
ப.முகைதீன் சேக்தாவூது
புதிய நிதியாண்டு தொடங்கிவிட்டது. தமிழக அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை, கடந்த நிதியாண்டின் கடைசி மாதமான மார்ச் மாதத்துக்கான சம்பளம், ஏப்ரல் முதல் வாரத்தில்தான் அவர்களுக்கு வழங்கப்படும். இந்த நியதியின்படி, புதிய நிதியாண்டின் முதல் சம்பளத்தை அவர்கள் இந்த நேரம் பெற்றிருப்பார்கள். இனி..? நடப்பு நிதியாண்டுக்குக் கிடைத்துள்ள சிறப்புச் சலுகையான, ‘ஸ்டாண் டர்டு டிடெக் ஷனை’க் கணக்கில் எடுத்துக்கொண்டு வருமான வரியைக் கணக்கிடவேண்டும். அதைத் தவணை முறையில் பிடித்தம் செய்ய வேண்டும். அதற்கு முன், கடந்த நிதியாண்டில் நிகழ்ந்த ஒரு சிறப்பு நடவடிக்கையைக் கருத்தில்கொள்வது அவசியம்.

குறித்த காலத்தில் வரிக் கணக்கு தாக்கல்...
அவற்றுள் முதன்மையான தகவல், முறையாக, வருமான வரியைச் செலுத்திய பலர், வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யத் தவறிவிடு கிறார்கள் என்பதே.
வருமான வரி விதியின்படி, ஒருவர் முறையாக வருமான வரியைச் செலுத்தியிருந்தாலும், குறிப்பிட்ட தேதிக்குள் வரி கணக்கைத் தாக்கல் செய்யாமலிருந்தால், அவர் வரி செலுத்தாத வராகவே கருதப்படுவார். எனவே, இது முதன்மைச் செய்தி.
இதர வருமானம்...
அடுத்த முக்கியத் தகவல், வருமானக் கணக்கில் இதர வருமானத்தைச் சேர்க்காமல், சம்பள வருமானத்துக்கு மட்டுமே வரியைக் கணக்கிடுவது. இந்த வகையில் பெரும்பான்மை விடுபாடு (Omission) வட்டி வருமானமாகவே இருக்கும். அதிலும் குறிப்பாக, வங்கிகளில் செய்யப்பட்ட குறித்த கால டெபாசிட் (Fixed Time Deposit) மீது பெற்ற வட்டி, பலரால் வருமான வரிக் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால், வட்டியை வழங்கி, அதற்கான வரியைப் பிடித்தம் செய்த வங்கியின் செயல்பாடு, படிவம் 26AS-ல் பதிவாகி விடும். அந்த அடிப்படையில் பலருக்கும் வந்து சேர்ந்தது வருமான வரித் துறையின் நோட்டீஸ்.
அதாவது, சம்பள வருமானத்துக்கு வருமான வரி பிரிவு 192. வட்டி வருமானத்துக்கு உரிய வரி பிரிவு 194a. இதன்படியான விடுபாடு ஓய்வுபெற்றோரிடையே மிகுதியாக இருக்கும். ஏனெனில், ஓய்வுபெற்ற ஊழியர்கள் தனது ஓய்வூதியப் பணப்பலனில் ஒரு பகுதியை வங்கி மற்றும் அஞ்சலகம் போன்றவற்றில் டைம் டெபாசிட்-ஆக வைப்பது இயல்பு. இது மாதிரியான வைப்பீடுகளுக்கு வட்டி வழங்கும் வங்கி, 10 சதவிகித வருமான வரியைப் பிடித்தம் செய்திருக்கும்.

பென்ஷன் வருமானம்...
அதே சமயம், இவரது ஓய்வூதிய வருமானம் (Pension Income) ரூ.5 லட்சம்; வட்டி வருமானம் ரூ.1 லட்சம் எனில், இந்த ரூ.1 லட்சத்துக்கு 20% வரியைக் கணக்கிட வேண்டும். இதன் மூலம் அரசுக்கு ரூ.10,300 இழப்பு ஏற்படும். எனவே, இதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டிய கட்டாயம், வருமான வரித் துறைக்கு ஏற்படும். எனவே, இதர வருமானம் பற்றிய தகவல்களை சம்பளம் வழங்கும் அதிகாரி மற்றும் ஓய்வூதியம் தரும் அதிகாரிக்கு உரிய காலத்தில் தெரிவிப்பது அவசியம்.
குடும்ப ஓய்வூதியம்...
