
வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள 3 துறைகள் 10 பங்குகள் அசத்தல் முதலீடு... ஆச்சர்ய லாபம்
சந்தை அவ்வப்போது இறக்கங்களுக்கு உட்பட்டாலும், தொடர்ந்து ஏற்றத்தின் போக்கில் வலுவான சப்போர்ட் நிலையுடன் நகர்ந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. ஏனெனில், சந்தையை ஏற்றத்தின்போக்கிலேயே தொடர்ந்து தக்கவைக்கும் வகையிலான காரணிகள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கின்றன.

கடந்த வாரம் புதன்கிழமையன்று அதிரடியாக அரசு வெளியிட்ட ஓர் அறிவிப்பு, பங்குச் சந்தையை மேலும் உச்சத்துக்குக் கொண்டு சென்றது. கிட்டதட்ட ரூ.7 லட்சம் கோடி நிதியானது இந்தியப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க பயன்படுத்தப்பட இருக்கிறது. இதில் பெருமளவு, உள்கட்டமைப்புத் துறையில் முதலீடு செய்யப்பட இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. மேலும், பொதுத்துறை வங்கிகளின் மூலதனத்தை அதிகரிப்பதற்காக ரூ.2,11,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், உள்கட்டமைப்புத் துறையும், பொதுத்துறை வங்கிகளும் பெரும் பலனடைய உள்ளன. பொருளாதாரம் தொய்வடைந்துவரும் இந்தச் சமயத்தில் அரசின் இந்த நடவடிக்கை சந்தைக்குப் பாசிட்டிவாகப் பார்க்கப்படுகிறது.
காலாண்டு முடிவுகளின் எதிர்பார்ப்புகள், அதிகரித்து வரும் லிக்விடிட்டி, ஹெவி வெயிட்டேஜ் பங்குகளின் சிறப்பான செயல்பாடு எனச் சந்தைக்குப் பாசிட்டிவான காரணிகளுக்குக் குறைவில்லை. அந்த வகையில் பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகர், துறைகளையும் பங்குகளையும் அலசி ஆராய்ந்து, வரும் காலங்களில் வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள மூன்று துறைகளையும் அதில் சிறப்பாகச் செயல்படக் கூடிய 10 பங்குகளையும் உங்களுக்காகக் கொடுத்துள்ளார்.
“வரும் காலங்களில் வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள துறைகளில் முக்கியமானவையாகத் தகவல் தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் பொதுத்துறை வங்கிகள் ஆகியவற்றைச் சொல்லலாம்.
தகவல் தொழில்நுட்பத் துறை
ஐ.டி துறை, கடந்த பல மாதங்களாக அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்குப்பிறகு பயத்திலேயே இருந்தது. இதனால் ஐ.டி துறை சார்ந்த நிறுவனப் பங்குகள் இறக்கமடைந்து முதலீட்டாளர்களைக் கவரக்கூடிய விலைக்கு இறங்கிவந்தன. ஆனால், தற்போது டாலர் வலுவிழந்ததால் ஐ.டி துறையின் லாப சதவிகிதம் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகி யுள்ளது. மேலும், ஐ.டி நிறுவனங்களில் சம்பள உயர்வு அதிகமில்லை.
அதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தைக் கணித்து, கூடுதல் நபர்களை வேலைக்கு எடுத்து வைக்கவில்லை. இப்போது வேலைக்கு எடுக்கும் பணியாளர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது. இதனால் பணியாளர்களுக்கான செலவுகள் குறைந்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பயமுறுத்திய அளவுக்கு எந்த பாலிசியையும் பெரிதாக எடுத்துச் செயல்படுத்தவில்லை. அவரால் தனியாக எதையும் செயல்படுத்த முடியாது என்பது தெளிவாகிறது.
மேலும், சர்வதேச அளவில் வளர்ச்சியும் நன்றாகவே இருக்கிறது. சர்வதேச அளவில் வளர்ச்சி நன்றாக இருந்தால், அதன் மூலம் ஐ.டி துறைக்கு நிச்சயம் பலன் இருக்கும். இப்படி பல காரணிகள் ஐ.டி நிறுவனங்களுக்கு பாசிட்டிவாக மாறியிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாகத் தொய்வடைந்துவந்த ஐ.டி துறை, வரும் காலத்தில் சிறப்பாகச் செயல்படும் வாய்ப்புள்ளது. அதன் அடிப்படையில் இந்தத் துறையில் நான்கு பங்குகளைக் கவனிக்கலாம்.
1. ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் (HCLTECH)
ஐ.டி துறையில் ஹெச்.சி.எல் தனக்கான சந்தையைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. இதன் வருமானம் கணிசமாகத் தொடர்ந்து உயர்ந்துகொண்டிருக்கிறது. சிவ் நாடார் தொடர்ந்து இதன் இயக்குநராகத் தொடர இருக்கிறார். சமீபத்தில் நல்ல டிவிடெண்ட் வழங்கியதுடன், பங்குகளை பைபேக் செய்வதாகவும் அறிவித்துள்ளது இந்த நிறுவனம்.
• தற்போதைய விலை : ரூ. 907.05
• டார்கெட் விலை : ரூ. 1,100
52 வார அதிக விலை : ரூ. 943.80
52 வார குறைந்த விலை : ரூ. 736.00
• மார்க்கெட் கேபிட்டலைசேஷன் : ரூ. 125,129.26 கோடி
• பிஇ விகிதம் : 14.28
• புத்தக மதிப்பு : ரூ. 236.65
• முக மதிப்பு : ரூ. 2.00
• டிவிடெண்ட் : 300.00%
2. டாடா எலெக்சி (TATAELXSI)
இது மற்ற ஐ.டி துறை நிறுவனங்களிலிருந்து வேறுபட்டு இன்னோவிட்டிவ் முறையில் தொழில் செய்து வருகிறது. இந்தத் தனித்தன்மையால் வருங்காலத்தில் சிறப்பாக வளர்ச்சியடையும்.

• தற்போதைய விலை : ரூ. 863.95
• டார்கெட் விலை : ரூ. 1,050
52 வார வார அதிக விலை : ரூ. 921.70
52 வார குறைந்த விலை : ரூ. 510.63
• மார்க்கெட் கேபிட்டலைசேஷன் : ரூ.5,393.14 கோடி
• பிஇ விகிதம் : 26.43
• புத்தக மதிப்பு : ரூ.91.02
• முக மதிப்பு : ரூ.10.00
• டிவிடெண்ட் : 160.00%
3. பெர்சிஸ்டென்ட் சிஸ்டம்ஸ் (PERSISTENT)
ஐ.டி துறை நிறுவனங்களுக்கிடையிலான போட்டியைத் தாண்டி இந்த நிறுவனம், தனக்கான சந்தையை உருவாக்கியுள்ளது. தற்போது வெளியான இதன் காலாண்டு முடிவுகள் சிறப்பாக உள்ளன.
இதன் டாலர் வருமானம் உயர்ந்துள்ளது. இது ஐ.பி.எம் நிறுவனத்துடன் வர்த்தக உடன்படிக்கை செய்துகொண்டுள்ளது. இணைப்பு, கையகப் படுத்துதல் போன்ற உத்திகளைக் கையாண்டு வருகிறது. வருங்காலத்தில் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
• தற்போதைய விலை : ரூ.656.75
• டார்கெட் விலை : ரூ.900
52 வார வார அதிக விலை : ரூ.707.00
52 வார குறைந்த விலை : ரூ.559.00
• மார்க்கெட் கேபிட்டலைசேஷன் : ரூ.5,246.40
• பிஇ விகிதம் : 17.30
• புத்தக மதிப்பு : ரூ.237.41
• முக மதிப்பு : ரூ.10.00
• டிவிடெண்ட் : 90.00%
4. சயன்ட் (CYIENT)
இதன் தற்போதைய மார்க்கெட் கேபிட்டலை சேஷன் ரூ.6,291.22. இது ஏரோனாட்டிக்ஸ், பாதுகாப்புத் துறை போன்ற தனித்துவமான பகுதிகளில் நன்கு கவனம் செலுத்திவருகிறது. இதன் வாடிக்கையாளர் பராமரிப்பு மிகச் சிறப்பாகவே உள்ளது. ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் சமீபத்தில் இதில் 11.67 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளது. காலாண்டு முடிவுகளும் நன்றாகவே உள்ளன. எல்.பி.எஸ் ஸ்குவார்ட் என்ற போர்ட்லேண்ட் சாஃப்ட்வேர் நிறுவனத்துடன் சேர்ந்து குளோபல் சாஃப்ட்வேர் லைசென்ஸுக்கான ஒப்பந்தத்தைப் போட்டுக் கொண்டுள்ளது.
