
ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயானது நைமெக்ஸ் சந்தையில் 69 டாலர்களையும், பிரண்ட் க்ரூட் 74 டாலர்களையும் தொட்டுள்ளது. இரண்டுமே 2014–ம் ஆண்டிற்குப்பிறகு கண்டுள்ள அதிகபட்ச விலையாகும்.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பது, நமக்குக் கவலைதரும் விஷயமே. ஏனென்றால், அரசாங்கம் அதற்குத் தகுந்தாற்போல், பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை மாற்றி அமைத்து விற்பனை செய்ய வேண்டும். இதனால் நுகர்வோர்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் அதிகரிக்கும்.

கச்சா எண்ணெய் விலையேறுவதினால், நம் நாட்டில் பணவீக்கம் அதிகமாகும். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவடையும். இறக்குமதிச் செலவு அரசாங்கத்திற்குக் கூடும். ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களைக் குறைப்பது தள்ளிப்போகும். ஆகமொத்தத்தில், பொருளாதார வளர்ச்சியில் தொய்வு ஏற்படலாம்.
கடந்த நான்கு வருடங்களாக, இந்திய எண்ணெய்த் துறை சார்ந்த நிறுவனங்களுக்குச் சாதகமான சூழ்நிலை இருந்துவந்தது. தற்போது அந்த நிறுவனங்களுக்கு எதிர்மறையான போக்கு காணப்படுகிறது. கச்சா எண்ணெயின் விலை உயர்ந்திருப்பதினால், அந்தத் துறை சார்ந்த பங்குகளின் விலை ஏற்கெனவே உயர்ந்து விட்டன.
கச்சா எண்ணெயின் சர்வதேசச் சந்தை விலை என்பது உலக நாடுகளின், 1)மொத்த உற்பத்தி அளவு, 2) மொத்தத் தேவை, 3) கையிருப்பு, 4) வெவ்வேறு நாடுகளின் உற்பத்தித் தடைகள் ஆகிய காரணங்களே தீர்மானிக்கின்றன. இவை பற்றிக் விளக்கமாகப் பார்ப்போம். இந்தக் காரணங்களைப் பற்றி கொஞ்சம் விளக்கமாகவே இப்போது பார்ப்போம்.

1) சர்வதேச அளவிலான உற்பத்தி
எந்தவொரு கமாடிட்டியாக இருந்தாலும், அதன் விலை ஏற்றம் அல்லது இறக்கம் என்பது தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளி எந்த அளவிற்கு இருக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும். 2014-ல் கச்சா எண்ணெய் விலை 105 டாலரில் இருந்து, பாதிக்குமேல் இறக்கம் அடையக் காரணமே, அமெரிக்காவின் ஷேல் எண்ணெய் உலகச் சந்தையில் அதிக வர்த்தக மாகத் தொடங்கியதுதான். அதுவரையில் ஒபெக் நாடுகள் உற்பத்தி செய்த கச்சா எண்ணெய் மட்டுமே விற்பனையில் முக்கியப் பங்கு வகித்தன.
கச்சா எண்ணெயில் இப்போது காணப்படுகிற விலை ஏற்றமானது, ஒபெக் நாடுகள் எடுத்த உற்பத்திக் குறைப்பு தொடர்பான நடவடிக்கைகள் காரணமாகவும், அமெரிக்காவின் ஷேல் எண்ணெய் உற்பத்தியில், அவ்வப்போது காணப்படுகிற இறக்கங்கள் (ஒரு வருடத்திற்கு முன்பு உற்பத்தியில் தொய்வு காணப்பட்டன. இப்போதைய நிலையில் அவ்வாறு இல்லை) காரணமாகவும் சொல்லப் படுகின்றன. அதனால், கச்சா எண்ணெய் விலை கடும் சரிவிலிருந்து மீண்டும் எழுந்து (27 டாலரிலிருந்து) மெள்ளமெள்ள அதிகரித்து, தற்போது 68 டாலர்களாக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் எண்ணெய் எடுக்கும் இயந்திரங்களின் எண்ணிக்கையையும், ஒரு நாளைய அமெரிக்க ஷேல் எண்ணெய் உற்பத்தி அளவையும் சொல்லும் வரைபடம்-1 மேலே தரப்பட்டிருப் பதைப் பாருங்கள். இதில், 2015 மார்ச் மாதத்திய ஷேல் எண்ணெய் உற்பத்தி அளவும், தற்போதைய 2018 மார்ச் மாதத்திய ஷேல் எண்ணெய் உற்பத்தி அளவும் ஏறக்குறைய ஒரே அளவில்தான் காணப்படுகிறது. அதாவது, ஒரு நாளைக்கு 10.5 மில்லியன் பேரல்கள் என்ற அளவிற்கு உற்பத்தி காணப்படுகிறது. (பார்க்க, குச்சி வடிவில் இருக்கும் நீல நிறக்கோடு).
இந்த வரைபடத்தில் உள்ள வெள்ளை நிறக்கோடு சொல்லும் தகவலும் சுவாரஸ்யமானது. 2015 மார்ச் மாதத்தில் எண்ணெய் எடுக்கும் பணியில் 500 இயந்திரங்கள் ஈடுபட்டன. இந்த இயந்திரங்களின் எண்ணிக்கை தற்போது 800-ஆக உயர்ந்துள்ளது. இதனால், தற்போதைய ஷேல் எண்ணெய் உற்பத்தி அளவானது வரும் மாதங் களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. 2016–ம் ஆண்டு ஜூன் வரையிலான காலத்தில் ஷேல் எண்ணெய் உற்பத்தியானது குறைந்ததும், ஒபெக் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக விலையேற்றம் கண்டதையும் வரைபடம் உணர்த்துகிறது.
ஷேல் எண்ணெய் உற்பத்தி தற்போது அதிகரித்துவரும் நிலையில், கச்சா எண்ணெய் 68 டாலர்களாக உயர்ந்துள்ளது.

