
கேள்வி - பதில்

சில்ட்ரன் கிஃப்ட் ஃபண்ட் பற்றி கொஞ்சம் விளக்கிச் சொல்லவும்!
ஏ.மகேஸ்வரன்
ஸ்ரீனிவாசன், நிதி ஆலோசகர், மணிகேர்

“குழந்தை களின் கல்விக் கட்டணச் செலவு என்ற இலக்கு நோக்கிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டமே சில்ட்ரன் கிஃப்ட் ஃபண்ட்.
இந்தத் திட்டம், பொதுவான ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகத் தெரிந்தாலும், சில்ட்ரன் கிஃப்ட் ஃபண்ட் எனப் பெயரிடப்பட்டிருப்ப தால், மனரீதியாகவே இந்தத் திட்டம் குழந்தைகளுக்கான செலவுக்குரியத் திட்டமென்ற எண்ணத்தோடு, இதரச் செலவுகளுக்கு இதைப் பயன்படுத்தத் தோன்றாது. இந்த ஃபண்டில் முதலீடு செய்யப்படும் தொகையானது 75% ஈக்விட்டி சார்ந்த முதலீட்டிலும், 25% கடன் சார்ந்த முதலீட்டிலும் பிரித்துச் செய்யப்படுகிறது.
பிறந்த குழந்தையில் தொடங்கி 18 வயது வரை இந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகையில், குழந்தைக்கு 18 வயதாகும் வரை முதலீட்டைத் திரும்ப எடுக்க இயலாதபடி ‘லாக் இன்’ இருக்கும். இரண்டாவது வகையில் முதலீடு செய்யப்பட்ட தொகையை, எவ்வித சுமையும் இல்லாமல் மூன்று வருட முதலீட்டிற்குப்பிறகு தேவைப்பட்டால் எடுக்கலாம்.
இந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு குழந்தையின் பெற்றோர், தாத்தா, பாட்டி என்றில்லாமல், எந்தச் சொந்தக்காரர் களுக்கும் உரிமை உண்டு. இந்த முதலீட்டை மொத்த தொகையாகவோ அல்லது எஸ்.ஐ.பி மூலமோ செலுத்தலாம். இந்தத் திட்டத்தில் குரோத் ஆப்ஷன் மட்டுமே உண்டு; டிவிடெண்ட் ஆப்ஷன் கிடையாது.”

அனில் அம்பானியின் நிறுவனங்களின் நிதி நிலைமை பின்னடைவைச் சந்திப்பதாகச் செய்திகள் வருகின்றன. நான் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருக்கிறேன். இதைத் தொடரலாமா?
தனபால்
என்.விஜயகுமார், நிதி ஆலோசகர்
“அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் ஆம்ஃபி மற்றும் செபி அமைப்புகளால் கண்காணிக்கப்பட்டுக் கட்டுப்படுத்தப்படுவதால், ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் குறித்து எவ்விதக் குழப்பமும் கொள்ளத் தேவையில்லை. அதேபோல, அனில் அம்பானி குழும ரிலையன்ஸ் பங்குகள் மற்றும் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்து முதலீட்டாளர்கள் குழப்பமடையக்கூடாது.
ஏனெனில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைப் பொறுத்தவரையில், ஃபண்ட் மேனேஜரின் திறமையின் அடிப்படையிலே அது கொடுக்கும் வருமானம் இருக்கிறது.
நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள ஃபண்ட் என்ன வருமானம் கொடுத்து வருகிறது என்பதை அறிந்து, அதற்கேற்ப முதலீட்டு முடிவை எடுக்கவும். சரியான முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்வதில் குழப்பம் இருந்தால், நிதி ஆலோசகர்களின் உதவியை நாடுவது நல்லது.”
லிக்விட் ஃபண்டிலிருந்து ஈக்விட்டி ஃபண்டிற்கு எஸ்.டி.பி செய்யும்போது எப்படி வருமான வரி கணக்கிடப்படும்?

பி.சுரேஷ்
ஸ்ரீகாந்த் மீனாட்சி, ஃபண்ட்ஸ் இந்தியா
“சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட் மென்ட் பிளான் (எஸ்.டி.பி) என்பது ஒரு ஸ்விட்ச் என்ற வகையில்தான் பார்க்கப்படும். ஸ்விட்ச் என்பது பணத்தை ஒரு ஃபண்டிலிருந்து வெளியே எடுப்பதற்குச் சமம் என்பதால், இதுவும் ரிடெம்ப்ஷனாகக் (Redemption) கணக்கில் கொள்ளப்படும். ஆதலால், இப்படி எடுக்கப்பட்ட அல்லது நகர்த்தப்பட்ட பணத்திற்கு (லாபத்திற்கு மட்டும்) வருமான வரிச் செலுத்த வேண்டியிருக்கும்.”

