
சிறு ஊர்களிலும் கூட்டம் நடத்துங்கள்! - சேலத்தில் வாசகர்கள் கோரிக்கை
நாணயம் விகடன் மற்றும் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து சேலத்தில் ‘செல்வம் சேர்க்கும் செயல்திட்டம்’ என்கிற பெயரில் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வுக் கூட்டத்தை நடத்தின.

முதலில் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மண்டல மேலாளர் (பயிற்சி) ஜெ.சந்தோஷ், மியூச்சுவல் ஃபண்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்துப் பேசினார். அவர்,பணவீக்க விகிதத்தைத் தாண்டிய வருமானம் பெற எப்படியெல்லாம் முதலீடு செய்ய வேண்டும், நல்ல முதலீட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன, ஓய்வுக்காலத்துக்காக ஏன் இப்போதே முதலீடு செய்ய வேண்டும் என்கிற காரண காரியங்களை விளக்கிப் பேசினார்.

அடுத்து பேசிய மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்துப் பேசினார். அவர், முதலீட்டாளர்கள் செய்யும் பொதுவான தவறுகளைச் சுட்டிக்காட்டி, அவற்றுக்குத் தீர்வுகளைச் சொன்னார்.
எஃப்.டி-க்குப் பதில் எந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம், சிறந்த திட்டங்களைத் தேர்வு செய்வது எப்படி என விளக்கிச் சொன்னார்.

இறுதியாக, வாசகர்களின் சந்தேகங்களை நிபுணர்கள் தெளிவுப்படுத்தினர்.
இந்தக் கூட்டத்திற்கு ராசிபுரம், மேட்டூர், தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட ஊர்களிலிருந்து பலரும் கலந்துகொண்டனர். அவர்கள், சிறிய ஊர்களிலும் இதுபோன்ற விழிப்பு உணர்வு கூட்டங்களை நடத்துங்கள் என்று உரிமையுடன் கோரிக்கை வைத்தனர்.
- சி.சரவணன்
படங்கள்: க.தனசேகரன்