இதர வருமானம் என்று வரும் போது, பணியில் உள்ள ஒருவர் ஓய்வூதியம் பெற்றால், அது சம்பள வருமானமாகவே இருக்கும். அதே சமயம், குடும்ப ஓய்வூதியம் (Family Pension) பெறுவாரெனில், அது இதர வருமானம். இந்தக் குடும்ப வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு அல்லது ரூ.15,000-க்கு வரி கிடையாது. அதற்கு மேற்பட்ட தொகை வரிக்கு உட்படும். தற்போது தெரியவந்துள்ள விடுபாடுகளில் இதுவும் ஒன்று.
எது இதர வருமானம்?
எவையெல்லாம் இதர வருமானம் (Income From other sources) என்பதை ஒரு சிறிய உதாரணம் மூலம் பார்ப்போம். அதாவது, நீங்கள் ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கிறீர்கள். அது சற்றே பெரிய வீடு என்பதால், அதன் ஒருபகுதியை உள் வாடகைக்கு (Sub let) தருகிறீர்கள். அந்த உள்வாடகை இதர வருமான மாகும். இது வரிக்கு உட்படும். எனவே, இதர வருமானம் பற்றிய விழிப்பு உணர்வு அவசியம்.
இதேபோல், சம்பளத்துடன் தரப்படும் வீட்டு வாடகைக்கு வருமானக் கழிவு செய்யும்போதும் கவனமாகச் செயல்பட வேண்டும். உதாரணமாக, ஊழியர் கொடுத்த வீட்டு வாடகையானது அவரது ஆண்டுச் சம்பளத்தில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே வருமானக் கழிவு கிடைக்கும். 10% என்பது அடிப்படைச் சம்பளம் மட்டுமல்ல, அகவிலைப்படியையும் சேர்த்துத்தான் கணக்கிடப்படும்.
2017-2018-க்கான வரித் தாக்கல்...
2017-2018-ம் நிதியாண்டுக்கு வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய கடைசித் தேதி 31.07.2018. வரிக் கணக்கு தாக்கல் செய்ய இன்றியமையாதது படிவம் 16. இந்தப் படிவத்தில்தான், சம்பளம் தரும் அலுவலர் பிடித்த வருமான வரி, வங்கி வட்டிக்கு வங்கி அதிகாரி பிடித்தம் செய்த வருமான வரி, தற்போதைய இடம் தவிர்த்துப் பிற இடங்களில் வேலை செய்து பெற்ற சம்பளத்துக்குப் பிடித்தம் செய்த வருமான வரி என்று அனைவரிடமும் படிவம் 16-யைக் கேட்டுப் பெற வேண்டும். இந்தப் படிவம் வழங்க கடைசித் தேதி முன்பு மே 31-ஆக இருந்தது, தற்போது ஜூன் 15-ஆக மாற்றப் பட்டுள்ளது.
வரிக் கனக்கு தாக்கல் செய்யும்முன்பு, வருமான வரித்துறையின் இணையதளத்தில் படிவம் 26AS-யைப் பார்வையிட்டு, அதனைப் படிவம் 16-வுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது முக்கியம். விடுபாடு ஏதுமிருந்தால், வரித் தாக்கலுக்கு முன்பாக, குறைவுபட்ட வரியைச் செலுத்திக் கணக்கை முடித்துவிடுவது நல்லது.
அபராதம் ரூ.5,000..
31.7.2018-க்குள் வரிக் கணக்கு தாக்கல் செய்யத் தவறியோர் ரூ.5000-மும், 30.3.2019 வரையிலும்கூட வரித் தாக்கல் செய்யாமல் இருந்தால், ரூ.10,000-மும் அபராதம் விதிக்கப்படும். இந்தத் தொகை நமக்குச் சிறிய தொகையாகக் கூட இருக்கலாம். ஆனால், அபராதம் என்பது நம் கௌரவத்துக்கு ஒரு கரும்புள்ளி என்பதை மறக்கக்கூடாது.

செல்வமகள் திட்டம்...
செலுத்த வேண்டிய வரியைவிடக் குறைவாகச் செலுத்தியவர்கள் இருப்பது போல, கூடுதலாகச் செலுத்திவிட்டு, “ஆஹா, இப்படியொரு சலுகை இருப்பது எனக்குத் தெரியாதே!” என்போரும் உண்டு. அப்படியான ஒன்றுதான் 80-C பிரிவில் சேமிப்பு என்ற இனத்தில் ‘சுகன்யா சம்ரிதி’ கணக்கில் செலுத்தப்படும் தொகைக்கு வரிவிலக்கு பெறலாம் என்பதும். இதில், ஊழியர் சட்ட ரீதியான காப்பாளராக (Guardian) உள்ள பெண் குழந்தைக்குச் செலுத்தப் படும் சேமிப்புத் தொகைக்கும் வரிக் கழிவு பெற முடியும்.
