
இன்வெஸ்கோ இந்தியா கிரெடிட் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)
சமீபத்தில் ஒரு தலைசிறந்த மருத்துவர் என்னைச் சந்திக்க வந்தார். அவர் தனது சேமிப்புக் கணக்கில் வைத்திருந்த தொகையைக் கேட்டால் நீங்கள் அதிர்ந்துபோவீர்கள். ரூ.1 கோடிக்கு மேல் வைத்திருந்தார். கடந்த ஓராண்டு காலமாக அவர் இந்தத் தொகையைத் தனது சேமிப்புக் கணக்கில் வைத்துக்கொண்டிருக்கிறார். காரணம்? அவர் வீடு வாங்கப் போகிறாராம். உடனடியாகப் பணம் தேவைப்படும் என்று தனது சேமிப்புக் கணக்கில் வைத்திருப்பதாகச் சொன்னார்.
இதுமாதிரி செய்கிறவர்களில் நீங்களும்கூட ஒருவராக இருக்கலாம். ஆன்லைன் திருட்டுகள் அதிகம் நடக்கும் இன்றைய நாள்களில், பெரிய தொகையைச் சேமிப்புக் கணக்கில் வைத்துக்கொண்டிருப்பது பாதுகாப்பானதல்ல; திருட்டுகள் ஏதும் நடந்தால் பணத்தைத் திரும்பப் பெறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. தவிர, உங்கள் சேமிப்புக் கணக்கில் அதிகப் பணமிருப்பதை வங்கி அதிகாரிகள் கவனித்துவிட்டால், உங்களை அழைத்து, அன்பாகப் பேசி, அவர்களுக்கு நல்ல கமிஷன் கிடைக்கும் இன்ஷூரன்ஸ் திட்டங்களை உங்களிடம் விற்க முயற்சி செய்வார்கள். ஆக, அவசரத்துக்கு உதவும் என நாம் போட்டு வைத்திருக்கும் பணத்தினால் நமக்குப் பல வகையிலும் தொந்தரவுதான்.

இவை அனைத்திலிருந்தும் மீண்டுவர ஒரே ஒரு வழி, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வழங்கும் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் அல்லது லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்வதுதான். அந்த வகையான ஒரு ஃபண்டைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப் போகிறோம்.
இன்வெஸ்கோ இந்தியா கிரெடிட் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ஒரு அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்ட் ஆகும். இதன் ஃபண்ட் மேனேஜர் நித்திஷ் சிக்கந்த் ஆவார். இந்த ஃபண்ட் தற்போது ரூ.500 கோடிக்கும் மேலான சொத்துகளை நிர்வகித்து வருகிறது.

இந்த ஃபண்டில் வெளியேறும் கட்டணம் இல்லை. தேவைப் படும்போது முழுவதுமாகவோ அல்லது ஒரு பகுதியையோ முதலீட்டாளர்கள் வெளியில் எடுத்துக்கொள்ளலாம். இந்த ஃபண்டை நாம் பரிந்துரைக்க எடுத்துக்கொள்ள முக்கியக் காரணம், இந்த ஃபண்டின் ஹை குவாலிட்டி போர்ட்ஃபோலியோ தான். கிட்டத்தட்ட 85% போர்ட் ஃபோலியோ AAA அல்லது A1+ கிரெடிட் ரேட்டிங் கொண்ட பத்திரங்களில்தான் முதலீடு செய்யப்பட்டுள்ளது. நீண்ட கால முதிர்வைக்கொண்ட பத்திரங்களில், AAA-தான் இருப்பதிலேயே அதிக பாதுகாப் பான பத்திரம். அதேபோல, குறுகிய கால முதிர்வைக் கொண்ட பத்திரங்களில் A1+தான் இருப்பதிலேயே அதிக பாதுகாப்பான பத்திரம் ஆகும். இதன் உயர்ந்த தரத்தினால், சற்றுக் குறைவான கிரெடிட் ரேட்டிங் உடைய ஃபண்டு களுடன் ஒப்பிடும்போது, இந்த ஃபண்டின் வருவாய் சிறிதளவு குறைவாகத்தான் இருக்கும். ஆகவே, நல்ல தரம் மற்றும் பாதுகாப்பை விரும்புபவர் களுக்கு இந்த ஃபண்ட் கச்சிதமாகப் பொருந்தும்.

இந்த ஃபண்ட், குறைவான ரிஸ்க் உடைய கமர்ஷியல் பேப்பர்களில்தான் அதிகமான (84%) முதலீட்டைக் கொண்டு உள்ளது. வட்டியில் உள்ள ரிஸ்க்கைக் குறைப்பதற்காக, இது முதலீடு செய்யும் அனைத்துப் பத்திரங்களையும், அதனதன் முதிர்வுக் காலம் வரை வைத்துக் கொள்கிறது.
சந்தைக்கு அதிகம் தெரியாத நல்ல குவாலிட்டி கம்பெனிகள், தங்களது கமர்ஷியல் பேப்பர்களுக்குச் சற்று அதிக வட்டியைத் தரத் தயங்குவதில்லை. அதுபோன்ற நிறுவனங்களை இந்த ஃபண்ட் டார்கெட் செய்கிறது. மேலும், முதன்முதலாகக் கடன் சந்தைக்கு வரும் நிறுவனங்களையும் இந்த ஃபண்ட் தொடர்புகொள்கிறது. அதைப்போல், கிரெடிட் அப்கிரேடிற்குத் தயாராகவுள்ள நிறுவனங்களையும் டார்கெட் செய்கிறது.
இந்த ஃபண்டின் ஆவரேஜ் மெச்சூரிட்டி மூன்று மாதங்களுக்கு மேல் செல்லாமல், இதன் ஃபண்ட் மேனேஜர் பார்த்துக்கொள்கிறார். தற்போது இந்த ஃபண்டின் ஆவரேஜ் மெச்சூரிட்டி 33 நாள்கள்தான்.

இந்த ஃபண்டில், குறைந்தது மூன்று மாதத்திற்குத் தேவைப்படாத பணத்தை முதலீடு செய்துகொள்ளுங்கள். சில அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி வசதி இருக்காது. இந்த ஃபண்டில் குறைந்தபட்ச மொத்த முதலீடு ரூ.5,000 ஆகும். அதேபோல, குறைந்தபட்ச எஸ்.ஐ.பி முதலீடு ரூ.1,000 ஆகும். உங்களின் எமர்ஜென்சி ஃபண்டிற்கு, குழந்தைகள் கல்விச் செலவுக்கு, இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்டுவதற்கு மற்றும் தற்காலிக மாகப் பணத்தைப் போட்டுவைப்பதற்கு இது ஒரு நல்ல ஃபண்டாகும்.
எஸ்.ஐ.பி மற்றும் மொத்த முதலீட்டை இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்கள் எப்போது வேண்டுமானாலும் துவக்க லாம். அவ்வப்போது வங்கிச் சேமிப்புக் கணக்கில் தூங்கிக்கொண்டிருக்கும் பணத்தை இந்தத் திட்டத்திற்கு மாற்றி விடலாம். ஒரேயொரு வர்த்தக நாளில் பணம் திரும்பக் கிடைத்துவிடும்.
உங்கள் பணம் உங்களின் வங்கி சேமிப்பு மற்றும் கரன்ட் அக்கவுன்ட்களில் தூங்காமல், உங்களுக்காக வேலை செய்ய இது ஒரு அரிய முதலீட்டு வாய்ப்பாகும்.