நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

உங்களைப் பணக்காரர் ஆக்கும் 12 கோல்டன் ரூல்ஸ்!

உங்களைப் பணக்காரர் ஆக்கும் 12 கோல்டன் ரூல்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
உங்களைப் பணக்காரர் ஆக்கும் 12 கோல்டன் ரூல்ஸ்!

உங்களைப் பணக்காரர் ஆக்கும் 12 கோல்டன் ரூல்ஸ்!

ணத்தை அடைவதற்கு தனிநபர்கள் பின்பற்ற வேண்டிய கோல்டன் ரூல்கள் சில உள்ளன. இவற்றைப் பின்பற்றுபவர், பணக்காரராகும் இலக்கை நோக்கி நகர்கிறார் என்று சொல்லலாம் என்கிறார் ஐடியா ப்ளஸ் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் பிசினஸ் கன்சல்டன்ட் கிருஷ்ண. வரதராஜன்.   

உங்களைப் பணக்காரர் ஆக்கும் 12 கோல்டன் ரூல்ஸ்!

பண ஈர்ப்பு விசை என்ற பயிற்சி வகுப்பைச் சமீபத்தில் சேலத்தில் நடத்திய அவர், ‘‘சாதாரணமாக மனிதர்கள், ஒரு புதிய பொருளை வாங்கும்போது மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்த்து அதற்கான தேவையை உருவாக்குகின்றனர். ஒரு டூவீலர் வாங்கும்போது பலரை நீங்கள் கவனித்திருக்கலாம். அவரது நண்பர் வாங்கிய பிராண்டைவிட நல்லதாக வாங்க வேண்டும் என்ற தேடல் அவருக்குள்ளிருந்து தொடங்கும். சில நேரங்களில் ஆசைப்பட்டாலும் அவர்களுக்குள் மிடில்கிளாஸ் மனநிலை விழித்துக்கொண்டு, இதெல்லாம் உன் தகுதிக்கு எட்டாத விஷயங்கள் என்று தலையில் குட்டும். பணத்தை ஈர்க்க முதலில் நம்மை தகுதிப்படுத்த வேண்டும்” என்றவர், அதற்கான கோல்டல் ரூல்களைச் சொல்லி நம்பிக்கையூட்டினார். அவர் சொன்ன ரூல்கள்...

1. முதலில் எதைப் பார்த்தும் ஏக்கம் கொள்ள வேண்டாம். இதெல்லாம் நமக்குக் கிடைக்குமா, நானென்ன டாடா பிர்லாவா என நம்பிக்கையைச் சிதைக்கும் விஷயங்களை மனதுக்குள் பதிய வைக்காதீர்கள். மனதளவில் உங்களை ஒரு கோடீஸ்வரர்போல கற்பனை செய்யுங்கள். இப்படியான ஒரு மனநிலை உங்கள் எண்ணங்களை மாற்றும். 

உங்களைப் பணக்காரர் ஆக்கும் 12 கோல்டன் ரூல்ஸ்!



2. ஒரு விஷயம் நமக்குப் பிடித்தால் அதை விரும்பத் தொடங்குங்கள். நம்மால் அடைய முடியாதது எதுவுமில்லையென்று நம்புங்கள். டாடா பிர்லா என்ன... அதற்கு மேலும் என்னால் ஆக முடியும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

3. உலகம் நம்மைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது என்று கவலைப்படுவதை நிறுத்துவது அவசியம். திறமை, பணம் என எல்லாம் நிறைந்த மனிதராக  உங்களை நம்புங்கள். அந்த நம்பிக்கையானது உங்கள் பேச்சு, முகம், செயல் எல்லாவற்றிலும் வெளிப்படும். உங்களிடம் உருவாகும் நம்பிக்கை ஒளி உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் உணரச் செய்யும். அதுவே உங்களுக்கான பாசிட்டிவ் வாய்ப்புகளை உருவாக்கும்.

4. என்னென்ன செலவுசெய்தீர்கள் என்று கணக்கு எழுதுங்கள். எவ்வளவு மிச்சம் உள்ளது என்பதிலும் தெளிவாக இருங்கள். எழுதும்போது வேண்டாத செலவுகளைக் குறைப்பதற்கான திட்டமிடலுக்கு மனம் தயாராகும். நீங்கள் நேசிக்கும் பணம் உங்களை நேசிக்கத் துவங்கும்.

