
நிம்மதி தரும் நிதித் திட்டம் - 24 - கடன் வாங்குவது தவறில்லை!
“எனக்குக் கடன் வாங்குவது என்பது சுத்தமாகப் பிடிக்காது. என் அப்பா, ‘கடன் வாங்குவது தவறு; வருமானத்துக்குள்தான் செலவு செய்ய வேண்டும்’ என அடிக்கடி சொல்வார். எனவே, இந்த எண்ணம் எனக்குள் ஆழமாகப் பதிந்துபோனது.
நான் ரூ.40 லட்சம் வீட்டுக் கடனில் வீடு வாங்கினேன். ஆனால், கையில் வைத்திருந்த அத்தனை பணத்தையும் சேர்த்துக் கடனை அடைத்தபிறகு, இன்னும் ரூ.10 லட்சம் பாக்கி உள்ளது. இந்த வருடத்துக்குள் இதையும் செலுத்துவதே என் புத்தாண்டு இலக்கு” என்று பேச ஆரம்பித்தார் அருண். கடன் வாங்கப் பிடிக்காத நபரா என நாம் ஆச்சர்யப்பட, அருண் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.
“நான் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். பிடித்தங்கள் போக மாதச் சம்பளம் ரூ.90 ஆயிரம். இரண்டு ஆண்டுகளுக்குமுன் என் மனைவியும் வேலை பார்த்துவந்தார். எங்களுக்குக் குழந்தையில்லாத காரணத்தால் என் மனைவி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக வேலையை விட்டுவிட்டார்.
என் மனைவியின் பி.எஃப் பணம், இதர சேமிப்புகள் அனைத்தையும் சேர்த்தே வீட்டுக் கடனில் பெரும்பகுதியை அடைத்தேன். இப்போது எங்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
என் பெற்றோர் சொந்த ஊரில் இருக்கிறார்கள். அவர்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் கொடுத்து வருகிறேன். சில மாதம் மருத்துவச் செலவுகள் இருக்கும்போது ரூ.30 ஆயிரம் வரை கொடுக்க வேண்டியிருக்கும். மாதம் ரூ.8,000 எஸ்.ஐ.பி செலுத்தி வருகிறேன். ரூ.1 கோடிக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துள்ளேன். அலுவலகத்தில் ரூ.5 லட்சத்துக்கு ஃப்ளோட்டர் ஹெல்த் பாலிசி எடுத்துக்கொடுத்திருக்கிறார்கள். எனக்கு எல்லாச் செலவுகளும் போக மாதம் ரூ.14 ஆயிரம் மீதமாகிறது.

ஓவியம்: பாரதிராஜா
என் மகளின் மேற்படிப்புக்கு அடுத்த 17 வருடங்களில் ரூ.25 லட்சம் தேவைப்படக்கூடும். மகளின் திருமணத்துக்கு அடுத்த 24 வருடங்களில் ரூ.1 கோடி தேவையாக இருக்கும். தற்போது நான் குடும்பச் செலவுகளுக்கு ரூ.20 ஆயிரம் செலவு செய்கிறேன். அப்படியானால் என் ஓய்வுக்காலத்தில், அதாவது, அடுத்த 25 வருடங்களில் எனக்கு மாதம் எவ்வளவு தேவையாக இருக்கும், அதற்கு நான் கார்ப்பஸ் தொகையாக எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதைச் சொல்லுங்கள். எனக்கு பி.எஃப் தொகையாக மாதம் ரூ.4,500 பிடித்தம் செய்து வருகிறார்கள்’’ என்றார்.
இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.
“கடன் வாங்குவது தவறு என்பது பழைய சிந்தனை. இப்போதெல்லாம் கடன் வாங்கி அதனை எப்படி லாபகரமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றுதான் புத்திசாலிகள் யோசிக்கிறார்கள். எனவே, கடன் எதற்காக, ஏன் வாங்குறோம், வாங்கிய கடனை எப்படிப் பயன்படுத்துகிறோம், வட்டி எவ்வளவு என்பதையெல்லாம் பொறுத்துத்தான் கடன் சரியா, தவறா எனச் சொல்ல முடியும். கடன் வாங்கித் தேவையில்லாத ஆடம்பரச் செலவுகளைச் செய்ய வேண்டாம் என்ற அர்த்தத்தில்தான் உங்கள் அப்பா உங்களுக்கு அறிவுரை சொல்லியிருப்பார்.

நீங்கள் வீட்டுக் கடனை 8.5 சதவிகிதத்துக்கு வாங்கியதில் தவறு எதுவும் இல்லை. நீங்கள் கடனைத் திரும்பச் செலுத்திய தொகையைச் சரியான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்திருந்தால் குறைந்தபட்சம் 12% - 15% வரை வருமானத்தைப் பெற்றிருக்க முடியும். அப்படியிருக்க, கடனை உடனடியாகத் திரும்பச் செலுத்தியது தவறான புரிந்துகொள்ளல் என்றே சொல்ல வேண்டும். தவிர, வீட்டுக் கடனைத் தொடர்ந்து வைத்திருப்பதால் குறிப்பிட்ட அளவு வருமான வரி விலக்கையும் பெற முடியும்.
இனியாவது, கடன் தொடர்பான உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, நிதி நிர்வாகத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு, எதிர்காலத்துக்கான முதலீட்டைத் தொடங்குங்கள். உங்களுக்கு எல்லாச் செலவுகளும் போக மீதமாகும் தொகை ரூ.14 ஆயிரம் இருப்பதால், உங்களின் அனைத்து இலக்குகளுக்கும் சுலபமாக முதலீட்டை ஆரம்பிக்கலாம்.
உங்கள் குழந்தையின் மேற்படிப்புக்கு மாதம் ரூ.3,800 முதலீடு செய்துவந்தால், அடுத்த 17 வருடங்களில் ரூ.25 லட்சம் கிடைக்கும். உங்கள் குழந்தையின் திருமணத்துக்கு மாதம் ரூ.6,100 முதலீடு செய்துவந்தால் ரூ.1 கோடி அடுத்த 24 வருடங்களில் கிடைக்கும்.
தற்போது உங்களுக்கான குடும்பச் செலவுகள் மாதம் ரூ.20 ஆயிரம் ஆகிறது என்ற அடிப்படையில், உங்களுக்கு ஓய்வுக்காலத்தில் கார்ப்பஸ் தொகையாக ரூ.3 கோடி சேர்க்க வேண்டும். உங்களுக்குச் சம்பள உயர்வு ஆண்டுக்கு 10% என்ற அடிப்படையில் கணக்கிட்டால், பி.எஃப் மூலம் உங்கள் ஓய்வுக்காலத்தில் ரூ.2.44 கோடி கிடைக்கக்கூடும். மீதம் ரூ.56 லட்சம் சேர்க்க மாதம் ரூ.3,000 முதலீடு செய்ய வேண்டும்.

