பங்குச் சந்தைகளில் கேட்பாரற்றுக் கிடக்கும் ரூ.1,300 கோடி... எப்படித் திரும்பப் பெறுவது?

பங்குச் சந்தைகளில் கேட்பாரற்றுக் கிடக்கும் ரூ.1,300 கோடி... எப்படித் திரும்பப் பெறுவது?

மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளில் ரூ.1,300 கோடி மதிப்பு பங்குகள் கேட்பாரற்றுக் கிடக்கிறது. ஐ.டி.சி-யில் ரூ.364 கோடி, டைட்டனில் ரூ.164 கோடி, வேதாந்தாவில் ரூ.95 கோடி, ஏசியன் பெயின்ட்ஸில் ரூ.95 கோடி எனப் பல நிறுவனங்களின் பங்குகள் கேட் பாரற்றுக் கிடக்கின்றன. இப்படிக் கிடக்கும் பங்குகளைத் திரும்பப் பெறும் வழிமுறைகள் பற்றி சி.டி.எஸ்.எல் நிறுவனத்தின் சீனியர் மேனேஜரும், தமிழ்நாடு ரீஜினல் ஹெட்டுமான ஏ.ஆர்.வாசுதேவனிடம் கேட்டோம்.
‘‘ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய முதலீ்ட்டாளருக்கு அந்த நிறுவனம் டிவிடெண்ட் தருவது வழக்கம். பங்குகள் சான்றிதழ் வடிவில் இருந்தால், டிவிடெண்ட்-ஆகத் தரப்படும் தொகை செக் வடிவில் முதலீட்டாளர்களுக்கு அனுப்பப்படும். பங்குகள் டீமேட் வடிவில் மாற்றப்பட்டிருந்தால், டிவிடெண்ட் தொகை அவரின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் சென்றுவிடும்.

பங்கினை வைத்திருக்கும் முதலீட்டாளர் ஒருவர் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் தொடர்ந்து டிவிடெண்டைக் கோராமல் இருந்தால், செபியின் கருத்துப்படி, அந்த முதலீட்டாளர் இறந்துவிட்ட தாகக் கருதப்படுவார். அந்த டிவிடெண்ட் தொகை ஐ.பி.எஃப்-க்கு (Investor’s Protection Fund) மாற்றப்படும்.
இந்த டிவிடெண்ட் தொகையைத் திரும்பப் பெறவிரும்பினால், பங்கை வாங்கியவர் இறந்ததற்கான சான்றிதழ், உரிமை கோரும் வாரிசுகள் குறித்த சான்றிதழ், பங்குப் பத்திரம் ஆகியவற்றைத் தந்து, ஏன் இத்தனை நாள்களாக டிவிடெண்ட் கோரவில்லை என்பதற்கான தெளிவான விளக்கம் அளித்தால், முதலீடு திரும்பக் கிடைப்பதற்கு வழியுண்டு’’ என்றார்.
பங்குச் சந்தையில் நீங்கள் முதலீடு செய்திருந் தால், அதை உங்கள் வாரிசுகளுக்கு அவசியம் தெரியப்படுத்துங்கள்.
- கே.எஸ்.தியாகராஜன்