
மியூச்சுவல் ஃபண்ட்... அதிகபட்சம் எவ்வளவு முதலீடு செய்யலாம்?
நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து ‘மியூச்சுவல் ஃபண்ட் - செல்வத்தைப் பெருக்கும் முதலீடு’ என்கிற தலைப்பில் கரூர் நகரில் விழிப்பு உணர்வுக் கூட்டத்தை நடத்தின.

முதலில் பேசிய ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி, ‘‘நம்மிடம் இன்று இருக்கும் 2,000 ரூபாயின் மதிப்பு, பணவீக்கம் காரணமாகக் குறைந்து, 30 ஆண்டுகள் கழித்து வெறும் ரூ.302-ஆக இருக்கும். எனவே, விலைவாசி உயர்வைத் தாண்டி வருமானம் தருகிற மாதிரி உங்கள் முதலீடு இருக்க வேண்டும். இதற்குச் சரியான முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்வது அவசியம்” என்றார்.

அடுத்து பேசிய ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்வி உதவித் துணைத் தலைவரான எஸ்.குருராஜ், ‘‘குறுகிய காலம், நடுத்தர காலம், நீண்ட காலம் என நமக்குப் பணம் தேவைப்படும். இந்த இலக்கு கள் சரியாக நிறைவேறுவது சரியான முதலீட்டுத் திட்டங்களின் தேர்வில்தான் இருக்கிறது” என்றார். லிக்விட் ஃபண்டில் அரை மணி நேரத்தில் ரூ.2 லட்சம் வரை ஆன்லைன் மூலம் பணம் எடுக்கும் வசதி பற்றியும் அவர் விளக்கினார்.
சிறப்புரையாற்றிய முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், ‘‘கட்டண விகிதம் குறைவாக உள்ளது என்பதற்காக மட்டும் ஒரு ஃபண்டை தேர்ந்தெடுக்கக் கூடாது. கட்டணம் சிறிது கூடுத லாக இருந்தாலும் தொடர்ந்து நல்ல வருமானம் தருகிறது என்றால், அந்த ஃபண்டை முதலீட்டுக்குத் தேர்வு செய்யலாம்’’ என்றார்.

இறுதியாக வாசகர் ஒருவர், மியூச்சுவல் ஃபண்டில் அதிகபட்சம் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்று கேட்டார். அதற்கு நாகப்பன், ‘‘வரம்பு எதுவும் இல்லை. வருமான வரிச் சலுகை வேண்டும் என்கிறவர்கள் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டை தேர்ந்தெடுக்கலாம். இதில் ஒரு நிதியாண்டில் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்’’ என்றார்.
- சி.சரவணன்
படங்கள்: நா.ராஜமுருகன்