ஃபண்ட் டேட்டா! - 3 - எல் & டி எமர்ஜிங் பிசினஸஸ் ஃபண்ட்... இளம் வயதினருக்கு ஏற்ற ஃபண்ட்!

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)
இந்த வாரம் ஒரு ஸ்மால்கேப் ஃபண்டை அலச உள்ளோம். பொதுவாக நாம் அலச எடுத்துக்கொள்ளும் ஃபண்டுகள் குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது நடப்பில் இருந்தவையாக இருக்க வேண்டும் என்ற ஒரு கொள்கையை வைத்துள்ளோம். அந்தக் கொள்கை இந்த ஃபண்டுக்காகத் தளர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஃபண்ட் ஆரம்பிக்கப்பட்டது 2014-ம் ஆண்டு, மே மாதம். வெறும் மூன்றரை ஆண்டுகளே ஆகிறது. இந்தக் குறுகிய காலத்தில் ஒரு ஃபண்டினுடைய அல்லது ஃபண்ட் மேனேஜரின் முழு செயல்பாடும்/ திறமையும் தெரிய வராது. இருந்தபோதிலும், இந்த ஃபண்டின் சிறந்த செயல்பாட்டை வைத்து, பரிந்துரை செய்கிறோம்.

ஆகவே, ஹை ரிஸ்க் எடுக்கத் தயாராக உள்ள மற்றும் நீண்ட காலத்துக்கு அதாவது 10 வருடங்களுக்கு மேலாகப் பணம் தேவையில்லாத முதலீட்டாளர்கள் மட்டுமே இந்த ஃபண்டில் முதலீட்டை மேற்கொள்ளலாம்.
இது ஒரு ஸ்மால்கேப் ஃபண்டாகும். இந்த ஃபண்ட் வைத்திருக்கும் பங்குகளின் சராசரி சந்தை மதிப்பு ரூ.5,295 கோடியாகும். தற்போது ரூ.2,200 கோடிக்கும் மேலான சொத்துகளை நிர்வகித்து வருகிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் மிட் அண்ட் ஸ்மால்கேப் பங்குகள் பொதுவாக நல்ல லாபத்தை முதலீட்டாளர்களுக்கு ஈட்டித் தந்திருக்கின்றன.

பல மிட் அண்டு ஸ்மால்கேப் ஃபண்டுகள் தங்களது பெஞ்ச்மார்க் குறியீடுகளை பீட் செய்ய தத்தளிக்கும் இந்தத் தருணத்தில், இந்த ஃபண்ட் இலகுவாக தனது பெஞ்ச்மார்க் மற்றும் கேட்டகிரி ஆவரேஜைவிட தொடர்ந்து கடந்த 1, 2 மற்றும் மூன்று வருட காலங்களில் அதிகமான வருமானத்தை ஈட்டித் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறிய நிறுவனங்களை இந்த ஃபண்ட், எமர்ஜிங் பிசினஸஸ் என எடுத்துக்கொள்கிறது. சிறிய நிறுவனங்கள், உறுதியாக இருக்கும் பெரிய நிறுவனங்களைவிட வேகமாக வளரும் என இந்த ஃபண்ட் நம்புகிறது. மேலும், பொருளாதாரம் வேகமாக வளரும்போது, சிறிய நிறுவனங்களுக்கு வளர்ச்சி வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் எனவும் இந்த ஃபண்ட் நம்புகிறது.

தவிர, பெரிய நிறுவனப் பங்குகள் அதிகமாக ஆராயப்படு கின்றன; அதனால் பலரும் அந்த நிறுவனப் பங்குகளை வாங்கி வைத்துள்ளனர். அதே அளவு ஆராய்ச்சியும், ஹோல்டிங்ஸும் சிறிய நிறுவனப் பங்குகளுக்குக் கிடைப்பதில்லை. இந்த இடைவெளியைத்தான் இந்த ஃபண்ட் நிறைவு செய்கிறது.
கடந்த 2002-ம் ஆண்டு ரூ.100 கோடிக்கு மேல் லாபத்தை ஈட்டிய நிறுவனங்கள் இந்தியாவில் 73-ஆக இருந்தன. அதுவே 2016-ல் 375-ஆக உயர்ந்துள்ளது. ஆக, பல சிறிய நிறுவனங்கள் பெரிதாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த வளர்ச்சியைத்தான் இந்த ஃபண்ட் பிடிக்கப் பார்க்கிறது.
இதன் ஃபண்ட் மேனேஜர்கள் கரண் தேசாய் மற்றும் சௌமேந்திர நாத் லாஹிரி ஆவார்கள். இந்த ஃபண்ட் நிறுவனத்தின் பெரும்பாலான ஈக்விட்டி திட்டங்கள், கடந்த சில ஆண்டு களாக நன்றாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஃபண்ட் ஆரம்பித்த போது (மே 12, 2014) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம் தற்போது ரூ.2,70,960-ஆக உள்ளது. இது சி.ஏ.ஜி.ஆர் அடிப்படையில் 32.32% ஆகும்.
லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகளில் இந்த ஃபண்ட் 2 சதவிகிதத்துக்கும் குறைவாகவே வைத்துள்ளது. கிட்டத்தட்ட 50% மிட் கேப் நிறுவனப் பங்குகளிலும், எஞ்சியது (48%) ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
எந்தப் பங்கிலும் 3 சதவிகிதத்துக்கு மேல் ஹோல்டிங்ஸை வைத்துக் கொள்ளவில்லை. ஸ்மால் அண்டு மிட் கேப் பங்குகளில் ரிஸ்க் அதிகம் என்பதால், பரவலாக மொத்தம் 72 பங்குகளில் தனது முதலீட்டை வைத்துள்ளது.

இதன் பீட்டா 1.05 என்ற அளவிலும், ஆல்ஃபா உன்னதமாக 18.46 என்ற அளவிலும் உள்ளது. பங்குகளில் கிட்டத்தட்ட 91% முதலீட்டையும், எஞ்சியதை கேஷாகவும் வைத்துள்ளது.
டிசம்பர் 11, 2017-லிருந்து ரூ.2 லட்சத்துக்கு மேல் வாங்குவதைத் தடை செய்வதாக அறிவித்துள்ளது இந்த ஃபண்ட். ஒரு நாளில் ஒரு பான் கார்டுக்கு ரூ.2 லட்சம் வரைக்கும் மொத்தமாகவோ அல்லது எஸ்.ஐ.பி, எஸ்.டி.பி மூலமாகவோ முதலீட்டை மேற்கொள்ளலாம்.
யாருக்கு உகந்தது?
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் அனுபவமுள்ள முதலீட்டாளர்கள், அதிக வருமானத்தைப் பெறுவதற்காக அதிக ரிஸ்க் எடுக்க விரும்பும் முதலீட்டாளர்கள், இளம் வயதினர் அல்லது பணம் உபரியாக உள்ளவர்கள், நீண்ட காலத்திற்கு முதலீட்டுப் பணம் தேவைப்படாத முதலீட்டாளர்கள், செல்வத்தைப் பெரிய அளவில் உருவாக்க/ வளர்க்க விரும்புபவர்கள் போன்றவர்களுக்கு இந்த ஃபண்ட் ஏற்றது.
யார் முதலீடு செய்யக்கூடாது?
குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உறுதியான/ நிலையான வருமானத்தை விரும்பு பவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள் இந்த ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டாம்.
படம்: தி.குமரகுருபரன்