• தற்போதைய விலை : ரூ.560.95
• டார்கெட் விலை : ரூ.690
52 வார வார அதிக விலை : ரூ.569.80
52 வார குறைந்த விலை : ரூ. 405.00
• மார்க்கெட் கேபிட்டலைசேஷன் : ரூ.6,301.91
• பிஇ விகிதம் : 17.62
• புத்தக மதிப்பு : ரூ.188.08
• முக மதிப்பு : ரூ.5.00
• டிவிடெண்ட் : 110.00%
ஊடகத் துறை
ஊடகத் துறையில் விஷுவல் மீடியா ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஜி.எஸ்.டி, பணமதிப்பு நீக்கம் போன்றவற்றால் இதன் வளர்ச்சி சற்று பாதிப்படைந்தது. ஆனால், இப்போது மீண்டு வந்திருக்கிறது. இனிமேல் வருங்காலத்தில் டிவிகளுக்கு விளம்பர வருமானம் அதிகமாக இருக்கும். அதாவது, விளம்பர வருமானம் மட்டும் அடுத்த மூன்றாண்டுகளில் 10-15 சதவிகித ஆண்டு வளர்ச்சி இருக்கும். இந்தத் துறை சிறப்பாகச் செயல்படக்கூடிய வாய்ப்பு நிறையவே இருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய பங்குகள்...

1. ஜீ என்டர்டெயின்மென்ட் (ZEEL)
இதன் காலாண்டு முடிவு சமீபத்தில் வெளியானது. அதன் எபிட்டா மார்ஜின் 31% இருக்கிறது. நிகர லாபம் 148% அதிகரித்திருக்கிறது. இது அருமையான வளர்ச்சி. மீடியா துறையில் அனைத்திந்திய அடிப்படையில் மார்க்கெட் லீடராக ஜீ என்டர்டெயின்மென்ட் இருக்கிறது. தொடர்ந்து தனது மார்க்கெட் லீடர்ஷிப்பை தக்கவைத்துக்கொள்ளவும் அதனால் முடிகிறது. மீடியா துறையில் செய்தி, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு என பல்வேறு தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் இந்த நிறுவனம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
• தற்போதைய விலை : ரூ.532.75
• டார்கெட் விலை : ரூ.650
52 வார வார அதிக விலை : ரூ.589.90
52 வார குறைந்த விலை : ரூ.427.65
• மார்க்கெட் கேபிட்டலைசேஷன் : ரூ.51,067.06 கோடி
• பிஇ விகிதம் : 22.64
• புத்தக மதிப்பு : ரூ.69.31
• முக மதிப்பு : ரூ.1.00
• டிவிடெண்ட் : 250.00%
2. சன் டிவி (SUNTV)
எத்தனை புதிய சேனல்கள் வந்தாலும், சன் டிவி தனது சந்தையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். இதன் நிதிநிலை உள்பட ஃபண்டமென்டல் காரணிகள் வலுவாகவே இருக்கின்றன.
• தற்போதைய விலை : ரூ.808.40
• டார்கெட் விலை : ரூ.990
52 வார வார அதிக விலை : ரூ.946.00
52 வார குறைந்த விலை : ரூ.434.15
• மார்க்கெட் கேபிட்டலைசேஷன் : ரூ.31,844.01 கோடி
• புத்தக மதிப்பு : ரூ.102.22
• முக மதிப்பு : ரூ.5.00
• டிவிடெண்ட் : 200.00%
3. டிவி 18 பிராட்காஸ்ட் (TV18BRDCST)
டிவி 18 நிறுவனமும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. செய்தி, பங்குச் சந்தை மற்றும் பொழுது போக்கு எனப் பல்வேறு பிரிவுகளில் முன்னணியில் இருப்பதோடு, எல்லாத் தரப்பு மக்களையும் கவரும் வகையில் தனது பிசினஸைத் திட்டமிட்டுச் செயல்படுத்தி வருகிறது.
