
சித்தார்த்தன் சுந்தரம்நாணயம் புக் செல்ஃப்
புத்தகத்தின் பெயர் : மை ஃபர்ஸ்ட் புக் ஆஃப் மணி (My First Book of Money)
ஆசிரியர்கள் : ரவி சுப்ரமணியன், ஷோமா நாராயணன்
பதிப்பாளர் : Kumon Publishing

பணம் என்பது வாழ்க்கையில் ஓர் இன்றியமை யாத அங்கம். அதில் ஆரம்பத்திலேயே கவனம் செலுத்தாவிட்டால், வாழ்வே பலருக்கு நரகமாகிவிடும். சரி, அதற்கு என்ன செய்யலாம்?
இளம் வயதிலேயே பணம் என்றால் என்ன, அதன் முக்கியத்துவம் என்ன, சேமிப்பு, முதலீடு போன்றவற்றினால் ஏற்படும் நன்மைகள் என்ன, கடன் எப்போது, எதற்கு வாங்க வேண்டும் அல்லது வாங்கக் கூடாது போன்ற நிதிசார்ந்த தகவல்களை வீட்டில் பெற்றோர்கள் குழந்தை களுக்குச் சொல்லித் தருவதன் மூலம் அவர்களை வருமானத்துக்குள் வாழக் கூடியவர்களாக, சிரமப்படாமல் வாழ்க்கையை நடத்தக்கூடியவர்களாக உருவாக்கலாம்.

இதற்கு அடித்தளம் போடும் வகையில் சமீபத்தில் வெளியான புத்தகம் `மை ஃபர்ஸ்ட் புக் ஆஃப் மணி.’ இதை எழுதியிருப்பவர்கள் ரவி சுப்ரமணியன், ஷோமா நாராயணன். ரவி சுப்ரமணியன் சிறுவர்களுக்காக எழுதியிருக்கும் முதல் புத்தகம் இது. இதற்கு முன்பு அவர் நிதித் துறை சார்ந்து ஒன்பது விறுவிறுப்பான நாவல்களை எழுதியிருக்கிறார். இவர், தொழில் ரீதியில் ஒரு வங்கியாளர்.
இந்தப் புத்தகம் ஒரு குறுநாவல் போல ஒரு சில கதாபாத்திரங்களைக் கொண்டு, பணம் குறித்த அடிப்படை விஷயங்கள் எட்டு வயதுக்கு மேல் உள்ள சிறுவர், சிறுமியர்களுக்குப் புரியும்படி எளிய ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருக்கிறது. இதில் அமன், அன்யா என்கிற 17 வயது நிரம்பிய இரட்டைக் குழந்தைகளுக்கு அவர்களுடைய பெற்றோரும், பாட்டியும் பணத்தின் முக்கியத்துவம், முதலீடு, சேமிப்பு, இன்ஷூரன்ஸ், கடன், ஏ.டி.எம் போன்ற பல விஷயங்கள் குறித்து சிறிய உதாரணங்கள் மூலம் விளக்கிக் கூறுகிறார்கள்.
இன்றைக்கு நாம் உபயோகப் படுத்தும் `கரன்சி’ பழக்கத்துக்கு வந்தது எப்படி என்பது குறித்த வரலாற்றில் ஆரம்பிக்கும் இந்தப் புத்தகம் நிதி நிர்வாகம், முதலீடு ஆகியவற்றை விளக்கிச் சொல்வதோடு முடிகிறது.
ஏ.டி.எம் என்றால் என்ன, கிரெடிட் கார்டு என்றால் என்ன, அதைக் கண்டுபிடித்தவர்கள் யார், அதனுடைய உபயோகம் என்ன எனச் சில செய்திகள் பெட்டிச் செய்திகளாகவும், வரைபடங் களாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. இது, படிப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது.

வீட்டில் அம்மா, அப்பா ஆகியோரின் அரவணைப்பில் வளர்ந்துவரும் அமனும், அன்யாவும் ஹாஸ்டலில் சேர்ந்து படிக்க நேர்கையில் பணத்தின் முக்கியத்துவத்தையும், அதற்கான மதிப்பையும் எப்படி உணர் கிறார்கள் என்பதையும் நூலாசிரியர்கள் சுட்டிக்காட்டி யுள்ளனர். தேவைக்கும் (Need), விருப்பத்துக்கும் (Want) இடையே என்ன வித்தியாசம் என்பதைச் சுருக்கமாகச் சொல்லி, முதலில் தேவைக்கு முக்கியத்துவம் தரும் படியும், அதன் பின் விருப்பத்துக்குச் செலவிடும்படியும் எளிய உதாரணம் மூலம் விளக்கப் பட்டிருக்கிறது.
அதுபோல, தொழில் ஒன்றை நடத்திவரும் அமன், அன்யாவின் தாயாரை அவருடைய தோழி கோவாவுக்குச் சுற்றுலா செல்ல அவரை மட்டும் அழைக்கிறார். தினம் தினம் வேலை செய்வ திலிருந்து ரிலாக்ஸாக `தோழியர்’ அனைவரும் சென்று வரலாம் என அழைக்க, அதற்கு அமனின் அம்மா மறுத்துவிடுகிறார்.
வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் ஏன் என்று கேட்க அவர், `இவர்களோடு சுற்றுலா சென்றால் பல இடங்களைப் பார்ப்பதைவிட ஷாப்பிங் என்று சொல்லி பொழுதைக் கழிப்பார்கள். அதனால் பயனெதுவும் இல்லை, பணம் செலவு ஆவதுதான் மிச்சம்’ எனக் கூறுகிறார்.

