ஃபண்ட் கார்னர் - ரூ. 50 லட்சம்... ஓய்வுக் காலத்துக்கு எந்த ஃபண்டில் முதலீடு செய்வது?

சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
நான் வெளிநாட்டில் பணிபுரிகிறேன். என்னால் மாதம் ரூ.2 லட்சம் வரை சேமிக்க முடியும். தற்போது என்னிடம் ரூ.50 லட்சம் உள்ளது. என் ஓய்வுக் காலத்துக்கு எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?
- ஏ.கணபதி

“உங்களது வயது, எப்போது ரிட்டையர் ஆகப் போகிறீர்கள், வேறு வருமானங்கள் ஏதுமுள்ளதா அல்லது இந்த வருமானத்தைத்தான் நம்பி இருப்பீர்களா என்கிற பல விவரங்களைப் பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லை.
உங்களிடம் தற்போது ரூ.50 லட்சம் உள்ளது என்றும், மேலும் மாதத்துக்கு ரூ.2 லட்சம் சேமிக்க முடியும் என்றும் சொல்லியிருக்கிறீர்கள். தற்போது உள்ள ரூ.50 லட்சத்தை அட்டவணையில் தரப்பட்டுள்ள பங்கு சார்ந்த ஃபண்ட் சேமிப்புத் திட்டங்களில் ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்துகொள்ளுங்கள். இந்தவித ஃபண்டுகளில், கிட்டத்தட்ட 30% பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளாக இருக்கும். உங்களது முதலீட்டைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வைத்திருக்கும்போது, ஆண்டுக்கு 9% வருமானத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். ஓராண்டுக்கு மேல் வைத்திருக்கையில் வரும் லாபத்துக்கு வரி ஏதும் கட்ட வேண்டாம்.
அடுத்த மூன்று வருடங்களில் நீங்கள் ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளபட்சத்தில், மாதத்துக்கு ரூ.2 லட்சத்தையும், ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டு களிலேயே அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்துகொள்ளுங்கள். ஓய்வுக்காகத் தாயகம் திரும்பும்போது, அன்றைய சூழலில் இதே ஃபண்டுகளிலிருந்து டிவிடெண்ட் பெற்றுக் கொள்ளலாமா அல்லது எஸ்.டபிள்யூ.பி முறையில் பணத்தை எடுத்துக்கொள்ளலாமா என்பதை முடிவு செய்துகொள்ளலாம்.

எனக்கு இப்போது 53 வயதாகிறது. என் ஓய்வுக் காலத்துக்காக மாதந்தோறும் ரூ.5,000-த்தை எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்ய நினைக்கிறேன். இதற்கான ஃபண்ட் திட்டங்களைச் சொல்லவும். ஏற்கெனவே ஹெச்.டி.எஃப்.சி டாப் 200 குரோத் ஃபண்டில் கடந்த மே வரை தொடர்ந்து ஏழு ஆண்டுகள் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்திருக்கிறேன். இந்தப் பணம், இந்த ஃபண்டிலேயே இருக்கட்டுமா அல்லது திரும்ப எடுத்துவிடலாமா?
- ராதிகா மனோகர்
‘‘உங்களது ரிட்டையர்மென்ட் 58 அல்லது 60 வயது என எடுத்துக்கொள்கிறேன். நீங்கள், கோட்டக் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் அல்லது மிரே இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு ஃபண்டில் மாதத்துக்கு 5,000 ரூபாயை் முதலீடு செய்துகொள்ளுங்கள். முந்தைய ஆண்டுகளில் இந்த ஃபண்ட் மெதுவாகச் செயல்பட்டாலும், தற்சமயத்தில் ஹெச்.டி.எஃப்.சி டாப் 200 நன்றாகச் செயல்பட்டு வருகிறது. ஆகவே, நீங்கள் அதிலுள்ள முதலீட்டைத் தொடர்ந்து செய்து வரலாம். ஆண்டுக்கொரு முறை உங்களின் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை மறுபரிசீலனை செய்துகொள்ளுங்கள்.’’

எனது வயது 37. நான் மூன்று லட்சம் ரூபாயை நீண்ட காலத்துக்கு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புகிேறன். மியூச்சுவல் ஃபண்டில் இதற்குமுன் முதலீடு செய்த அனுபவம் எனக்குக் கிைடயாது. எவ்வாறு முதலீடு செய்வது, யாரை அணுகுவது?
- செந்தில்குமார், திருப்பத்தூர்.
‘‘நீங்கள் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் விநியோகிப்பாளர் அல்லது ஃபைனான்ஷியல் அட்வைஸர் மூலம் உங்கள் முதலீட்டை மேற்கொள்வது சிறப்பாக இருக்கும். ரெஃபரன்ஸ் மூலம் நிதி ஆலோசகரைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. அவ்வாறு ரெஃபரன்ஸ் ஏதும் கிடைக்க வில்லை என்றால், நாம் ஏற்கெனவே இந்தப் பகுதியில் கொடுத்துள்ளதுபோல் ஆம்ஃபி இணையதளத்தின் மூலம் (https://www.amfiindia.com/locate-your-nearest-mutual-fund-distributor- details) கிடைக்கக்கூடிய லிஸ்ட்டிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் முதன்முதலாக மியூச்சுவல் ஃபண்டுக்குள் நுழைகிறீர்கள்; மேலும், நீண்ட காலத்துக்குப் பணம் தேவையில்லை என்கிறீர்கள். ஆகவே, மிரே இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் அல்லது பிரின்ஸிபல் குரோத் ஃபண்ட் ஆகிய ஃபண்டுகளில் எஸ்.டி.பி முறையில் (STP –Systematic Transfer Plan) முதலீடு செய்துகொள்ளுங்கள்.’’