• தற்போதைய விலை : ரூ.40.35
• டார்கெட் விலை : ரூ.55
52 வார வார அதிக விலை : ரூ.50.00
52 வார குறைந்த விலை : ரூ.33.05
• மார்க்கெட் கேபிட்டலைசேஷன் : ரூ.6,908.87 கோடி
• பிஇ விகிதம் : 335.83
• புத்தக மதிப்பு : ரூ.19.43
• முக மதிப்பு : ரூ.2.00
பொதுத்துறை வங்கிகள்
பொதுத்துறை வங்கிகளின் காலம் இனி சிறப்பாக இருக்கும் என்று நிச்சயமாகச் சொல்லலாம். கட்டுரையின் தொடக்கத்திலேயே சொல்லியிருப்பதுபோல், மத்திய அரசு பொதுத் துறை வங்கிகளுக்குப் பெருமளவு நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதால், அவற்றின் வளர்ச்சியும் கணிசமாக அதிகரிக்கும் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.
பொதுத்துறை வங்கிகளில் முன்னணி வங்கிகள் பலவும் தனியார் வங்கிகளைக் காட்டிலும் நல்ல சேவையை வழங்கி வருகின்றன. மேலும், ரிசர்வ் வங்கியின் அழுத்தத்தினால் மிக வேகமாக தங்கள் வாராக் கடனைத் தள்ளுபடி (write off) செய்தது. இனிமேலும் தள்ளுபடி இருக்குமா என்பது சந்தேகமே. வாராக் கடனின் பெரும் பகுதியைத் தற்போது நீக்கிவிட்டதால், அதிகபட்சமாக இன்னுமொரு காலாண்டுக்குப் பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு சிறப்பாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதற்குப்பிறகு ஏற்றத்தின் போக்கில் நகர்வுகளைப் பார்க்கலாம். கவனிக்க வேண்டிய வங்கிப் பங்குகள்...
1. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBIN)
பொதுத்துறை வங்கிகளில் முதன்மையாக எஸ்.பி.ஐ வங்கி விளங்குகிறது. சுமார் மூன்று லட்சம் பணியாளர்கள், 24,000 கிளைகள், 59,000 ஏ.டி.எம்-களுடன் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடு களிலும் சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. 37 நாடுகளில் 198 கிளைகள் உள்ளன. 42 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது.
• தற்போதைய விலை : ரூ.321.90
• டார்கெட் விலை : ரூ.450
52 வார வார அதிக விலை : ரூ.328.05
52 வார குறைந்த விலை : ரூ.235.00
• மார்க்கெட் கேபிட்டலைசேஷன் : ரூ.279,807.91 கோடி
• பிஇ விகிதம் : 125.64
• புத்தக மதிப்பு : ரூ.210.45
• முக மதிப்பு : ரூ.1.00
• டிவிடெண்ட் : 260.00%
2. பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB)
7,000 கிளைகள், 10,000-க்கும் மேலான ஏ.டி.எம்-களுடன் எட்டு கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது.
• தற்போதைய விலை : ரூ.205.15
• டார்கெட் விலை : ரூ.260
52 வார அதிகம் : ரூ.206.55
52 வார குறைவு : ரூ.112.00
• மார்க்கெட் கேபிட்டலைசேஷன் : ரூ.43,982.87 கோடி
• புத்தக மதிப்பு : ரூ.180.18
• முக மதிப்பு : ரூ.2.00
3. பேங்க் ஆஃப் பரோடா (BANKBARODA)
பொதுத்துறை வங்கிகளில் எஸ்.பி.ஐ வங்கி அளவுக்கு இது இல்லையென்றாலும், மற்ற வங்கிகளுடன் ஒப்பிடுகையில் முன்னணியில் இருக்கிறது. பேங்க் ஆஃப் பரோடாவில் தலைமை வகிக்கும் பி.எஸ்.ஜெயக்குமார் சிட்டி பேங்கில் பணியாற்றியவர். இந்த வங்கி, 5,500 கிளைகள், 10,000-க்கும் மேலான ஏ.டி.எம்-களுடன் செயல்பட்டு வருகிறது.
• தற்போதைய விலை : ரூ.184.25
• டார்கெட் விலை : ரூ.240
52 வார வார அதிக விலை : ரூ.202.50
52 வார குறைந்த விலை : ரூ.133.50
• மார்க்கெட் கேபிட்டலைசேஷன் : ரூ.43,551.98 கோடி
• புத்தக மதிப்பு : ரூ.186.40
• முக மதிப்பு : ரூ.2.00
• டிவிடெண்ட் : 60.00%
குறிப்பு : புள்ளிவிவரங்கள் 25.10.17 நிலவரப்படி. இலக்கு விலை ஓராண்டுக்கு. பங்கின் விலை குறையும்போது வாங்கிச் சேர்ப்பது லாபகரமாக இருக்கும்.
- ஜெ.சரவணன்