
ட்விட்டர் சர்வே: மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு அதிகரிக்க என்ன காரணம்?

இந்தியாவில் 2017-18-ம் நிதியாண்டின் முடிவில், மியூச்சுவல் ஃபண்டில் ரூ.23 லட்சம் கோடி முதலீடு ஆகியிருக்கிறது. கடந்த ஓராண்டு காலத்தில் ரூ.4.75 லட்சம் கோடி, மியூச்சுவல் ஃபண்டில் புதிதாக முதலீடாகியிருக்கிறது. இது 2016-17-ம் ஆண்டைவிட சுமார் 26% அதிகம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு இவ்வளவு உயர என்ன காரணம் என நாணயம் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) ஒரு கேள்வி கேட்டோம். கிடைத்த புள்ளிவிவரங்கள் சுவாரஸ்யமானவை.

இந்த சர்வேயில் 49% பேர், வங்கி எஃப்.டி மீதான வட்டி குறைந்திருப்பதே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு அதிகரிக்கக் காரணம் என்று சொல்லியிருக்கிறார்கள். இது மிகச் சரியான காரணம்தான். பத்து ஆண்டுகளுக்கு முன்பு 9 சதவிகிதமாக இருந்த வங்கி எஃப்.டி வட்டி, தற்போது 6.25% அளவுக்கு குறைந்திருக்கிறது. பணவீக்க விகிதம் அளவுக்குக்கூட வங்கி எஃப்.டி-யில் வருமானம் கிடைக்காததால், மியூச்சுவல் ஃபண்டில் மக்களின் கவனம் திரும்பியுள்ளது.
ரியல் எஸ்டேட்டில் கவர்ச்சிகர லாபம் இல்லை என உணர்ந்ததால், ஃபண்ட் முதலீடு அதிகரித்துள்ளது என 18% பேர் சொல்லியிருக்கிறார்கள். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தவர் கள், கடந்த சில ஆண்டுகளாக எந்த லாபத்தையும் அடையாததுடன், வாங்கிய மனைகளை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

சுமார் 33% பேர், ஃபண்ட் முதலீடு மீதான நம்பிக்கை அதிகரித்து வருவது முக்கியக் காரணம் எனச் சொல்லி யிருக்கின்றனர். பத்தாண்டுகளுக்கு முன், ஃபண்ட் முதலீட்டை சந்தேகத்து டன் பார்த்தவர்கள், இப்போது அதைப் புரிந்துகொண்டு முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஆக மொத்தத்தில், மியூச்சுவல் ஃபண்டில் செய்யப்படும் முதலீடு, இனிவரும் காலத்தில் அதிகரிக்கவே செய்யும்!
- ஏ.ஆர்.கே