5. பணத்தைப் பெருக்குவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். உங்களுக்கான  வழி எது என்று தேடுங்கள். சம்பாதிப்பதோடு சம்பாதிக்கும் பணத்தைப் பலமடங்காக பெருக்குவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். நீங்கள் ஏற்கெனவே செய்துவரும் பிசினஸ் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதும், மதிப்புக் கூட்டுவதும் அவசியம்.

6.  ஓரளவுக்கு ரொக்கப் பணத்தை பர்ஸில் வைத்திருங்கள். எப்போதும் எதுவுமில்லை என்ற நிலைக்கு நீங்கள் வரவே கூடாது. காரணம், எந்தச் சூழலிலும் நீங்கள் தன்னம்பிக்கை யோடு இருக்க அந்தப் பணம் உதவும்.

7. நேரம்தான் பணம் என்று உணர்ந்து கொள்ளுங்கள். எனவே, நேரத்தை மிச்சப்படுத்தவும், நேரத்தின் மதிப்பைக் கூட்டவும் திட்டமிடுங்கள். குறிப்பிட்ட பணத்தை மிச்சப்படுத்துவதற்காக யார் வேண்டுமானாலும் செய்யக்கூடிய வேலையை நீங்கள் செய்து உங்கள் நேரத்தையும், நேரத்தின் மதிப்பையும் வீணடிப்பதை நிறுத்துங்கள். ஒரு மணி நேரம் நீங்கள் உழைத்தால் ஒரு லட்சம் வர வாய்ப்பிருப்பின் அதுபோன்ற வேலையை விரும்பிச் செய்யுங்கள். உங்கள் நேரத்தின் மதிப்புக் கூடும்.

8. உங்களை நீங்கள் எப்படி வெளிப்படுத்துகிறீர்களோ, அப்படித்தான் இந்த உலகம் உங்களைப் பார்க்கும். உங்களின் மதிப்பை நீங்கள் உயர்த்தும்போதுதான், உங்களின் பொருளாதார நிலையும் உயரும். உங்களின் தோற்றம் மற்றும் உடையின் ஸ்டைலையும் நீங்கள் மாற்ற வேண்டும்.

9. நீங்கள் உங்களை எங்கு வெளிப்படுத்துகிறீர்கள் என்பதும் முக்கியம். பணம் அதிகம் வைத்திருப்பவர்கள் சந்திக்கும் அமைப்புகளில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். அங்கு உங்களின் திறனையும், பிசினஸ் மதிப்பையும் உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குங்கள், பணம் நிச்சயம் உங்களைத் தேடி வரும்.

10. பணம் உங்களைத் தேடி வர, பணத்திற்கு பின்னால் இருக்கும் அறிவைத் தேடிப் போக வேண்டும். உங்கள் துறையின் உச்சகட்ட அறிவு வரை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.  நீங்கள் சார்ந்திருக்கும் துறையில் உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள பணத்தையும் நேரத்தையும் செலவு செய்வதன் மூலம் உங்களின் தகுதியை மேம்படுத்திக்கொண்டால் பணம் தேடி வரும்.

11. நீங்கள் வளர்ந்து வளம்பெறத் தொடங்கும் காலத்தில், செல்வ மனநிலையில் இருங்கள். தேவைப்படுபவர்களுக்கு உதவும் மனநிலையில் இருக்க வேண்டும். உங்களைத் தேடி வரும் பணத்துக்கு நன்றி சொல்லுங்கள். சிறு சிறு உதவிகள் செய்வதால், பெரிய பண வாய்ப்புகள் உங்களைத் தேடி வருவதற்கான நம்பிக்கையை உருவாக்கும்.

12. சம்பாதித்த பணத்தை எதில் முதலீடு செய்வது, எப்படிப் பெருக்குவது என்பது உங்கள் ஒருவரால் மட்டுமே முடிவு செய்துவிட முடியாத விஷயம். நிதி ஆலோசகரின் உதவியுடன் சிறந்த சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். 

நீங்களும் பணக்காரர் ஆவதற்கு இந்த விதிகளைப் பின்பற்றிப் பார்க்கலாமே.

- ஸ்ரீதேவி.கே