என் பெயரில் உள்ள நிறுவனப் பங்குகளை மகளின் பெயருக்கு மாற்ற என்ன செய்ய வேண்டும்?
குமரேசன்
எஸ்.பாரதிதாசன், நிதி ஆலோசகர்.
“உங்களுடைய மகளின் பெயரில் புதிதாக டீமேட் அக்கவுன்ட் தொடங்க வேண்டும். அதன்பிறகு உங்கள் மகளின் பெயருக்கு மாற்றிக்கொள்ளலாம்.”
“புறநகர்ப் பகுதியில் வசிக்கும் நான், தனியார் வங்கியில் கடனுதவி பெற்றுத் தனி வீடு கட்டியிருக்கிறேன். தற்போது அந்த வீட்டின் மீது ஒரு தளம் கட்ட அனுமதி வாங்க வேண்டுமா? இதற்கான நடைமுறை என்ன?”

கல்யாணசுந்தரம்
ஆறுமுகநயினார், சொத்து ஆலோசகர்
“தாங்கள் முதலில் கட்டிய போது உள்ளாட்சியில் வரைபட அங்கீகாரம் வாங்கினீர்களா என்று சொல்லவில்லை. புதிதாகத் தளம் கட்டினாலும் கூடுதல் கட்டுமான பணிகள் மேற்கொண்டாலும் உரிய அனுமதி பெற்ற பின்பே செய்ய வேண்டும். தகவலுக்கு உள்ளாட்சி அமைப்பை அணுகவும்.”

எங்களுடைய பூர்வீக சொத்து (7 ஏக்கர் தோட்டம்) அப்பாவின் பெயரில் இருக்கிறது. நாங்கள் சகோதரர்கள் நான்கு பேர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. ஒரு தம்பி மட்டும் சொத்தைப் பிரிக்க உடன்படவில்லை. அவனுக்கு உரிய பங்கை மட்டும் விட்டுவிட்டு, அப்பாவையும் சேர்த்து நாங்கள் நால்வரும் சொத்துகளைப் பிரித்துக்கொள்ள சட்டத்தில் இடமுள்ளதா?
ரஞ்சித், திருச்சி.
அழகுராமன், சட்ட ஆலோசகர்
“பூர்வீக சொத்து என்பதால் உங்களுடைய அப்பா உட்பட சகோதரர்கள் அனைவருக்கும் பாகத்தில் உரிமை உண்டு. அதில், உங்களுக்கு உடன்படாத ஒரு தம்பியின் பாகத்தை மட்டும் தனியாகப் பிரித்து, நான்கு எல்லைகள் குறிப்பிட்டு, அவருக்கு உண்டான பாக அளவுகள் குறையாதவாறு அடையாளப்படுத்தப்பட வேண்டும்.
அந்தக் குறிப்பிட்ட பாகம் அவரது பாகமெனத் தெளிவாக்கி விட்டு, அந்தச் சொத்தை உங்களுக்குள் பிரிவினை செய்துகொண்டு, அதில் (உடன்படாத தம்பி தவிர்த்த) அனைவரும் கையொப்பமிட்டு பாகப்பிரிவினையாகவோ, குடும்ப உடன்படிக்கை ஆவணமாகவோ (Family Arrangement) ஒன்றை ஏற்படுத்தி, அதைச் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள, சட்டப்படி வழிவகை உள்ளது.
உங்களது தம்பி அதை ஆட்சேபிக்க முடியாது. உங்களுடன் உடன்படாத தம்பியின் பாகமானது இந்த ஆவணத்தின் மூலமாக பாதுகாக்கப்படும் ஒரு சொத்தாகவே கருதப்படும். இந்தப் பாகப் பிரிவினையில் அவருக்கு எந்த விதத்திலும் இழப்பில்லை என்பதால் எதிர்ப்பதற்கும் காரணம் இல்லை.”
வீட்டுக்கடன் வாங்கி வீடு கட்டியுள்ளேன். மாதா மாதம் ரூ.7,997 கட்டி வருகிறேன். மொத்தம் 20 ஆண்டுகள் மாதத் தவணை கட்ட வேண்டியுள்ள சூழலில், ஆறு ஆண்டுகள் கழிந்துவிட்டன. தற்போது மீதமுள்ள தொகையை ஒரே தவணையாகக் கட்டி செட்டில்மென்ட் செய்வதென்றால் அதற்கு என்ன வழிமுறை?

மதன், பெங்களூர்
ஆர்.கணேசன், முதன்மை இயக்க அலுவலர், நவரத்தினா ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட்
‘‘பொதுத்துறை அல்லது தனியார் வங்கிகள், நிதி நிறுவனங் களில் பெற்ற வீட்டுக் கடன் தொகையை, குறிப்பிட்ட ஆண்டுகள் வரை கட்டிவிட்டு, மீதி கடன் தொகையை மொத்தமாக ஒரே தவணையாக அடைக்கும்போது, அபராதத்தொகையாக 2% வட்டியும் சேர்த்துக் கட்ட வேண்டியிருந்தது.
ஆனால், தற்போது ரிசர்வ் வங்கி விதிமுறைகளில் செய்துள்ள மாற்றத்தின்படி, அபராதத்தொகை 2 சதவிகிதத்தை வசூலிப்பது தடை செய்யப் பட்டுள்ளது. எனவே, மீதமுள்ள கடன் தொகையை மட்டும் கொடுத்து, ஒரே தவணையில் அடைத்தால் போதுமானது.
தொகுப்பு: தெ.சு.கவுதமன்
கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.