
த.ராஜன் இயக்குநர், ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்ஸ்
வட்டி விகிதம் 2015-ல் 9 சதவிகிதமாக இருந்தது; இன்று படிப்படியாகக் குறைந்து 7 சதவிகிதமாக இருக்கிறது. இது பாதுகாப்பான முதலீட்டை நாடிச்செல்பவர்களுக்கும் குறுகிய காலத்திற்கு முதலீடு செய்பவர்களுக்கும் ஒரு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், குறுகிய கால முதலீடுகளான ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் கடன் ஃபண்ட் திட்டங்களுக்குப் பதிலாக ‘மாற்று முதலீட்டுத் திட்டங்களை’ பரிசீலிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் முதலீட்டாளர்கள்.

குறுகிய காலத்தில் பங்குச் சந்தை தந்த லாபம்
கடந்த 2017-ல் மட்டும் பங்குச் சந்தை 27.5% லாபம் தந்துள்ளது. பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகள் 30% - 40% வருமானம் தந்தன. வட்டி விகிதம் குறையும் இந்த நேரத்தில், பங்குச் சந்தை தந்த லாபத்தைப் பார்த்து, அதில் முதலீடு செய்தால் என்ன என்று யோசித்து வருகின்றனர்.
பங்குச் சந்தை குறுகிய காலத்திற்கு ஏற்றதா?
பங்குச் சந்தை, கடந்த வருடத்தில் அதிக வருவாய் ஈட்டித் தந்திருப்பது என்னவோ உண்மைதான். அதற்காக முதலீட்டாளர்கள் குறுகிய கால முதலீட்டிற்குப் பங்குச் சந்தையைத் தேர்ந்தெடுக்கத் தேவையில்லை. காரணம், 2017-ம் ஆண்டைப்போலவே, 2018-லும் பங்குச் சந்தை அதிக லாபம் தரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. பங்குச் சந்தையின் சமீபத்திய ஏற்றத்தைப் பார்த்து, பங்குச் சந்தை முதலீட்டின் அடிப்படை விதிகளை நாம் மறந்துவிடக்கூடாது.

பங்குச் சந்தையின் அடிப்படை விதி
பங்குச் சந்தை முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை. அவை குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கத்தை அதிகமாகச் சந்திக்கும். பங்குச் சந்தை இறக்கத்தினால் நம்முடைய முதலீடு பெருமளவு குறைவதற்கு, குறுகிய கால முதலீடுகளில் அதிக வாய்ப்புள்ளது. 2015-ம் ஆண்டு பங்குச் சந்தை 4.98% சரிந்தது. 2011-ம் ஆண்டு பங்குச் சந்தை 25.05% சரிந்தது. மேலும், 2008-ம் ஆண்டு பங்குச் சந்தை 52.54% சரிந்தது. 2017-ல் அதிக வருவாயை ஈட்டிய பங்குச் சந்தை, மேற்குறிப்பிட்டுள்ள வருடங்களில் பெரும் நஷ்டத்தை முதலீட்டாளர் களுக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது. குறுகிய கால முதலீடுகளைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் என்று இப்போது புரிகிறதா?
ஆகவே, பங்குச் சந்தையின் அடிப்படை விதியான நீண்ட கால முதலீடுகளே பங்குச் சந்தைக்கு ஏற்றது. குறுகிய காலத்திற்குப் பங்குச் சந்தை முதலீடுகள் ஏற்றவை என எப்போதும் நினைக்கக்கூடாது. அதிக லாபத்துக்கு ஆசைப் பட்டு இந்த அடிப்படை விதியை உதாசீனப் படுத்தினால் மூலதனத்தையே இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

குறுகிய காலத்துக்கேற்ற முதலீடு
வருவாய் குறைவாக இருந்தபோதிலும் பெரிய வகையில் மூலதனத்திற்கு இடையூறு இல்லாத கடன் சார்ந்த ஃபண்டுகள் மிகவும் சிறந்தவை. நமக்கு எவ்வளவு காலத்திற்கு முதலீடு செய்து வைத்திருக்க முடியுமோ, அந்தக் கால அவகாசத்திற்கு ஏற்ற ஃபண்டுகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். மேலே தரப்பட்டுள்ள திட்டங்கள் அக்ரூவல் (Accrual) மற்றும் கடன் சார்ந்த ஃபண்ட் வகையைச் சார்ந்தவை. இந்தத் திட்டங்கள், வட்டி விகித ஏற்ற இறக்கத்தினால் திடீர் ச் சரிவை ஏற்படுத்தாது.
கடன் ஃபண்டில் எவ்வளவு முதலீடு செய்யலாம்?
முதலீட்டாளர்கள், குறுகிய காலத்தில் தேவைப் படுகிற தொகை முழுவதையுமே கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். மேலும், நீண்ட கால முதலீடுகளில் பாதுகாப்பை விரும்பும், ரிஸ்க்கை எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் 30 சதவிகிதப் பணத்தைப் பங்கு சார்ந்த ஃபண்டு களிலும், மீதமுள்ள 70 சதவிகித பணத்தைக் கடன் சார்ந்த ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம்.
ஓரளவுக்கு மிதமான ரிஸ்க் எடுக்க விரும்பும் முதலீட்டாளர்கள் 50% வரை பங்கு சார்ந்த ஃபண்ட் திட்டங்களிலும், மீதமுள்ள 50% கடன் சார்ந்த ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம். அதிக ரிஸ்க் எடுக்க விரும்பும் தீவிர முதலீட்டா ளர்கள், 70 சதவிகிதத்தைப் பங்கு சார்ந்த ஃபண்டுகளிலும், மீதமுள்ள 30 சதவிகிதத்தைக் கடன் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம்.
இன்றைய சூழ்நிலையில் மட்டுமல்ல, எந்தச் சூழ்நிலையிலும் கடன் சார்ந்த ஃபண்டுகளே குறுகிய கால முதலீட்டுக்கு ஏற்றவை என்பதை முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!