
BIZ பாக்ஸ்

இந்தியத் தொழிலகங்களின் கூட்டமைப்பான சி.ஐ.ஐ-யின் (Confederation of Indian Industry) புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவரான ஷோபனா காமினேனி. அப்போலோ மருத்துவமனையைத் தொடங்கிய பிரதாப் ரெட்டிக்கு, அவரது நான்கு மகள்களில் இளைய மகள்தான் இந்த ஷோபனா. இன்னொரு முக்கியமான விஷயம், சி.ஐ.ஐ அமைப்பு 1895-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளில் ஒரு பெண் தொழிலதிபர்கூட சி.ஐ.ஐ.யின் தலைமைப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதில்லையாம். ஷோபானாதான் சி.ஐ.ஐ.யின் முதல் பெண் தலைவர் ஆகியிருக்கிறார். கலக்குங்க மேடம்!

நகரத்தார் வர்த்தக மாநாட்டை 2019-ல் சென்னையில் நடத்த முடிவாகி இருக்கிறது. இந்த மாநாட்டுக்கு அரங்கத்தைத் தேர்வு செய்வதில் இருந்து, மாநாட்டில் கலந்துகொள்பவர்களை எங்கு தங்க வைப்பது என்பது உள்ளிட்ட பணிகள் வரையிலான சோனா செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் தலைவர் சோனா பழனியப்பன் தலைமையில் முழுமூச்சுடன் கவனித்து வருகிறது நகரத்தார் சேம்பர் ஆப் காமர்ஸ். பேஸா பண்ணுங்க சார்!
‘சில்லறை வர்த்தகத்தின் எதிர்காலம்’ என்ற பட்டம் பெற்று 12 வயதிலேயே உலகைக் கலக்கி வருகிறாள் மிகைலா உல்மர். ‘நான் சந்தித்த சி.இ.ஓ-களிலேயே மிகச் சிறந்தவர் மிகைலா என்று புகழ்ந்திருக்கிறார் மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் சத்யா நாதெள்ள. உணவுத் துறையில், குறிப்பாக இயற்கை வழி உணவு விற்பனையில் பல சாதனைகளை எட்டி, சரித்திரம் படைத்து வருகிறார் இந்தச் சிறுமி.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்கிற ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார் இ-பப்ளிஷிங் நிறுவனமான இன்டெக்ரா நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஸ்ரீராம் சுப்ரமண்யா. க்ரையான் டேட்டா நிறுவனத்தைத் தொடங்கிய விஜய குமார் ஐவாதுரி, போர்ஷிய மெடிக்கல் நிறுவனத்தின் சி.இ.ஓ மீனா கணேஷ் ஆகியோருடன் சேர்ந்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் ஸ்ரீராம்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்க வேண்டும் என்கிற எண்ணம் இன்றைய இளைஞர்களிடம் அதிகரித்துவரும் இந்த நேரத்தில், இந்தப் புத்தகம் மிக உதவியாக இருக்கும் என்பதை சொல்லத் தேவை இல்லை! ஸ்ரீராம் சார், உங்க சேவை ஸ்டார்ட்-அப்களுக்குத் தேவை!

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எல்லா தொழிலதிபர்களும் கண்டு வியக்கக்கூடிய நிறுவனமாக இருந்தது சன் பார்மா நிறுவனம். ஆனால், இன்றைக்கு இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த 52 வாரத்தில் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது. 2015 ஏப்ரலில் இந்தப் பங்கின் விலை ரூ.1,168-ஆக இருந்தது. தற்போது சுமார் ரூ.500 என்கிற அளவுக்குக் குறைந்துவிட்டது. ‘‘சன் பார்மாவின் தலைவர்
திலிப் சங்விக்கு இது கொஞ்சம் போதாத காலம். இதிலிருந்து அவர் நிச்சயம் மீண்டும் வருவார்; மீண்டும் வெற்றி காண்பார்’’ என்கிறார்கள் அவரை ஆர்வத்துடன் ஃபாலோ செய்கிறவர்கள். பிசினஸ்ல ஏற்ற இறக்கம் சகஜமப்பா!

‘‘ஐ.டி துறையில் சிலர் வேலை இழக்கும் அபாயத்தைத் தவிர்க்க உயரதிகாரிகள் தங்கள் சம்பளத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்!''
- என்.ஆர்.நாராயண மூர்த்தி, சக நிறுவனர், இன்ஃபோசிஸ்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறினால், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் ஆலோசனை கமிட்டியிலிருந்து, தான் வெளியேறிவிடப் போவதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார் பிரபலத் தொழில் அதிபரும் டெஸ்லா நிறுவனத்தின் அதிபருமான எலன் மாஸ்க்.
மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநரும் சி.இ.ஓ-வுமான என்.காமகோடி. காரணம், கடந்த 2016-17-ம் ஆண்டில் சிட்டி யூனியன் வங்கியின் லாபம் ரூ.500 கோடியைத் தாண்டியிருக்கிறது.
இந்த வங்கி ரூ.500 கோடி ரூபாயை லாபமாக ஈட்டுவது இதுவே முதல் முறை. இதனையொட்டி 30% டிவிடெண்டும், பத்து பங்குகளுக்கு ஒரு பங்கு போனஸ் தரவும் முடிவாகி இருக்கிறது! லாபம் பெருக வாழ்த்துகள்!
கடந்த வாரத்தில் ரஷ்யாவுக்குச் சென்ற பிரதமர் மோடி, ரஷ்ய ஜனாதிபதி புடினின் சகோதரர் இரண்டாம் உலகப் போரில், ரஷ்ய நாட்டுக்காக உயிர் துறந்ததைச் சொன்னாராம். அதைக் கேட்ட புடின் அப்படியே ஆடிப் போய்விட்டாராம். மோடின்னா சும்மாவா!

