
BIZ பாக்ஸ்

தங்கத்தைப் பணமாக்கும் திட்டம்: திருப்பதி முதலிடம்!
தங்கத்தைப் பணமாக்கும் திட்டத்தின்கீழ் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இதுவரை 2,780 கிலோ தங்கத்தை டெபாசிட் செய்திருக்கிறது. கடந்த ஆண்டு 1,311 கிலோ தங்கத்தை இந்தத் திட்டத்தின்கீழ் செய்தது திருப்பதி தேவஸ்தானம். இந்தத் தங்கத்துக்கு ஓர் ஆண்டுக்கு 2.5% வட்டி வருமானம் கிடைக்கும். இதன்மூலமாக மட்டுமே திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.807 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயக் கணபதி கோயில் 50 கிலோ தங்கத்தையும், குஜராத்தில் உள்ள சோமநாதர் ஆலயம் ஆறு கிலோ தங்கத்தையும் இந்தத் திட்டத்தின்கீழ் டெபாசிட் செய்துள்ளது.

மும்பை மழையினால் பாதிப்படைந்த இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்!
மும்பை மழையின் காரணமாக இழப்பீடு கேட்டு இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை அணுகும் நபர்களின் எண்ணிக்கை ஏகத்துக்கும் அதிகரித்து வருகிறது. இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பாதிப்புக் குள்ளானதற்கு இழப்பீடு கேட்டும், மருத்துவக் காப்பீட்டுக் கான இழப்பீடு கேட்டும் பலரும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை அணுகி வருகிறார்கள். இதுவரை சுமார் ரூ.500 கோடிக்கு இழப்பீடு கோரப்பட்டுள்ளது. கடந்த 2015 டிசம்பரில் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ரூ.5,000 கோடி அளவுக்கு இழப்பீட்டைத் தந்தன. மும்பையில் இழப்பீடு கேட்டு வருகிறவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
₹ 23,235 கோடி - நம் நாட்டில் புழக்கத்தில் இருக்கும் கள்ள நோட்டுகளின் தோராயமான மதிப்பு.

தனியார் தயாரித்த ராக்கெட் தோல்வி
இஸ்ரோ நிறுவனம் கடந்த வாரம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் - 1ஹெச் (IRNSS-1H) என்கிற ராக்கெட்டை விண்ணில் ஏவியது. ஆனால், இந்த முயற்சி தோல்வி யில் முடிந்தது. இஸ்ரோ நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் 35 ராக்கெட்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய நிலையில், இந்த முயற்சி இப்போது தோல்வியில் முடிந்திருக்கிறது. இந்த ராக்கெட் தயாரிப்பில் தனியார் நிறுவனம் தயாரித்துத் தந்த சில பாகங்களினால் இந்தத் தோல்வி ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள் சிலர். இந்த ராக்கெட்டில் 25 சதவிகிதத்தை தனியார் நிறுவனம் செய்து தந்தது குறிப்பிடத்தக்கது!

லியனார்டோ அளித்த மில்லியன் டாலர்
சில நாள்களுக்குமுன்பு, அமெரிக்காவின் டெக்ஸாஸ், ஹூஸ்டன் உள்ளிட்ட நகரங்களை ஹார்வே புயல் தாக்கிக் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் லட்சக்கணக்கானவர்களின் வீட்டில் மழை நீர் புகுந்தது. இந்த வெள்ளத்தினால் 37 பேர் இறந்தனர். இந்தப் புயல் பாதிப்பினால் கஷ்டப்படும் மக்களுக்கு அமெரிக்காவில் பலரும் உதவி செய்து வருகின்றனர். ‘டைட்டானிக்’ புகழ் லியனார்டோ டிகேப்ரியோ இந்தப் புயலினால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவுவதற்காக 1 மில்லியன் டாலரை (இந்திய ரூபாய் மதிப்பில் 6.40 கோடி) `யுனைடெட் வே ஹார்வி ரெக்கவரி ஃபண்டு’க்கு நன்கொடையாகத் தந்திருக்கிறார். 2004-ல் ஆசியாவில் சுனாமி ஏற்பட்டபோதும், அமெரிக்காவில் 2010-ல் ஹைதி புயலும் 2012-ல் சாண்டி புயல் தாக்கியபோதும் நிதி உதவி செய்தவர் லியனார்டோ!

ஊபரின் புதிய சி.இ.ஓ.
ஊபர் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்டிருக்கிறார் டாரா கோஸ்ரோஷாஹி (Dara Khosrowshahi). எக்ஸ்பீடியா நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருந்தவர், இப்போது ஊபர் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக மாறியிருக்கிறார். இவர் ஈரானில் பிறந்தவர். இவருக்கு ஒன்பது வயதாக இருந்தபோது, இவரது பெற்றோர், அமெரிக்காவுக்குப் பிழைப்பு தேடி வந்தனர். ‘‘ஜீரோவிலிருந்து ஆரம்பித்த அன்றைய வாழ்க்கைதான் கடுமையான உழைப்பினை எனக்குக் கற்றுத்தந்தது. நான் இந்த அளவுக்கு உயரக் காரணமும் அதுதான்’’ என்கிறார் கோஸ்ரோஷாஹி.
“ஊபர் நிறுவனத்தில் இருக்கும் சிக்கல்களைச் சரி செய்து, அடுத்த 18 முதல் 36 மாதங்களில் ஐ.பி.ஓ வெளியிட நடவடிக்கை எடுப்பேன்” என உற்சாகத்துடன் பேசியிருக்கிறார்!
ரூ.11,540 கோடி - ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உரிமை தருவதன்மூலம் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் தொகை!
54.60% - கடந்த ஜனவரி முதல் ஜூலை வரையிலான எட்டு மாதங்களில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்பட்ட பணத்துக்கும் திரும்ப எடுக்கப்பட்ட பணத்துக்குமான விகிதம். கடந்த ஜனவரியில் இது 72.29 சதவிகிதமாக இருந்தது, கடந்த ஜூலையில் 54.60 சதவிகிதமாகக் குறைந்துள்ளது!