
கேள்வி பதில்

வீட்டு வாடகையாகக் கிடைக்கும் வருமானத்தை, ஓய்வூதியத்துக்கு முதலீடாகப் பயன்படுத்திக் கொள்ளலாமா?
வேல்சங்கர், சென்னை.
த.முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர்.

``உங்கள் வீட்டு வாடகை வருவாயை வைத்து, உங்கள் ஓய்வூதியத் திட்டத்துக்கு முதலீடு செய்யலாம் என நீங்கள் நினைப்பது நல்ல யோசனைதான். நீங்கள் பத்து ஆண்டுகள் கழித்து ஓய்வுபெறுகிறீர்கள் என்றால், இப்போது முதலே நன்கு வரையறுக்கப்பட்ட பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். உங்கள் ஓய்வூதிய முதலீட்டு காலம் 10 வருடங்களுக்குக் குறைவாகவும், ஐந்து வருடங் களுக்கு மேலாகவும் இருந்தால், உங்களுக்குக் கிடைக்கும் வீட்டு வாடகை வருவாயைச் சில பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
முக்கியமாக, வீட்டு வாடகை மூலம் வருவாயை உங்களால் எப்போதும் ஈட்ட முடியுமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். காரணம், வீட்டு வாடகை வருமானம் தடைப்பட்டால், அது உங்களுடைய ஓய்வூதிய முதலீட்டைப் பாதிக்கும். ஒருவேளை, ஓய்வூதியத்துக்காக மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி மூலம் முதலீடு தொடங்கிய பிறகு, வீட்டு வாடகை வருவாய் சரியாக வரவில்லை என்றால்கூட முதலீட்டை நிறுத்தி வைத்து, மீண்டும் வாடகை வருவாய் கிடைக்கும்போது முதலீட்டைத் தொடரலாம்.”

இன்ஷூரன்ஸ் பிரீமியத்தைச் சரியாகச் செலுத்தாமல் இருந்தால், என்னுடைய சிபில் ஸ்கோர் பாதிப்படைய வாய்ப்புள்ளதா?
சந்தோஷ், திருச்சி.
ஸ்ரீதரன், இன்ஷூரன்ஸ் நிபுணர்
``சிபில் நிறுவனம், ஒவ்வொரு தனிமனிதரின் கடன் மற்றும் கிரெடிட் கார்டு பணம் செலுத்துவதைப் பதிவு செய்துவருகிறது.ஒரு தனிமனிதன், கடன் அல்லது கிரெடிட் கார்டு வாங்கும்போது அந்த நிறுவனம், சிபில் பதிவிறக்கம் செய்து, சிபில் ஸ்கோரைப் பார்த்துக் கடன் வழங்குவது பற்றி முடிவு செய்யும். ஆனால், இன்ஷூரன்ஸ் என்பது கடன் சார்ந்த விஷயம் அல்ல என்பதால், நீங்கள் பிரீமியம் செலுத்தா விட்டாலும் சிபிலில் பதிவு செய்யப்பட மாட்டாது. எனவே, உங்கள் சிபில் ஸ்கோர் குறைய வாய்ப்பில்லை.”
2004-ம் ஆண்டு சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், ரூ.20 லட்சத்துக்கு வீடு வாங்கினேன். அந்த வீட்டை இப்போது ரூ.90 லட்சத்துக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளேன். இதற்கு நான் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்?

ராமலிங்கம், சென்னை.
கே.ஆர்.சத்தியநாரயணன், ஆடிட்டர்.
``கேள்வியில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப்போல, வீட்டை வாங்கியதற்கான செலவு ரூ.20 லட்சம் மற்றும் விற்பனை மதிப்பு ரூ.90 லட்சம். இதில் வீட்டின் செலவுக் குறியீட்டின்படி (cost of index) 2004-ல் 109, 2018-19-ம் ஆண்டில் 272. செலவுக் குறியீ்டு ரூ.20 லட்சம்/109*272=49,90,826 ரூபாய் மற்றும் விற்பனை மதிப்பு ரூ.90 லட்சம்.
இதில் நீண்டகால மூலதன ஆதாயம் ரூ.40,09,174. இதில் 20% வரி 8,01,835 மற்றும் இ.சி (Education Cess) 3% வரியெனில், ரூ.24,055. ஆக மொத்தம், நீங்கள் ரூ.8,25,890 வரியாகச் செலுத்த வேண்டும். வரி விலக்குப் பெற, REC அல்லது NHAI பத்திரத்தில் ரூ.40,09,174-யை மூன்று வருட காலத்துக்கு முதலீடு செய்தால், வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், இதன் வட்டி வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டி வரும்”

என் தந்தைக்கு நான் ஒருத்திதான் வாரிசு. அவர் விருப்பத்துக்கு மாறாக, நான் திருமணம் செய்துகொண்ட காரணத்துக்காக, அவர் சம்பாதித்த சொத்தை எனக்குத் தராமல், கோயிலுக்கு எழுதி வைக்கப்போவதாகச் சொல்கிறார். சட்டப்படி எனக்கு என் தந்தையின் சொத்து கிடைக்குமா?
வி.ரேவதி கிருஷ்ணா, கும்பகோணம்
என்.ரமேஷ், வழக்கறிஞர்
“உங்கள் தந்தை அவருடைய சொத்துகளைத் தன் விருப்பப்படி அவர் அனுபவிக்கலாம். அல்லது விற்கலாம். கோயிலுக்கும் எழுதி வைக்கலாம். சட்டப்படி அவருக்கு முழு உரிமை உள்ளது. மகளுக்கோ /மகனுக்கோதான் சொத்தைத் தரவேண்டும் என்று யாரும் அவரை நிர்பந்திக்க முடியாது.’’
தொகுப்பு: சோ.கார்த்திகேயன்
கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.