
கோல்டு பாண்ட் முதலீடு... 15 முக்கிய அம்சங்கள்!
மத்திய அரசு, தங்கக் கடன் பத்திரங்களை முன்பு எப்போதாவது ஒருமுறைதான் விற்பனை செய்தது. தற்போது வாரத்தில் மூன்று நாள்கள் (திங்கள், செவ்வாய், புதன்) விற்பனை செய்து வருகிறது. 2017 டிசம்பர் வரை இது நடைமுறையில் இருக்கும். இதில் செய்யப்படும் முதலீட்டை முதிர்வின்போது, முந்தைய வாரத்தின் சராசரி தங்க விலை (24 காரட்) அடிப்படையில் பணமாகவே தருவார்கள். இந்த முதலீட்டின் 15 முக்கிய அம்சங்கள் இனி...

1. ரூ.20,000 வரையிலான முதலீட்டுக்கு ரொக்கப் பணமாகச் செலுத்தலாம். இதற்குமேல் என்றால் டி.டி, செக் மூலமே பணம் கட்ட வேண்டும்.
2. ஆன்லைன் மூலம் முதலீடு செய்யும்போது, கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி கிடைக்கும்.
3. தபால் அலுவலகங்கள், பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், பி.எஸ்.இ, என்.எஸ்.இ பங்குச் சந்தைகளில் இந்தப் பத்திரங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
4. 1, 5, 10, 50 மற்றும் 100 கிராம் மதிப்பில் வாங்கலாம். நிதியாண்டில் ஒருவர் அதிகபட்சம் நான்கு கிலோ மதிப்புள்ள தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.
5. காகித வடிவிலும், டீமேட் (எலெக்ட்ரானிக்) வடிவிலும் இந்தப் பத்திரங்களை வாங்கலாம்.
6. இந்தப் பத்திரங்களைக் கடனுக்கு ஜாமீனாகக் கொடுக்கலாம்.
7. நுழைவுக் கட்டணம், நிர்வாகக் கட்டணம் ஏதும் கிடையாது.
8. ஆரம்ப முதலீட்டு மதிப்புக்கு, ஆண்டுக்கு 2.5% வட்டி கிடைக்கும். இந்த வட்டி ஆறு மாதத்துக்கு ஒருமுறை தரப்படும்.
9. தங்கத்தின் விலை ஏற்றம் கூடுதல் லாபமாக இருக்கும்.
10. தனிநபர்களுக்கு மூலதன ஆதாய வரி (கேப்பிட்டல் கெயின் டாக்ஸ்) கிடையாது.
11. ஜிஎஸ்டி கிடையாது.
12. முதிர்வுக் காலம் 8 ஆண்டுகள்.
13. தேவைப்படும்பட்சத்தில் 5, 6, 7-வது ஆண்டுகளில் வெளியேற முடியும். அப்போது லாபத்துக்கு வரி கட்ட வேண்டி வரும்.
14. பி.எஸ்.இ, என்.எஸ்.இ பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு, பாண்டுகள்மீது வர்த்தகம் நடப்பதால் தேவைப்படும்போது விற்றுக்கொள்ள முடியும். அப்போது லாபத்துக்கு வரி கட்ட வேண்டி வரும்.
15. 2016 அக்டோபர் முதல், இது வரைக்கும் சுமார் 2,26,00,000 கிராம் தங்கம், பாண்ட் மூலம் வாங்கப்பட்டுள்ளது.
- சேனா சரவணன்