
ஷியாம் சுந்தர், கமாடிட்டி ஆலோசகர்
இந்தியா சுதந்திரம் அடைந்தபின் நடந்த முக்கிய வரிச் சீரமைப்பு நடவடிக்கைதான் இந்த ஜி.எஸ்.டி. இந்த வரி பற்றி பலரும் பலவிதமான விமர்சனங்களை முன் வைத்தாலும், அது இப்போது நடைமுறைக்கு வந்துவிட்டது.
ஜிஎஸ்.டி நடைமுறைக்கு வருவதற்குமுன், எல்லாத் தரப்பினரிடமும் இருந்த முக்கியமான கவலை, பல்வேறு பொருள்களின் விலை உயர்ந்துவிடுமோ என்பதே. குறிப்பாக, தங்கத்தின் விலை உயர்ந்தால், திருமணத்துக்குத் தேவையான தங்க நகைகளை எப்படி வாங்குவது என்பது பற்றி பலரும் கவலைப்பட்டனர். இதனால் ஜூலை 1-ம் தேதிக்கு முன்பே பலரும் வேக வேகமாக தங்க நகைகளை வாங்கினார்கள்.

தற்போது ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்துவிட்டபின் தங்கம் விலை உயர்ந்திருக்கிறதா, எவ்வளவு உயர்ந்திருக்கிறது, அதை எப்படிக் கணக்கிடுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
ஜி.எஸ்.டி வரப்போகிறது என்றவுடனேயே, வர்த்தகர்கள் முன்கூட்டியே தங்கத்தை இறக்குமதி செய்ததால், சென்ற மார்ச் தொடங்கி மே வரையில், இந்தியாவின் தங்க இறக்குமதி 2016-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகரித்தது. அதாவது, சென்ற வருடம் 2016-மார்ச் முதல் மே வரையில் 31 டன்களை ஒட்டியே காணப்பட்டது. ஆனால், இந்த வருடம் 2017, மார்ச்சில் 105 டன்களாகவும், ஏப்ரல் மாதத்தில் 94 டன்களாகவும், மே மாதத்தில் 103 டன்களாகவும் தங்கம் இறக்குமதி ஆகியிருக்கிறது.

இரண்டு மாதங்கள் முன்பு வரை ஜி.எஸ்.டி-யானது தங்கத்தின் மீது 5 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப் பட்டது. அதிக இறக்குமதிக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், தற்போது தங்க நகைகளுக்கு 3% மட்டுமே வரி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்தபின்பும், இதுவரை நகைக் கடைகள் கையாண்ட முறை, தங்கத்தின் எடை, சேதாரம், செய்கூலி ஆகியவற்றில் எந்த மாற்றமும் இருக்காது. வரி மட்டும் மாறும் என்பதால், சிலர் தங்க நகை வாங்கும்போது வரி கட்டுவதைத் தவிர்க்க நகைக்கான பில் வேண்டாம் என்று சொல்ல வாய்ப்புண்டு. இப்படிச் செய்யும்போது தற்காலிகமாக சில ஆயிரம் ரூபாய் மிச்சமானாலும், பிற்பாடு வேறு சில பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, உரிய வரி கட்டி, பில் லுடன் நகைகளை வாங்குவதே சரியாக இருக்கும்.

ஜி.எஸ்.டி-க்குப் பிறகு தங்கத்தின் விலை எவ்வாறு மாறுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள மேலே உள்ள அட்டவணையைப் பாருங்கள். (10 கிராம் (995) தங்கத்தின் விலை ரூ.27,000 என்று வைத்துக்கொள்வோம். ஜி.எஸ்.டி-க்கு முன்பும், பின்பும் தங்கத்தின் விலை ஒரே மாதிரி இருக்கும் பட்சத்தில், செய்கூலி இரண்டுக்கும் சமமாக வைத்து இந்த ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.)
மேலே உள்ள அட்டவணையின்படி, புதிதாக வந்துள்ள ஜி.எஸ்.டி வரியினால், தங்கத் தின் விலை 3 - 4% வரை விலை ஏற்றம் இருக்கலாம். அதாவது, ஒரு கிராமுக்கு ரூ.100 விலை ஏற வாய்ப்பிருக்கிறது. ஒரு பவுன் நகை வாங்குகிறவர் களுக்கு இது பெரிய பளுவாக இருக்காது. ஆனால், 10 பவுன் நகை வாங்குகிறவர்களுக்கு இந்த விலை உயர்வு நிச்சயம் மலைக்க வைக்கும்.
தங்கத்தின் விலையைப் பொறுத்தவரை, தங்கத்தின் சர்வதேச விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, நுகர்வோரின் விழாக் காலத் தேவைகள், சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் போன்றவற்றின் அடிப்படையில் விலை ஏற்றமோ அல்லது இறக்கமோ நடப்பதால், ஜி.எஸ்.டி-யின் தாக்கம் பெரும்பாலும், நம் உள்நாட்டு விலையில் எதிரொலிக்காது என்றே கருதப்படுகிறது.