நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கிராஜூவிட்டி எப்படிக் கணக்கிடப்படுகிறது?

கிராஜூவிட்டி எப்படிக் கணக்கிடப்படுகிறது?
பிரீமியம் ஸ்டோரி
News
கிராஜூவிட்டி எப்படிக் கணக்கிடப்படுகிறது?

சேனா சரவணன்

ரியில்லா பணிக்கொடைக்கான (கிராஜூவிட்டி) வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக அண்மையில் உயர்த்தப்பட்டுள்ளது.  இதனால், பணியாளர்களுக்கு எவ்வளவு லாபம் என்பதை 8.4.2018 தேதியிட்ட நாணயம் விகடன் இதழில் (https://bit.ly/2JiBdDn) விரிவாகத் தந்திருந்தோம்.
இதனைப் படித்த பல வாசகர்கள் இந்த கிராஜூவிட்டியை எப்படிக் கணக்கிடுகிறார்கள் என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும் எனக்  கேட்டிருக்கிறார்கள். இதோ அதற்கான விளக்கம்... 

கிராஜூவிட்டி எப்படிக் கணக்கிடப்படுகிறது?

   ஏன் கிராஜூவிட்டி?

நிறுவனங்களில் பணியாளர்கள் பல ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியதைப் பாராட்டும் வகையில் பணி ஓய்வின்போது அந்த நிறுவனத்தால் அளிக்கப்படுவதுதான் பணிக்கொடை ஆகும். 

பொதுவாக,  குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாகப் பணிபுரிந்திருந்தால் பணிக்கொடை கிடைக்கும். பத்திரிகையாளர் களுக்கு மட்டும் இது மூன்று ஆண்டுகள் என உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்குமேல் வேலை பார்த்துவிட்டு, அந்த வேலையைவிட்டு விலகியவர் களுக்கும் கிராஜூவிட்டி கிடைக்கும். 

   எப்படிக் கணக்கிடுகிறார்கள்?

வருமான வரிச் சட்டத்தின்படி,  கிராஜூவிட்டி யைக் கணக்கிட தனி ஃபார்முலா உள்ளது. அந்த  ஃபார்முலா... 

கிராஜூவிட்டி = கடைசியாகப் பெற்ற சம்பளம் X பணிபுரிந்த ஆண்டுகள் X 15/26

இங்கே சம்பளம் என்பது அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகிய இரண்டும் சேர்ந்ததாகும். இந்த ஃபார்முலாவின்படி கணக்கிடும்போது, பணிக் காலம் 7 ஆண்டுகள் 7 மாதங்கள் எனில், அது எட்டு ஆண்டு எனக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதேசமயம், பணிக் காலம் 7 ஆண்டுகள் 5 மாதங்கள் எனில்,  ஏழு ஆண்டு என்றே எடுத்துக்கொள்ளப்படும்.

கிராஜூவிட்டி மீதான வருமான வரிக் கணக்கீடு,  கடைசியாகப் பெற்ற சம்பளம் மற்றும் பணிபுரிந்த ஆண்டுகளின் அடிப்படையில் அமைவது.

உதாரணமாக, ஒருவர் 30 ஆண்டுகள் பணிபுரிந்து கடைசி மாதத்தில் ரூ.50,000 சம்பளம் பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கான சட்டப்படியான கிராஜூவிட்டி கணக்கீடு = 50,000x30 ஆண்டுகள் x 15/26 = 8,65,385.

இங்கே சட்டப்படியான கிராஜூவிட்டி ரூ.8,65,385 என்றாலும், பணியாளரைப் பாராட்டும் விதமாக அவர் வேலை பார்த்த நிறுவனம் ரூ.10 லட்சத்தை கிராஜூவிட்டி தருகிறது என்று வைத்துக்கொள்வோம்.  

வரியில்லா கிராஜூவிட்டிக்கான உச்சவரம்பு, நிறுவனம் கொடுத்த  கிராஜூவிட்டி, வருமான வரியைக் கணக்கீடுபடியான கிராஜூவிட்டி  - இந்த மூன்றில் எது குறைவோ, அதுவே வருமான வரி விலக்குக்காக எடுத்துக்கொள்ளப்படும். 

தற்போதைய நிலையில், வரியில்லா கிராஜூவிட்டி உச்சவரம்பு ரூ.20, லட்சம், நிறுவனம் கொடுத்த  கிராஜூவிட்டி ரூ.10 லட்சம், வருமான வரியைக் கணக்கீடும்படியான கிராஜூவிட்டி ரூ.8,65,385-ஆக உள்ளது.

இந்த மூன்றில், சட்டப்படியான கிராஜூவிட்டி ரூ.8,65,385 குறைவான தொகையாக இருப்பதால், அதுதான் வருமான வரி விலக்குக்காக எடுத்துக் கொள்ளப்படும். பெற்ற ரூ.10 லட்சத்தில் வரி விலக்கு போக மீதியுள்ள ரூ.1,34,615-க்கு வரி கட்ட வேண்டிவரும். ஒருவருக்கு நிறுவனம் கொடுத்த  கிராஜூவிட்டி ரூ.22 லட்சம், வருமான வரியைக் கணக்கீடுபடியான கிராஜூவிட்டி ரூ.20 லட்சம், வரியில்லா கிராஜூட்டி ரூ.20 லட்சம் என்கிற நிலையில், அவருக்கு ரூ.20,00,000 வரியில்லா கிராஜூவிட்டியாகக் கிடைக்கும். மீதி ரூ.2 லட்சத்துக்கு வரி கட்ட வேண்டிவரும்.

இந்த ஃபார்முலாவைப் பயன்படுத்தி, இனி உங்களுக்கு எவ்வளவு கிராஜூவிட்டி கிடைக்கும் என்பதைக் கணக்கிட்டுப் பார்க்கலாமே.