
கொச்சின் சிப்யார்ட் ஐ.பி.ஓ... முதலீடு செய்யலாமா?
நம் நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை கப்பல் கட்டும் நிறுவனமான கொச்சின் சிப்யார்ட், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தனது பங்குகளை ஐ.பி.ஓ மூலம் வெளியிடப் போகிறது. ஐ.பி.ஓ மூலம் 1,468 கோடி ரூபாயைத் திரட்ட இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் வருவாயில் 75% ராணுவத்தில் இருந்தும், 25% தனியார் நிறுவனங் களின் ஒப்பந்தங்கள் மூலமும் வருகிறது. இந்த நிறுவனம் செய்து வரும் கப்பல் பழுது பார்க்கும் வணிகம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த ஐ.பி.ஓ, ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது. ஒரு பங்கின் விலை ரூ.424 முதல் ரூ.432-ஆக நிர்ணயமாகி இருக்கிறது. இதில் சில்லறை முதலீட்டாளர் மற்றும் ஊழியர்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.21 வரை தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. இந்த ஐ.பி.ஓ மூலம் திரட்டப்படும் நிதி, இந்த நிறுவனத்தின் விரிவாக்கப் பணிக்காகப் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்யலாமா என முதலீட்டு ஆலோசகர் ரெஜி தாமஸிடம் கேட்டோம். “கொச்சின் சிப்யார்ட் நிறுவனம் தனது வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக ஐ.பி.ஓ மூலம் நிதி திரட்ட உள்ளது. ஐ.பி.ஓ மூலம் 3.3 கோடி பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. சுமார் ரூ.2,100 கோடி பணம் கையில் இருக்கிறது.

இந்த நிறுவனம் பொதுத் துறை நிறுவனமாக இருப்பதால், இந்தத் துறையில் மற்ற நிறுவனங்களை விட இந்த நிறுவனம் சிறந்து விளங்குகிறது. இதன் போட்டி நிறுவனங்களான பாரதி சிப்யார்ட் மற்றும் ஏபிஜி சிப்யார்ட்-ன் பிஇ நெகட்டிவாக இருக்கிறது. ஆனால், இதன் பிஇ 24 என்ற அளவில் பாசிட்டிவாக இருக்கிறது. இதற்காக ரூ.424 ரூபாய் தந்து, இந்த நிறுவனத்தின் பங்கை வாங்க வேண்டும் என்பதில்லை. எனவே, அவசரப்பட்டு இந்த ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்யத் தேவையில்லை.
ஷிப்பிங் நிறுவனங்களுக்கு ஆர்டர்கள்தான் மிக முக்கியம். கொச்சின் சிப்யார்ட் நிறுவனத்துக்கு 2017-ல், புதிய கப்பல் செய்வதற்காக ஒரேயொரு ஆர்டர் மட்டுமே வந்தது. ஆனால், ஏபிஜி சிப்யார்ட் நிறுவனத்துக்கு ரூ.3,290 கோடிக்கு ஏழு கப்பல்கள் செய்வதற்கான ஆர்டர்கள் கிடைத்துள்ளன. இந்த அடிப்படையில் பார்த்தால், கொஞ்சம் பொறுத்திருந்து முதலீடு செய்வதே சரி. குறைந்தது மூன்று காலாண்டு முடிவுகளைப் பார்த்தபின் முதலீட்டை மேற்கொள்ளலாம்” என்றார் அவர்.
- சோ.கார்த்திகேயன்
படம்: பா.காளிமுத்து