அனைத்து இலக்குகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.13 ஆயிரம் முதலீடு செய்தாலே போதுமானது. ஏற்கெனவே ரூ.8,000 எஸ்.ஐ.பி-யில் முதலீடு செய்துவருகிறீர்கள். இன்னும் கூடுதலாக ரூ.5,000 முதலீடு செய்தாலே இலக்குகளை அடையலாம். உங்கள் அப்பாவுக்கு உடல்நலனில் பிரச்னை இருப்பதால், அவசரகால மருத்துவ நிதியை ரூ.3 லட்சமாவது உருவாக்கி வைத்துக்கொள்வது நல்லது. டேர்ம் இன்ஷூரன்ஸை இன்னும் ரூ.50 லட்சம் அதிகப்படுத்திக்கொள்ளவும். தற்போது உங்கள் முதலீடுகளை ஸ்மால் அண்டு மிட்கேப் வகைகளில் செய்துவருகிறீர்கள். அவற்றை அஸெட் அலோகேசன் முறைப்படி மாற்றித் தந்துள்ளேன். அதனைப் பின்பற்றவும்.
பரிந்துரை: ஐ.சி.ஐ.சி.ஐ புரூ ஃபோகஸ்டு புளூசிப் 2,900, மிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ரூ.3,500, மோதிலால் ஆஸ்வால் மோஸ்ட் ஃபோகஸ்டு மல்டிகேப் 35 ஃபண்ட் ரூ.3,000, டி.எஸ்.பி. பி.ஆர் ஸ்மால் அண்டு மிட்கேப் ரூ.3,500. அவசரகால நிதி: ஃப்ராங்க்ளின் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்ட் 3,500, யூ.டி.ஐ ஃப்ளோட்டிங் ரேட் ஃபண்ட் ரூ.3,500.”
குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்குமானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.
Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor - Reg.no - INA200000878
- கா.முத்துசூரியா
உங்களுக்கும் நிதி ஆலோசனை வேண்டுமா?
finplan@vikatan.com என்கிற மெயில் முகவரிக்கு உங்கள் குடும்ப நிதி நிலவரங்களை குறிப்பிட்டு குடும்ப புகைப்படங்களுடன் அனுப்புங்கள்.
உங்கள் செல்போன் நம்பரை தவறாமல் குறிப்பிடவும். தொடர்புக்கு: 9940415222

7.75% வருமானம் அளிக்கும் சேவிங்க்ஸ் பாண்ட்!
ஆண்டுக்கு 7.75% வருமானம் அளிக்கும் சேவிங்க்ஸ் பாண்டுகளை சிறு முதலீட்டாளர்களுக்காக மத்திய அரசு வெளி யிடுகிறது. இதற்குமுன் இந்த பாண்ட் முதலீட்டுக்கு 8% வட்டி வழங்கப்பட்டது. இதன் வெளியீடு ஜனவரி 10- ம் தேதி தொடங்குகிறது.
குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000. அதிகபட்சம் எவ்வளவு வேண்டு மானலும் முதலீடு செய்ய லாம். இந்த பாண்டில் ரூ.1,000 முதலீடு செய் தால், ஏழு ஆண்டுகளின் முடிவில் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.1,703-ஆக இருக்கும்.
வட்டி வருமானத்துக்கு, அடிப்படை வருமான வரம்புக்கு ஏற்ப வரி கட்ட வேண்டும். இதில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு அவசியம்.

இன்ஃபோசிஸ் சி.இ.ஓ ஆண்டு சம்பளம் ரூ.16 கோடி!
முன்னணி ஐ.டி நிறுவனமான இன் ஃபோசிஸ் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியான (சி.இ.ஓ) சலில் பரேக்கின் ஆண்டு சம்பளம் ரூ.16 கோடி என நிர்ணயமாகியுள்ளது.
2018-19-ம் நிதி யாண்டில் அவர் ரூ.6.5 கோடி நிலையான தொகை யாகவும், ரூ.9.75 கோடி மாறுபடும் சம்பளமாகவும் பெறுவார். மேலும், ரூ.3.25 கோடி மதிப்புள்ள இன்ஃபோசிஸ் பங்கு களையும் பெறுவார் என்று சொல்லப்படுகிறது.
இதற்குமுன் சி.இ.ஓ-வாக இருந்த விஷால் சிக்கா ரூ.70 கோடி அளவுக்கு சம்பளம் வாங்கியது குறிப்பிடத்தக்கது