
ஜி.எஸ்.டி கேள்வி பதில்கள்ஜி.கார்த்திகேயன் ஆடிட்டர், கோவை
எஸ்.ரவிசங்கர், திருப்பூர்
எங்களது ஏற்றுமதித் தொழிற்சாலை திருப்பூரில் உள்ளது. இங்கு தண்ணீர் போதிய அளவு கிடைக்காத தால், அலுவலகப் பயன்பாட்டுக்கும் எங்களது குடிநீர் பயன்பாட்டுக்கும் வெளியில் இருந்துதான் தண்ணீரைக் கொள்முதல் செய்கிறோம். இவ்வாறு வெளியிலி்ருந்து கொள்முதல் செய்யும் குடி தண்ணீருக்கு ஜி.எஸ்.டி செலுத்த வேண்டுமா?

‘‘நீங்கள் கொள்முதல் செய்யும் குடிநீருக்கு ஜி.எஸ்.டி விதிக்கப்படாது. ஆனால், சுத்திகரிக்கப் பட்ட குடிநீரை பாட்டில்களில் அடைத்து வியாபார சின்னத்துடன் (Logo) விற்கப்படுமானால் அதற்கு ஜி.எஸ்.டி பொருந்தும். ஆனால், நீங்கள் உங்களது அலுவலக உபயோகத்துக்கு வண்டியிலோ அல்லது லாரியிலோ வாங்கும் தண்ணீருக்கு ஜி.எஸ்.டி பொருந்தாது.’’
சாந்தினிதேவி, திருச்சி
நான் சாந்தினி டிசைன்ஸ் என்கிற பெயரில் சுடிதார் வகை துணிகளை ஆர்டரின் பெயரில் தைத்துத் தருகிறேன். மேலும், அதே பெயரில் ரெடிமேட் துணிகளையும் வியாபாரம் செய்து வருகிறேன். இரண்டுக்கும் ஒரே ஜி.எஸ்.டி பதிவு எண் பெற்றுள்ளேன். இரண்டு வியாபார நிறுவனமுமே தனிநபர் உரிமம் பெற்றது. தற்போது நான் விற்பனை செய்யும்போது தனித்தனியாக ரசீது போடலாமா?
‘‘நீங்கள் ஒரே ஜி.எஸ்.டி எண்ணில் பதிவு செய்து பல்வேறு வரி விகிதத்துக்கு உட்பட்ட பொருள்களையும், சேவைகளையும் விநியோகம் செய்து வருகிறீர்கள். இதுபோன்ற தருணங்களில் உங்களுடைய வசதிக்கேற்றவாறு வரி விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லாமல், ஒரே ஜி.எஸ்.டி எண்ணில் தனித்தனிப் பெயரில் ரசீதைத் தரலாம். இதில் தவறு ஏதுமில்லை.’’
எம்.சதீஸ், ஈரோடு
கல்லூரி மாணவர்களும், பணிக்குச் செல்பவர்களும் தங்குவதற்குத் தனியார் விடுதி ஒன்றை நாங்கள் நடத்தி வருகிறோம். இதற்கு ஜி.எஸ்.டி வரி வசூல் செய்வது அவசியமா?
‘‘உங்கள் விடுதியில் ஒரு அறையில் தங்குவதற்கான வாடகை நாள் ஒன்றுக்கு ரூ.1,000-க்கு மிகாமல் இருந்தால், ஜி.எஸ்.டி வசூல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை.’’

ராம்செந்தில், மதுரை
நாங்கள் இயந்திரங்களை உற்பத்தி செய்து வருகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களிடம் முன்பணம் பெற்றுக்கொண்டு ஆர்டரின் பேரில் இயந்திரங்களை உற்பத்தி செய்து விநியோகம் செய்கிறோம். முந்தைய முறையில் முன்பணத்துக்கு உற்பத்தி வரி முன்னரே செலுத்த வேண்டிய அவசிய மில்லை. ஆனால், தற்போது ஜி.எஸ்.டி முறையில் மாற்றம் உள்ளதாகக் கூறுகிறார்களே?
‘‘ஜி.எஸ்.டி முறையில் முன்பணம் வாங்கும்போது ஜி.எஸ்.டி கட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. நீங்கள் விற்பனை செய்யும்போதும் அல்லது விநியோகம் செய்யும்போதும், முன்பணம் பெறும்போதும் அதனை விநியோகம் என்று கணக்கில் கொண்டு அதற்கான வரியைச் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறீர்கள். எனவே, முன்பணம் வாங்கும்போது அதற்கு வரி கட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.’’
வரதராஜன், காங்கேயம்.
‘‘நான் பதிவு செய்யும்போது தொகுப்பு முறையில் அதாவது, ரூ.75,00,000-க்கும் கீழாக வியாபாரம் இருக்கும் என்று பதிவு செய்துவிட்டேன். இது தவறு என்று இப்போது உணர்கிறேன். மேலும், எனக்கு இந்த முறை பொருந்தாது. சாதாரண முறையில் ஜி.எஸ்.டி வசூல் செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன். தற்போது நான் என்ன செய்வது?
‘‘தொகுப்பு முறையில் அதாவது, ரூ.75,00,000-க்குக் கீழாக வியாபாரம் இருக்கும் என்று ஏற்கெனவே பதிவு செய்துள்ளீர்கள். தற்போது உங்களது வியாபாரம் ரூ.75,00,000-க்கும் அதிகமாகும் பட்சத்தில் அதற்கான வரி விகிதத்தை நீங்கள் வசூல் செய்து வியாபாரம் செய்யலாம் என்பதால், தொகுப்பு முறையில் இருந்து மற்ற முறையில் மாற்றம் செய்துகொள்ளலாம்.
மணிகண்டன், கோவை
கோவையில் டாக்சி நிறுவனமொன்றை நடத்தி வருகிறோம். எங்கள் நிறுவனத்துக்கு பாலக்காட்டில் உள்ள நிறுவனத்திடமிருந்து அடிக்கடி பணி ஆணை வரும். கோவை விமான நிலையத்தில் இருந்து வரும் விருந்தினர்களைக் கேரளாவுக்கு அழைத்துச் சென்று மீண்டும் கோவையில் கொண்டு வந்துசேர்க்க வேண்டும். இதற்கான கட்டணத் தொகையைக் கேரளாவில் இருக்கும் நிறுவனம்தான் செலுத்தும். ஐ.ஜி.எஸ்.டி, எஸ்.ஜி.எஸ்.டி - இதில் நாங்கள் எதைச் செலுத்த வேண்டும்?
‘‘உங்களது விநியோகத்தை வெளிமாநிலத்தில் உள்ள நிறுவனத்துக்கு நீங்கள் வழங்குவதால், இது வெளிமாநில விநியோகமாகக் கணக்கில் கொள்ளப்படும். எனவே, நீங்கள் ஐ.ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும்.’’