2) உலக நாடுகளின் தேவை அதிகரிப்பு
கச்சா எண்ணெயின் தேவையானது, 2017–ம் ஆண்டு நிலவரப்படி, 2016-ம் ஆண்டைக்காட்டிலும், இரண்டு மடங்கு அதிகரித்து, அதாவது 2.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. உலக எரிசக்தித் தேவையில் 70% கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி போன்றவற்றால் பூர்த்தி செய்யப்படுகின்றன.
அமெரிக்காவின் எரிசக்தி ஆணையத்தின் மதிப்பீட்டின்படி, 2018–ம் ஆண்டின் உலக அளவிலான கச்சா எண்ணெய்த் தேவை ஒரு நாளைக்கு 100.1 மில்லியன் பேரல்களாகவும், 2019–ம் ஆண்டில் 101.75 மில்லியன் பேரல்களாகவும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது.
1) உலக அளவில் கச்சா எண்ணெய் நுகரும் நாடுகளில் சீனா முக்கியப் பங்கு வகிக்கிறது. சீனாவின் மொத்தப் பயன்பாட்டில் 60% என்ற அளவிற்கு இறக்குமதிமூலம் பூர்த்தி செய்து கொள்கிறது. 2018-ன் முதல் காலாண்டில், இதற்கு முந்தைய ஆண்டின் முதல் காலாண்டோடு ஒப்பிடும்போது, 7% அதிகரித்துள்ளது.

2) இந்தியாவைப் பொறுத்தவரை, உள்நாட்டுத் தேவை கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்து வந்துள்ளது. 2015-16-ல் 184 மில்லியன் டன்களாக வும், 2016-17–ல் 194.6 மில்லியன் டன்களாகவும், 2017-18-ல் முதல் 11 மாதங்களில் மட்டும் 186.2 மில்லியன் டன்களாகவும் தொடர்ந்து பயன்பாடு (நுகர்வு) உயர்ந்துகொண்டே வந்துள்ளது.
மேலும், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி விலை ஒரு பேரல் 2015-16-ல் 46.17 டாலர்களாகவும், 2016-17-ல் 47.56 டாலர்களாகவும், 2017 ஏப்ரல் முதல் 2018 பிப்ரவரியுடன் முடிந்த காலத்தில் 55.74 டாலர்களாகவும் இந்திய எண்ணெய் அமைச்சகம் கூறியுள்ளது.
சென்ற மாதத்தின் இறக்குமதி விலை 65 டாலர்களாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக 66 ரூபாயாகச் சரிந்துள்ள நிலையில், சில்லறை விலை அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் உண்டு.
ஆசியப் பிராந்தியத்தில் அதிக நுகரும் நாடுகளான சீனா, இந்தியா ஆகியவற்றின் தேவை அதிகரிப்பது, ஒபெக்கின் உற்பத்திக் குறைப்பு நடவடிக்கைகள் அனைத்துமாக ஒருசேர, இப்போதைய நிலையில் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளியைக் குறைத்துள்ளன. அதனால் இந்த விலையேற்றம் காணப்படுகிறது.

3) குறையும் கச்சா எண்ணெய்க் கையிருப்பு
முன்பக்கத்தில் வரைபடம் 2-ல் உள்ள பச்சை நிறத்தில் இருக்கும் நிலைக்கோடுகள் 2014-ம் ஆண்டின் முதல் காலாண்டிலிருந்து 2016 முதல் காலாண்டு வரையிலான காலத்தில் தேவைக்கு அதிகமாக (ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 மில்லியன் பேரல்களாக) உற்பத்தி காணப்படுகிறது. அதன்பின்னர், 2017 முதல் காலாண்டில் உபரிக் கச்சா எண்ணெய் சந்தையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
ஆனால், மீண்டும் தற்போது 2018–ன் முதல் காலாண்டில், கையிருப்பானது முதல் இரண்டு மாதங்களில் சற்று அதிகரித்தும், பின்னர் குறைந்தும் காணப்படு கிறது. ஒபெக் நாடுகள் எடுத்த நடவடிக்கையின் காரணமாகக் கையிருப்பு குறைந்து, விலையேற்றத்திற்கு வழிவகுத்தது.
(உலக அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி, பயன்பாடு மற்றும் கையிருப்பு ஆகிய அனைத்தையும் வரைபடம் 2 விளக்குகிறது. இதிலுள்ள நீலக்கோடு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியையும், கறுப்புக்கோடு உலக அளவிலான கச்சா எண்ணெய் நுகர்தலையும் குறிக்கிறது)

