நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஐ.டி.எஃப்.சி & கேப்பிட்டல் ஃபர்ஸ்ட் இணைப்பு... யாருக்கு லாபம்?

ஐ.டி.எஃப்.சி & கேப்பிட்டல் ஃபர்ஸ்ட் இணைப்பு... யாருக்கு லாபம்?
பிரீமியம் ஸ்டோரி
News
ஐ.டி.எஃப்.சி & கேப்பிட்டல் ஃபர்ஸ்ட் இணைப்பு... யாருக்கு லாபம்?

ஐ.டி.எஃப்.சி & கேப்பிட்டல் ஃபர்ஸ்ட் இணைப்பு... யாருக்கு லாபம்?

ந்தியாவின் தற்போதைய பொருளாதாரச் சூழல், வங்கி மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்களுக்குப் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கியிருக்கிறது என்றே சொல்லலாம். மத்திய அரசு எடுத்த பல்வேறு பொருளாதார சீர்திருத்த முயற்சிகள் வங்கிகளுக்குச் சாதகமாக இருக்கின்றன. இதனால் வங்கித் துறை, நிதித்துறை இரண்டும் நன்றாக வளர்ச்சியடைந்து வருகின்றன.   

ஐ.டி.எஃப்.சி & கேப்பிட்டல் ஃபர்ஸ்ட் இணைப்பு... யாருக்கு லாபம்?

ஆனால், வங்கிகளுக்கிடையிலான தொழில் போட்டி என்பது இன்னும் வீரியமாகத் தொடங்கி யிருக்கிறது. வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கவும், தொழில் வளர்ச்சியை அதிகப் படுத்தவும் வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, தனியார் வங்கிகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

தனியார் வங்கிகளில் சமீப காலமாகச் செய்தி களில் அடிபட்டுவரும் வங்கி ஐ.டி.எஃப்.சி. ஏற்கெனவே ஐ.டி.எஃப்.சி மற்றும் கிராம விடியல் மைக்ரோ ஃபைனான்ஸ் இணைப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில், மிகப்பெரிய வாடிக்கையாளர் பரவலையும், பரந்து விரிந்த தொழில் வாய்ப்பு களையும் கொண்ட ஸ்ரீராம் குழுமத்துடனான இணைப்புக்குத் தயாரானது இவ்வங்கி.

ஆனால், ஐ.டி.எஃப்.சி - ஸ்ரீராம் குழும இணைப்பு தோல்வியடைந்தது. உடனே  அடுத்த இணைப்புக்குத் தயாரானது ஐ.டி.எஃப்.சி. தற்போது கேப்பிட்டல் ஃபர்ஸ்ட் என்ற வங்கி அல்லாத நிதிச் சேவை நிறுவனத்துடன் இணைய இருக்கிறது. 

ஐ.டி.எஃப்.சி & கேப்பிட்டல் ஃபர்ஸ்ட் இணைப்பு... யாருக்கு லாபம்?



இந்த இணைப்பு குறித்து ஐ.டி.எஃப்.சி நிறுவன மேலாண்மை இயக்குநர் மற்றும் சி.இ.ஓ ராஜிவ் லால், “தற்போது தனியார் வங்கிகள் வளர் வதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் எங்களை மேம்படுத்திக்கொள்ளவே இந்த இணைப்பு.

போட்டி அதிகமாக இருக்கும்போது பொறு மையாக இருக்க வேண்டியது அவசியம்தான். ஆனால், இது சரியாக வருமா வராதா என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் நேரமல்ல. சில ரிஸ்க்குகளை அந்த நேரத்தில் எடுத்துதான் ஆகவேண்டும். ஏனெனில், வாய்ப்புகள் அடிக்கடி வராது. வாய்ப்புகள் வரும்போது தவற விட்டுவிடக் கூடாது.  

ஸ்ரீராம் குழுமத்துடனான இணைப்பு வெற்றியடையவில்லை என்று அதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை. இது இல்லையா சரி, அடுத்த வழி என்ன என்று யோசிக்க ஆரம்பித்தோம்” என்று பேசியிருக்கிறார். 

கேப்பிட்டல் ஃபர்ஸ்ட்டுடன் இணையும் இந்த நடவடிக்கை அவசர அவசரமாக எடுக்கப்பட்ட தல்ல. ஐ.டி.எஃப்.சி வங்கியின் இணைப்புத் திட்டப் பட்டியலில் ஏற்கெனவே கேப்பிட்டல் ஃபர்ஸ்ட் இருந்தது. தற்போது அதனைச் செயல்படுத்த இரண்டு நிறுவனங்களும் தயாராகி வருகின்றன.

கேப்பிட்டல் ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் பெரும் பங்கை வைத்திருந்த வார்பர்க் பின்கஸ், தனது பங்குகளை விற்று வெளியேறியதால், இந்த இணைப்பு சாத்தியமாகியிருக்கிறது. இந்த இணைப்பு இந்த ஆண்டுக்குள் நிறைவடைய வாய்ப்பிருக்கிறது. காம்படிஷன் கமிஷன் இந்தியா ஒப்புதல் கிடைத்தபிறகு இரு நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயல்பட இருக்கின்றன. கேப்பிட்டல் ஃபர்ஸ்ட் - ஐ.டி.எஃப்.சி பேங்க் என்ற பெயரில் செயல்படும்.

இரண்டு நிறுவனங்களுமே சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள். இந்த இணைப்புக்குப்பிறகு அவற்றின் பங்குகளும் இணைக்கப்படும். இணைப்பின்போது பங்குக்குப் பங்கு வழங்கும் விகிதம் முடிவு செய்யப்பட்டு, அதற்கேற்ப பங்குகள் வரவு வைக்கப்படும். இணைப்பு நிறுவனத்தின் பங்கின் விலை, அதன் சந்தை மதிப்பைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்.

இந்த இணைப்புப் பற்றி பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே பிரபாகரிடம் கேட்டோம். “இந்த இணைப்பு இரண்டு நிறுவனங்களுக்கும் வெற்றியைத் தரக்கூடியதாக இருக்கிறது. ஐ.டி.எஃப்.சி கார்ப்பரேட் பேங்கிங்கில் கவனம் செலுத்திவந்த நிலையில், ரீடெய்ல் பிசினஸையும் பிடிப்பதற்காக இணைப்பு, கையகப்படுத்துதல் போன்ற நடவடிக்கை களை எடுத்து வருகிறது.

ஏற்கெனவே, கிராம விடியல் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்தியுள்ள நிலையில், அதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. தற்போது கேபிட்டல் ஃபர்ஸ்ட் நிறுவனத்தைத் தன்னோடு இணைத்துக் கொள்வதன் மூலம், அதன் பிசினஸ் மேலும் வளர்ச்சியடைய வாய்ப்பிருக்கிறது. கேபிட்டல் ஃபர்ஸ்ட் பொதுவான நிதிச் சேவைகளை வழங்கி வருகிறது. ஆனால், இந்த இணைப்பின் முழுமையான பலன் தெரிவதற்கு இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்பதால், இந்தப் பங்கை இரண்டு ஆண்டுகள் அடிப்படையில் வாங்கலாம்” என்றார்.

இந்த இணைப்பின்மூலம் நன்மை கிடைக்கும் என்று நினைப்பவர்கள் முதலீடு செய்யலாம்!

-ஜெ.சரவணன்