இன்வெஸ்கோ இந்தியா கான்ட்ரா ஃபண்ட்... பணத்தைப் பெருக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்!

ஃபண்ட் டேட்டா! - 10சொக்கலிங்கம் பழனியப்பன் டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)
இன்வெஸ்கோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், சில ஆண்டுகளுக்கு முன்புவரை ரெலிகர் இன்வெஸ்கோவாக இருந்தது. ரெலிகரிடம் இருந்த பங்கை, இன்வெஸ்கோ நிறுவனமே முழுவதுமாக வாங்கிவிட்டது. தற்போது அமெரிக்காவைச் சார்ந்த இன்வெஸ்கோ லிமிடெட் நிறுவனம், இதன் 100% பங்குகளை இன்வெஸ்கோ ஹாங்காங் மூலம் வைத்துள்ளது.

இன்வெஸ்கோ லிமிட்டெட் அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு நிறுவனமாகும். உலகளவில் 20 நாடுகளில் தொழில் செய்து வருகிறது. 917 பில்லியன் டாலர்களுக்கும் மேலான சொத்துகளை உலகளவில் நிர்வகித்து வருகிறது. இந்தியாவில் இன்வெஸ்கோ மியூச்சுவல் ஃபண்ட் ரூ.21,000 கோடிக்கும் மேலான சொத்துகளை நிர்வகித்து வருகிறது.
இந்த நிறுவனத்தில் நன்றாகச் செயல்பட்டு வரும் ஃபண்டுகளில் ஒன்று இன்வெஸ்கோ இந்தியா கான்ட்ரா ஃபண்டாகும். இது ஒரு மல்ட்டிகேப் ஃபண்ட். தற்போது 919 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை நிர்வகித்து வருகிறது.

இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் 66% லார்ஜ்கேப் நிறுவனப் பங்குகளிலும், எஞ்சியது மிட் அண்டு ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஃபண்டை நாம் பரிந்துரைக்கு எடுத்துக் கொண்டதற்கு முக்கியக் காரணம், இதன் தொடர்ச்சியான நல்ல செயல்பாடுதான். இந்த ஃபண்ட், 2007-ம் ஆண்டு ஆரம்பித்த திலிருந்து இதுவரை தொடர்ச்சியாகத் தனது பெஞ்ச்மார்க் குறியீட்டைவிடவும், தனது கேட்டகிரி ஆவரேஜைவிடவும் அதிகமான வருவாயைத் தந்துள்ளது.
இந்த ஃபண்ட் ஆரம்பித்த போது (ஏப்ரல் 11, 2007) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், தற்போது ரூ.4,86,400-ஆக உள்ளது. இந்த வருமானம், இதன் கேட்டகிரியில் டாப் ரேங்கிங் ஆகும்.
இந்த ஃபண்டின் பெயரில் உள்ளதுபோல, இது ஒரு கான்ட்ரா ஃபண்டாகும். அதாவது, சந்தை எந்தத் துறைகளை அல்லது எந்தப் பங்குகளை அதிக அளவில் வாங்குகிறதோ, அவற்றை இந்த ஃபண்ட் வாங்காது. மாறாக, யாருமே தற்சமயத்தில் விரும்பாத துறைகளை/ பங்குகளையே இந்த ஃபண்ட் தனது போர்ட்ஃபோலியோ விற்குத் தேர்ந்தெடுக்கும்.

கான்ட்ரா முறையில் பங்கு களைத் தேர்ந்தெடுப்பதால், இது ஒரு வேல்யூ அடிப்படையில் செயல்படும் ஃபண்டாகவும் உள்ளது. தற்போது இந்த ஃபண்ட் தனது போர்ட் ஃபோலியோவில் 67 சதவிகிதத்தைக் குறைந்த மதிப்பில் மற்றும் டேர்ன் அரவுண்டில் (turnaround) உள்ள பங்குகளில் முதலீடு செய்துள்ளது.
உதாரணமாக, அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ், எல் அண்டு டி ஃபைனான்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், டாடா ஸ்டீல் ஆகிய பல பங்குகளில் இந்த ஃபண்ட் முதலீடு செய்துள்ளது.
இந்தப் பங்குகளும், இவை போன்ற பல பங்குகளும் பல காரணங்களினால் சந்தையில் விலை குறைவாக உள்ளன என இந்த ஃபண்ட் கருதுகிறது.

இந்த ஃபண்ட், மிட்கேப் பங்கு களில் விலை குறைவாக இருந்தபோது (2013 கடைசியில்) தனது போர்ட் ஃபோலியோவில் அதிகமாக மிட்கேப் பங்குகளை வைத்திருந்தது. தற்போது லார்ஜ்கேப்பில் தனது ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது. பெஞ்ச்மார்க்குடன் ஒப்பிடுகையில், ஓவர்வெயிட் அல்லது அண்டர் வெயிட் பொஸிஷன் எடுப்பதற்கும் இந்த ஃபண்ட் தயங்குவதில்லை.

இது ஒரு கான்ட்ரா ஃபண்ட் என்பதால், இந்த ஃபண்டில் நுழை பவர்கள் முழுப் பலனை அடைய சற்று அதிக காலம் காத்திருக்க வேண்டும். இந்த ஃபண்டின் பீட்டா சந்தையைவிட சற்று அதிகமாக 1.04 என்ற அளவிலும், ஆல்ஃபா 8.12 என்ற அளவிலும் நன்றாக உள்ளது. ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன் போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன.

யாருக்கு உகந்தது?
அனைத்து வயதினர், முதன்முறை முதலீட்டாளர்கள், பணம் உபரியாக உள்ளவர்கள், சந்தையைவிட சற்று அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள், பங்கு சார்ந்த முதலீட்டில் மீடியம் ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள், ஏற்கெனவே மியூச்சுவல் ஃபண்டு களில் முதலீடு செய்துள்ளவர்கள், செல்வத்தைப் பெருக்க நினைப்பவர் கள், பணம் உடனடித் தேவை இல்லாதவர்கள்.
யார் முதலீடு செய்யக்கூடாது?
குறுகிய காலத்தில் பணம் தேவைப் படுபவர்கள், முதலீடு செய்வதற்கு சர்ப்ளஸ் இல்லாதவர்கள், உறுதி யான/ நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள், பங்குச் சந்தை ஏற்ற இறக்கம் குறித்து போதிய ஞானம் இல்லாதவர்கள்!