4) வெவ்வேறு நாடுகளின் உற்பத்தியில் ஏற்படுகிற தடைகள்
சமீபத்திய விலை ஏற்றத்திற்குக் காரணம், சிரியா மீதான தாக்குதல்கள், வெனிசுலாவின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள தடைகள், ஒபெக், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் ஒருமித்த உற்பத்திக் குறைப்பு – இவை யெல்லாம் ஒன்று சேர்ந்து, ஏற்கெனவே உற்பத்தி செய்யப் பட்ட, சந்தையில் உபரியாக இருந்த கச்சா எண்ணெய்யானது சந்தைகளிலிருந்து வெளியேற்றப் பட்டது. இவை எல்லாம் சேர்ந்து தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளியைக் குறைத்தது. இதனால் அதிகப்படியான ஷேல் எண்ணெய் அளவானது, உற்பத்தி இழப்பில் ஈடுகட்டப் படுவதால், இதுவரை அதன் தாக்கம் சந்தைகளில் விலை இறக்கத்தைக் கொண்டு வரவில்லை.

விலை சரியுமா?
ஐ.எம்.எஃப் அறிக்கையின்படி, சென்ற ஆண்டில் (2017) உலகப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 3.8 சதவிகிதமாக இருந்தது, 2018-ல் 3.9 சதவிகிதமாக உயர வாய்ப்பிருப்பதாக அறிவித்திருப்பது, வெனிசுலா நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி தடைப்பட்டுள்ளது, வளரும் நாடுகளின் நாணய மதிப்பு டாலருக்கு நிகராக வலுவான நிலையில் இருப்பதன் அறிகுறி ஆகும். அத்தகைய நாடுகளின் பொருளாதாரம் மேம்படச் சாத்தியக்கூறுகளாகப் பார்க்கப்படுவதும், மத்தியக் கிழக்கு நாடுகளில் காணப்படுகிற பதற்றங்கள், ஈரான் மீதான கட்டுப்பாடுகள் பற்றிய அச்சம் போன்றவையும் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதற்கான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.
ஆனால், சந்தைகளின் கவனம் அமெரிக்க ஷேல் எண்ணெய் உற்பத்தி பற்றிய புள்ளிவிவரங்கள்மீது திரும்பியுள்ளது. அமெரிக்க எண்ணெய் ஏற்றுமதியானது ஐரோப்பிய பிராந்தியத்தில், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
அதாவது, ஐரோப்பிய நாடுகள், ஒபெக் நாடுகள் மற்றும் ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி வர்த்தகத்தைக் குறைத்துக் கொண்டுள்ளன. அப்படியென்றால், ஒபெக் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் கையிருப்பு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
மேலும், எவ்வளவு காலத்திற்கு உற்பத்திக் குறைப்பு நிலையை நீட்டிக்கச் செய்வது என்பதில் ஒபெக் உறுப்பு நாடு களிடையே கருத்தொற்றுமை இருக்குமா என்பதில் சந்தேகங்கள் இருக்கின்றன. ஆக மொத்தத்தில், தற்போதைய சர்வதேச விலையேற்றம் என்பது நீடிக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

எண்ணெய் பங்குகளின் விலை: இனி என்னவாகும்?
கச்சா எண்ணெயின் விலையேற்றத் தால், எண்ணெய் நிறுவனப் பங்குகள் 52 வாரக் குறைந்தபட்ச விலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பி.பி.சி.எல், ஹெச்.பி.சி.எல், சென்னை பெட்ரோலியம், எம்.ஆர்.பி.எல் போன்ற பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.
இதற்குக் காரணம், அதிக விலையில் கச்சா எண்ணெய் வாங்கி, அதைச் சுத்திகரித்து விற்கும் போது, விலை உயர்த்தி விற்க முடியாத காரணத்தினால், அதன் லாப விகிதம் குறைய வாய்ப்புண்டு. சந்தை இவற்றை முன்கூட்டியே கணித்துப் பங்கு விலையில் பிரதிபலிக்கச் செய்கின்றன.
ஒருவேளை, கச்சா எண்ணெய் திடீரென்று சரியும்பட்சத்தில், மேற்சொன்ன பங்குகள் குறுகிய காலத்திலேயே ஏற்றமடைய வாய்ப்புண்டு.
நம் நாடானது கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிற நாடாக இருப்பதால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் காணப்படுகிற ஏற்ற/இறக்கங்களையும் முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ரூபாயின் மதிப்பு உயர்ந்தால், இந்தத் துறை சார்ந்த பங்குகளைச் சாதகமாகவும், மதிப்பு சரிந்தால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்றும் எடுத்துக்கொள்ள வேண்டும்.