கள் பிரச்னையே அதுதான். நூற்றுக்கணக்கான சாய்ஸ். நமக்கு ஏற்ப எதைத் தேர்வு செய்வது என்று முடிவெடுக்க முடியாத தயக்கம்.
முடிவெடுப்பது ஒரு தனிக் கலை. அது சிலருக்குத் தானாக வரும். சிலர் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நாம் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்க வேண்டும் எனில், முதலில் தேவையான தகவல்களையெல்லாம் திரட்ட வேண்டும்; திரட்டிய தகவல்களைச் சரிபார்க்க வேண்டும். துறை சார்ந்த திறமையாளர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும். அதன்பிறகு சரியான முடிவை நாமே ஆராய்ந்து எடுக்க வேண்டும். எடுத்த முடிவை எப்போதும் கண்காணிக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் அதை மறு பரிசீலனை செய்வதற்குத் தயாராக இருக்க வேண்டும்.
இதைச் சொல்வது எளிது. நடைமுறையில்..? ஆரம்பத்தில் நான் சொன்ன என் இரு நண்பர்களைப் போலவே இருக்கிறோம். இதிலிருந்து தப்பிக்க, முதலீடு முதல் மேக்ரோ பொருளாதாரம் வரை சரியாகப் புரிந்துகொண்டு, காலத்துக்கேற்ற முடிவுகளை எடுக்க என்னால் முடிந்த தெளிவை இனி உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறேன். ஆர் யு ரெடி?
(சொல்கிறேன்)
படம் : மீ.நிவேதன்