
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... ரிஸ்க்குக்கு ஏற்ப ரிட்டர்ன்!
நாணயம் விகடன் மற்றும் ஆதித்யா பிர்லா கேபிட்டல் நிறுவனம் இணைந்து ‘மியூச்சுவல் ஃபண்ட் - செல்வத்தைப் பெருக்கும் முதலீடு’ என்ற தலைப்பில் கும்பகோணத்தில் முதலீட்டு விழிப்பு உணர்வுக் கூட்டத்தை நடத்தின. இந்தக் கூட்டத்தில் முதலில் பேசிய ஆதித்யா பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்டின் தமிழ்நாடு தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி, “நாம் கனவு காணும் வாழ்க்கையை வாழ சரியான முதலீடுகள் அவசியம். எவ்வளவு சீக்கிரம் முதலீட்டைத் தொடங்குகிறோமோ அவ்வளவு சீக்கிரம் நம்முடைய கனவுகளை நம்மால் நிறைவேற்றிக்கொள்ள முடியும்” என்றார்,

அடுத்து பேசிய எஸ்.குருராஜ், ‘‘நாம் செய்யும் ஒவ்வொரு முதலீடுகளையும் தெளிவாக அறிந்துகொண்டு முதலீடு செய்ய வேண்டும். முதலீடுகளின் சாதக, பாதகம் அனைத்தையும் தெரிந்து கொண்டால்தான் நம் தேவைக்கேற்ப முதலீடுகளைத் திட்டமிட்டு, நம் முதலீட்டைப் பாதுகாத்துக்கொள்ளவும் முடியும்’’ என்றார்.

தொடர்ந்து பேசிய முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், “உலகில் பெரும் செல்வந்தர்களாக வளர்ந்தவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் பார்த்தால் எல்லோருக்கும் ஓர் ஒற்றுமை இருக்கும். அதுதான் ரிஸ்க் எடுப்பது. எவ்வளவு ரிஸ்க் எடுக்கிறோமோ அவ்வளவு ரிட்டர்ன் கிடைக்கும். ஆனால், நம்முடைய ரிஸ்க் சரியான பாதையில் இருக்க வேண்டும்” என்றார்.முதலீடு செய்வதில் தவிர்க்க வேண்டிய விஷயங்களையும் ஹைலைட்டாகச் சொல்லி முடித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வாசகர்கள், எது சரியான முதலீடு என்கிற திருப்தியுடன் வீடு திரும்பினர்.
ஜெ.சரவணன்
படங்கள்: கே.குணசீலன்