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லைய்டு இன்ஷுரன்ஸ் நிறுவனம், பங்குச் சந்தையில் ஐ.பி.ஓ வரப் போவதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பு உருவானது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் சில நிறுவனங்கள் வெளியேற விரும்பியதைத் தொடர்ந்து, இந்த ஐ.பி.ஓ பேச்சு எழுந்திருக்கிறது. ஆனால் இத்தகவலை மறுத்திருக்கிறது ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத் தரப்பு. இந்த நிறுவனம் ஐ.பி.ஓ வந்தால், ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஒன்று ஐ.பி.ஓ-வுக்கு வருவதில் முதல் நிறுவனமாக இருக்கும்!
ஊபர் நிறுவனத்தின் நஷ்டம், கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டைவிட நான்காம் காலாண்டில் குறைந்திருக்கிறது. இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் சி.எஃப்.ஓ-வாக இருந்த கெளதம் குப்தா, அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறி இருக்கிறார். இன்னொரு நிறுவனத்தில் சி.ஓ.ஓ-வாகப் பதவியேற்க இந்த மாற்றமாம்! ஓகே, ஓகே!

அடுத்த சில மாதங்களில் ஐ.பி.ஓ என்னும் புதிய பங்கு வெளியிடப் போகிறது மேட்ரிமனி.காம். ஐ.பி.ஓ மூலம் 350 கோடி ரூபாயைத் திரட்ட முன்பு முடிவு செய்திருந்தார் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முருகவேல் ஜானகிராமன். இப்போது 130 கோடி ரூபாய் மட்டுமே திரட்ட முடிவு செய்திருக்கிறார். இதில் 40 கோடி ரூபாயை மேட்ரிமேனியின் புதிய அலுவலகத்துக்குத் தேவையான இடம் வாங்க ஒதுக்கப்படுமாம். சீக்கிரமே புதுமனை புக வாழ்த்துகள் சார்!

‘’நமது ஜி.டி.பி குறைந்ததற்கு உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களை செல்லாமல் ஆக்கியது மட்டுமே காரணமல்ல!’’
அருண் ஜெட்லி, மத்திய நிதி அமைச்சர்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ-வும். எம்.டி.யும் ஆன விஷால் சிக்காவின் ஆண்டு சம்பளம் 16.01 கோடி ரூபாய்! அவருக்கு அடுத்த பெரிய பதவியில் இருக்கும் பிரவின் ராவின் ஆண்டு சம்பளமே 7.8 கோடி ரூபாய்தான். முதல்வருக்கும் இரண்டாமவருக்குமான சம்பளத்தில் இவ்வளவு வித்தியாசமா என்று எல்லோரும் அதிசயிக்கிறார்களாம்! அட ஆமால்ல!

டாடா குழும நிறுவனங்களின் தலைவராக இருக்கும் என்.சந்திரசேகரனின் ஆண்டு வருமானம் இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. என்றாலும், டிசிஎஸ் நிறுவனத்தின் மூலம் அவருக்குக் கிடைத்த வருமானம் 30 கோடி ரூபாய். டிசிஎஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ வாக அவர் இருந்தபோது, அவருக்குக் கிடைத்த அடிப்படைச் சம்பளம் ரூ.2.4 கோடி; இது போக ரூ.25 கோடி கமிஷனாகவும். ரூ.2.7 கோடி அலவன்ஸாகவும் தரப்பட்டுள்ளதாம்! அட்ரா சக்கை!
விராட் கோஹ்லியின் பிராண்ட் வேல்யூ 120 மில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. இது பற்றி கோஹ்லியிடம் கேட்க, ‘’இதெல்லாம் எனக்கு வெறும் நம்பர்கள்தான். நான் ஒரு புரஃபஷனல். என் கவனமெல்லாம் என் வேலையில் (விளையாடுவதில்) நான் ஃபோக்கஸ்ட்-ஆக இருக்க வேண்டும் என்பதே. எனக்கென ஒரு ஸ்ட்ராங் மேனேஜ்மென்ட் தீம் இருப்பதால், இது பற்றியெல்லாம் நான் அதிகம் கவலைப்படுவதில்லை’’ என்றாராம். கூல் கய்!