ஃப்ராங்க்ளின் லோ டுரேஷன் ஃபண்ட்... ரிஸ்க் எடுக்க விரும்பாத வர்களுக்கு ஏற்ற ஃபண்ட்!

ஃபண்ட் டேட்டா! - 9சொக்கலிங்கம் பழனியப்பன் டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)
பல முதலீட்டாளர்கள் இன்று வங்கி டெப்பாசிட்டுகளுக்கு ஒரு மாற்றைத் தேடிக்கொண்டிருக் கிறார்கள். மேலும், சிறிதளவேனும் வங்கி டெபாசிட்டைவிட அதிகமான வருமானம் கிடைக்குமா என்றும் தேடுகிறார்கள். இவை எல்லாவற்றிற்கும்மேல் தேவைப் படும்போது பணத்தை எடுத்துக் கொள்ள முடியுமா என்றும் பார்க்கிறார்கள். இந்தத் தேவைகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முதலீட்டு உபகரணம்தான் ஃப்ராங்க்ளின் இந்தியா லோ டுரேஷன் ஃபண்ட்.

இது ஒரு கடன் சார்ந்த (Debt) ஃபண்டாகும். இந்த ஃபண்டிற்கும் பங்குச் சந்தைக்கும் நேரடித் தொடர்பு ஏதும் கிடையாது. காரணம், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அவ்வாறு வாங்கும் தொகையை, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், அரசாங்கம் போன்றவற்றிற்குக் குறிப்பிட்ட வட்டிக்குக் கடன் கொடுக்கின்றன.

இந்தக் கடன் திட்டங்களில் உள்பிரிவுகள், முதிர்வுக் காலத்தைப் பொறுத்துப் பலவகைகளில் உள்ளன. இந்தக் கடன்கள் குறுகிய காலத்துக்கானவை. இந்த ஃபண்டு சராசரியாக 53 நாள் முதிர்வுக்காலத்தில் கடன் தருகின்றன. இதுவரை 85 நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்துள்ளது.
இந்த ஃபண்ட் முதலீடு செய்திருக்கும் கடன் பத்திரங் களின் ஆவரேஜ் கிரெடிட் ரேட்டிங் A ஆகும். இது சற்றுக் குறைவான கிரெடிட் ரேட்டிங் ஆகும். இருந்தபோதிலும், இந்த நிறுவனத்தின் கடன் சார்ந்த திட்டங்களின் மேலாண்மை மிகவும் சிறப்பாக உள்ளது. பிற கடன் சார்ந்த ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்தத் திட்டத்தின் வருமானம் சற்று அதிகமாக இருக்கும். ஆகவே, கடன் சார்ந்த திட்டங்களில் சற்று அதிக ரிஸ்க்குடன், சற்றுக் கூடுதலான வருமானத்தை எதிர்பார்ப் பவர்களுக்கு இந்தத் திட்டம் மிகப் பொருத்தமாக இருக்கும்.

தற்போது ரூ.5,500 கோடிக் கும் மேலான சொத்துகளை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்டு மேனேஜர்கள் குணால் அகர்வால் மற்றும் சந்தோஷ் காமத் ஆவார்கள்.

இந்த ஃபண்டு பிப்ரவரி 2000-த்தில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், ஜூலை 2010-ல் இருந்துதான் குரோத் ஆப்ஷன் வழங்கப்பட்டது. அதுவரை டிவிடென்ட் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டது.

குரோத் ஆப்ஷன் ஆரம்பித்தபோது ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம் தற்போது ரூ.1,96,080-ஆக உள்ளது. இது சி.ஏ.ஜி.ஆர் அடிப்படையில் 9.44% வருமானம் ஆகும். இது வங்கி டெபாசிட்களுடன் ஒப்பிடும் போது ஓர் உன்னதமான வருமானம் ஆகும். தவிர, மூன்று வருடங்களுக்கு மேல் கடன் சார்ந்த திட்டங்களில் முதலீட்டை வைத்திருக்கும்போதும் வங்கி டெபாசிட்டுகளுடன் ஒப்பிடும் போதும் முதலீட்டாளர்களுக்குச் சாதகமாக உள்ளது. இந்த ஃபண்டில் லாக்-இன் மூன்று மாதங்கள் ஆகும். அதற்குமுன் பணத்தை எடுத்தால், 0.50% வெளியேற்றுக் கட்டணம் உள்ளது. ஆகவே, குறைந்தது ஆறு மாதங்களுக் காவது தேவையில்லாத பணத்தை முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

ரெக்கரிங் டெபாசிட்டுக்குப் பதிலாக இந்தத் திட்டத்தில் எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம். ரெக்கரிங் டெபாசிட்டைவிடக் கடந்த காலத்தில் இந்தத் திட்டத்தில் அதிக வருமானம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எஸ்.ஐ.பி மற்றும் மொத்த முதலீட்டை இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்கள் எப்போது வேண்டுமானாலும் துவக்கலாம். பணத்தைத் திரும்பப் பெறுவதற்குக் குறைந்தது ஒரு பிசினஸ் டே ஆகும்.
யாருக்கு உகந்தது?
சேவிங்ஸ் கணக்கில் தூங்கிக் கொண்டிருக்கும் பணத்தை முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு, ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு, சில மாதங்களுக்குப் பணம் தேவைப்படாதவர்களுக்கு, சேவிங்ஸ் கணக்கைவிட/ குறுகிய கால ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட அதிக வருமானத்தை விரும்புபவர்களுக்கு ஏற்றது.
யார் முதலீடு செய்யக் கூடாது?
அதிக வருமானத்தை விரும்பு பவர்கள், அதிக ரிஸ்க் எடுக்க முடிந்தவர்கள், கேரன்டியான வருமானத்தை விரும்புபவர்களுக்கு ஏற்றதல்ல.