கல்விக் கடன் மீதான வட்டி...
இதேபோல், கார்டியன் தொடர்பான மற்றொரு வரிச் சலுகை கல்விக் கடனுக் கான வட்டி. கல்விக்கடன் மீதான வட்டிக்குப் பண வரையறை (Monetary Ceiling) கிடையாது. வட்டித் தொகை எவ்வளவாக வேண்டுமானாலும் இருக்கலாம். தொடர்ந்து ஏழு வருடங்கள் செலுத்தப்படும் கல்விக் கடன் மட்டுமே வரிச் சலுகை பெறும். இந்தக் கல்விக் கடன் வட்டியானது, ஊழியரின் உயர் கல்விக்கோ, அவரது மனைவி மற்றும் பிள்ளைகளின் கல்விக் கடனுக்கான வட்டியாகவோ இருக்க லாம். தவிர, ஊழியர் கார்டியனாக உள்ள மாணவருக்கான கல்விக் கடன் வட்டிக்கும் வரிச் சலுகை உண்டு. இதுபோன்ற சலுகை இருப்பது தெரியாமல்விட்டிருந்தால், கணக்குத் தாக்கலின்போது சரிசெய்து கொள்ளலாம்.
வரித்துறை நோட்டீஸைத் தவிர்க்க...
ரூ.2.5 லட்சத்துக்கு மேல் சம்பாதிப்பவர்கள்தான் வருமான வரிக் கணக்கினைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பதில்லை. வேறெந்த வருமானமும் இல்லாதவர் வங்கியில் ரூ.1 லட்சத்தை டெபாசிட் செய்திருந்தால், அந்த டெபாசிட்டுக்கு வங்கியானது ரூ.7,000 அளவுக்கு வங்கி வட்டி வழங்கி, அதற்கு வரிப் பிடித்தமும் செய்து, அதை வருமான வரித்துறைக்கும் தெரிவிக்கும். இதனால் வரித் துறையிலிருந்து நோட்டீஸ் வரும்.
இந்த நோட்டீஸைத் தவிர்க்க, வரி வரம்புக்கு உட்பட்ட ஆண்டு வருமானம் உடையவர்கள் படிவம் G அல்லது H-யை வங்கியில் தாக்கல் செய்திருந்தால், வங்கியானது வரிப்பிடித்தம் செய்யாது. 60 வயதுக்கு உட்பட்டவர்கள் படிவம் G-யும், 60 வயதைத் தாண்டியவர்களுக்குப் படிவம் H-யும் வங்கியிடம் தரவேண்டும். இந்தப் படிவங்களை வங்கியில் தருவதற்குமுன், உங்கள் ஆண்டு வருமானம் வரி வரம்புக்குள் உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம்!
மீண்டும் நிலைக்கழிவு!
முன்பே அமலில் இருந்து, சிறிது கால இடைவெளிக்குப் பின் மீண்டுவந்திருக்கும் புதிய சலுகை ரூ.40,000 அளவிலான நிலைக்கழிவு.
இந்த நிலைக்கழிவுச் சலுகையானது, ரூ45,000 வரை மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு, நடப்பு நிதியாண்டில் பெறப்போகும் அகவிலைப்படியை ஈடுகட்டிவிடும். எப்படியெனில், தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 1.1.2018 முதல் வழங்கப்பட்டுள்ள அகவிலைப்படி 2%, நடப்பு நிதியாண்டு நிறைவு பெறுவதற்குள் இன்னும் வழங்கப்படக்கூடிய அகவிலைப்படி 1.7.2018-ல் தரவேண்டிய இரண்டாவது தவணைதான்.
தற்போதைய நிலையை வைத்துப் பார்க்கும்போது, 1.7.2018-ல் அறிவிக்கவிருக்கும் அகவிலைப்படி சுமார் 5 சதவிகிதமாக இருக்கலாம். அப்படியானால் நடப்பு நிதியாண்டில் கிடைக்கும் கூடுதல் (Additional) அகவிலைப் படி 7 சதவிகிதமாக இருக்கும். 45,000x84÷100=37,800 கிடைக்க உள்ள நிலைக்கழிவு ரூ.40,000 ஆகும்.
எனவே, வீட்டு வாடகைப்படி கழிவு நீங்கலாக, ரூ.45,000 வரை மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு, கூடுதல் வரிச்சுமை தராமல் இந்த ரூ.40,000 நிலைக்கழிவு பயனுள்ளதாக இருக்கும்.