
முதலீட்டில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்!
நம்மில் பெரும்பாலோர், முதலீடு செய்யும்போது அந்த முதலீட்டின் மூலம் எவ்வளவு அதிகமாக லாபம் கிடைக்கும் என்பதையே பார்க்கிறோம். இதில் தவறொன்றுமில்லை. அதே சமயம், இன்னொரு முக்கிய விஷயத்தைக் கவனிக்க தவறிவிடுகிறோம். அது முதலீட்டைப் பணமாக்குவது. நம் முதலீட்டை எளிதில் பணமாக்க முடிந்தால்தான் அதனை அவசர காலத்தில் விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். இல்லாவிட்டால், உங்களிடம் பெரிய சொத்து இருந்தாலும், அதனை அவசரத் தேவை வரும்போது விற்க முடியாமல், கடன் வாங்க வேண்டிய நிலை வரும்.

பொதுவாக, ஒரு முதலீட்டைப் பணமாக்க எடுத்துக் கொள்ளப்படும் காலத்தை மூன்றுவிதமாகப் பிரிக்கலாம். அதிகம், நடுத்தர அளவு, குறைந்த அளவு என்பதே அந்த மூன்றுவிதமான கால அளவு. உதாரணமாக, வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை ஏ.டி.எம் கார்டின் மூலம் எளிதில் பணமாக்க முடியும். எஃப்.டி எனில், அதனை முதிர்வுக் காலத்துக்குமுன் திரும்ப எடுத்தால், பணம் கைக்கு வர ஓரிரு தினங்களாகும். ஆனால், ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்றுப் பணமாக்குவது அவ்வளவு சீக்கிரத்தில் நடந்துவிடாது. சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். (பார்க்க, எந்த முதலீட்டை எவ்வளவு வேகமாகப் பணமாக்க முடியும் என்கிற விவரம் அட்டவணையில்)

ஒருவர் முதலீடு செய்யும்போது, முதலீட்டின் ஒரு பகுதியை எளிதில் பணமாக்கக்கூடிய திட்டங்களில் வைத்திருப்பது அவசியம். ரூ.1 லட்சம் முதலீடு எனில், அதில் ரூ.15,000 -20,000 எளிதில் பணமாக்கக்கூடிய திட்டங் களில் இருப்பது நல்லது.
- சேனா சரவணன்