ஆனால் அதற்கு மாறாக, நாம் அனைவரும் குடும்பத்துடன் விடுமுறைக்கு ராஜஸ்தான் செல்லலாம் எனச் சொல்கிறார். ஆனால், அதற்குப் பணம்? அவர் கிரெடிட் கார்டு உபயோகித்து வருவதால் அதில் கிடைக்கும் ரிவார்ட் பாயின்டுகளைச் சேர்த்து வைத்ததன் மூலம் ஏகப்பட்ட பாயின்ட்கள் இருப்பதாகவும் , அது அனைவருக்குமான போக்குவரத்துச் செலவுக்குச் சரியாக இருக்குமென்றும், நாம் தங்கவும், சாப்பிடவும் பணம் செலவழித்தால் போதும் எனவும் கூறுகிறார்.
அமனுக்கும், அன்யாவுக்கும் இந்த `ப்ரீ ஹாலிடே ட்ரிப்’ சந்தோஷத்தைக் கொடுப்பதோடு, கிரெடிட் கார்டு உபயோகம், தேவையறிந்து செலவு செய்வது ஆகியவை குறித்த செய்திகளையும் சொல்கிறது.
பணவீக்கம் குறித்த விளக்கத்தையும், வட்டி விகிதத்துக்கும் அதற்கும் உள்ள தொடர்பையும் நூலாசிரியர்கள் தொட்டுச் செல்கிறார்கள். வங்கியின் வேலைகள் என்ன, வங்கிக் கணக்கை எப்படி ஆரம்பிப்பது என்பது போன்ற விஷயங்களை அமனுடைய அப்பாவின் வங்கி நண்பர் மூலம் விளக்க வைத்திருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
இதோடு, டிஜிட்டல் மணி, பணமதிப்பு நீக்கம் என எதையும் விட்டு வைக்கவில்லை. ஏ.டி.எம்–லிருந்து பணம் எடுக்கும்போது மட்டும் `புதிய’ நோட்டுகளாக வருவது ஏன், கடன்களில் எத்தனை வகைகள் இருக்கின்றன, எப்போது எந்தக் கடனை வாங்க வேண்டும், மாதாந்திரத் தவணை (EMI) என்றால் என்ன, சிபில் ஸ்கோர் என்றால் என்ன, அதைக் கணக்கிட்டு வழங்குவது யார், அதனுடைய பயன் என்ன ஆகியவையும் இந்தப் புத்தகத்தில் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் ஒரு சிறிய, எளிமையான பயிற்சியை நூலாசிரியர்கள் தந்திருப்பது, நாம் படித்ததை நினைவுபடுத்திக்கொள்ள உதவுகிறது. அதுபோல, நிதித் துறை வல்லுநர்களின் மேற்கோள்களையும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
இனிமேல், சிறுவர்/சிறுமியருக்கு A for ATM, B for Bank, C for Credit, D for Debit… என நிதி குறித்த கல்வியைச் சொல்லிக் கொடுக்கலாம். நம் குழந்தைகளுக்கு இந்தப் புத்தகத்தைப் பரிசளித்துப் படிக்க வைப்பதுடன், பெரியவர்களும் அவசியம் படிக்கலாம். (வயதில் பெரியவர்களாக இருக்கும் நம்மில் பலர் நிதி விஷயத்தில் அடிப்படை கல்வி பெறாத குழந்தை மாதிரியே இருக்கிறோம்)
வருகிற வருவாய் குறைவாக இருந்தாலும் பாதகமில்லை. வரவுக்கு மீறி செலவு செய்யாமல் இருந்தால் கஷ்டப்படத் தேவையில்லை என்பதை நினைவில் கொண்டால் `கடன்’ இல்லாத வாழ்க்கை வாழலாம்!

பெட்ரோலியப் பொருள்கள் ஜி.எஸ்.டி-க்குள் வருமா?
விமானக் கட்டண விகிதங்களில் முரண் பாடுகள் இருப்பதாகவும், கட்டணங்களைக் குறைக்க நடவடிக்கை தேவை என்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை யிடம் ஜம்மு காஷ்மீர் அரசு கேள்வி எழுப்பியது.
இதையடுத்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, விமான பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வந்தால் டிக்கெட் விலை குறையக்கூடும் எனப் பதில் அளித்ததுடன், மத்திய நிதியமைச்ச கத்துக்கு கோரிக்கையும் வைத்துள்ளார். இதன்மூலம் படிப்படியாக பெட்ரோ லியப் பொருள்கள் ஜி.எஸ்.டி-க்குள் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.