
கேள்வி - பதில்

ரூ.20 லட்சத்துக்குள் ஏற்றுமதி செய்யும் நான், ஜி.எஸ்.டி பதிவு செய்வது அவசியமா?
கார்த்திக், புதுக்கோட்டை
கே.எஸ்.கமாலுதீன், இயக்குநர், புளூபாரத் எக்ஸிம்.

“உங்களுடைய டேர்ன்ஒவர் ரூ.20 லட்சத்திற்குள் இருக்கும்போது ஜி.எஸ்.டி-யில் பதிவுசெய்வது சட்டப்படித் தேவையில்லை. ஆனால், நீங்கள் ஏற்றுமதி வணிகத்தில் இருப்பதால், ஏற்றுமதி அளவைக் கணக்கில்கொள்ளாமல் ஜி.எஸ்.டி-யில் பதிவு செய்துகொள்வது நல்லது.
குறிப்பாக, ஏற்றுமதித் துறையில், ஜி.எஸ்.டி வரி வரம்பிற்குள் வரும் பொருள் மற்றும் சேவை இரண்டுக்கும் பதிவுசெய்வது நல்லது. நீங்கள் கட்டும் வரியானது, ஐ.ஜி.எஸ்.டி ரீஃபண்டாகத் திரும்பக் கிடைத்து விடும் என்பதால், வரி செலுத்துவது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.”
என் மனைவியின் பெயரில், அவருடைய தந்தை தானமாக அளித்த வீட்டுமனை உள்ளது. அதில் வீடு கட்டுவதற்குத் தீர்மானித்துள்ளோம். மனைவிக்கு வருமானம் இல்லை. நாங்கள் இருவரும் இணைந்து வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாமா?
மகேஷ்குமார், திருத்தணி
ஆர்.செல்வமணி, கனரா வங்கி, உதவிப் பொதுமேலாளர் (ஓய்வு)

“இருவரும் இணைந்து விண்ணப்பிக்கலாம். தான செட்டில்மென்ட் மாற்றவியலாததாக (Irrevocable) இருக்கவேண்டும். உங்கள் மனைவியின் தந்தைக்கு அந்த வீட்டுமனையில் வசிக்கும் உரிமை (Life Interest) இருக்கக்கூடாது. ஒருவேளை அவ்வாறு இருந்தால், அவருடைய தந்தையும் மனையை வங்கிக்கு அடமானம் செய்துதர வேண்டியிருக்கும். குறைந்தபட்சம் 13 ஆண்டு களுக்கு வில்லங்கச் சான்றிதழ், லேஅவுட் அப்ரூவல், பிளான் அப்ரூவல், கே.ஒய்.சி சான்று, வேலை/வருமானச் சான்று, புகைப்படங்கள் போன்றவை தேவைப்படும்.”
ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை ஒவ்வோர் ஆண்டும் புதுப்பித்து வருகிறேன். தற்போது எனக்கு அதிக ரத்த அழுத்தம் இருப்பதைத் தெரிந்து கொண்டேன். இதனை இன்ஷூரன்ஸ் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டியது அவசியமா?
டேனியல், விழுப்புரம்
பி.மனோகரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்.

“பொதுவாக, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்முன்பு அதிக ரத்த அழுத்தம் இருப்பது தெரிந்தால் மட்டுமே தெரிவிக்க வேண்டும். பாலிசி எடுத்தபின்பு அதனைப் பற்றி தெரிவிக்கத் தேவையில்லை.
அதேபோல, பாலிசியைப் புதுப்பிக்கத் தவறி, காலதாமதப்படுத்தி அதன்பின் புதுப்பித்தாலோ, பாலிசிக்கான கவரேஜ் தொகையை மேலும் அதிகரித்தாலோ, அத்தகைய தருணங்களில் இந்தத் தகவலைத் தெரிவிக்க வேண்டியிருக்கும்.”
என் வயது 28. மாதம் ரூ.6,000 வீதம் ஐந்தாண்டுக் காலத்திற்கு முதலீடு செய்ய விரும்புகிறேன். 80சி வரிக் கழிவுக்கானதை ஏற்கெனவே செய்துவிட்டேன். இ.எல்.எஸ்.எஸ் தவிர்த்த, ஆண்டுக்குச் சராசரியாக 12% வருமானம் தரக்கூடிய வேறு ஏதாவது திட்டங்களைப் பரிந்துரைக்கவும்.
ராம்குமார், திருநெல்வேலி
ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா.

“மியூச்சுவல் ஃபண்டுகளில் இவ்வளவு வருமானம் அல்லது லாபம் கிடைக்குமென்று உத்தரவாதமாகக் கூற முடியாது. மேலும், உங்கள் முதலீட்டுக் காலமான ஐந்து வருடங்களுக்கு அதிக ரிஸ்க் எடுக்கவும் முடியாது. ஆகையால், ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்கும் ஃபண்டுகளின் தொகுப்பை நான் பரிந்துரை செய்கிறேன். இதில் முதலீடு செய்தால், வருடத்திற்கு 12% லாபம் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
பங்குச் சந்தை மிதமான ஏற்றத்தில் இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த முதலீட்டுத் தொகுப்பி லுள்ள இரண்டு ஃபண்டுகளில் சமஅளவில் முதலீடு செய்யலாம். ஒன்று, ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு ஃபண்ட், மற்றது, மிரே அஸெட் இந்தியா ஈக்விட்டி ஃபண்ட். இந்த இரண்டிலும் ரூ.3,000 வீதம் முதலீடு செய்துவந்தால், ஐந்து வருடங்களில் நல்ல லாபம் காண வாய்ப்பிருக்கிறது.”
என் வயது 35. என் வயதுக்கேற்ப, அஸெட் அலோகேஷன்படி, ஈக்விட்டி ஃபண்டுகளில் 65%, கடன் சார்ந்த ஃபண்டுகளில் 35% என்ற அளவில் முதலீடு செய்யலாம். கடன் சார்ந்த ஃபண்ட் முதலீட்டில் பி.எஃப் முதலீட்டையும் சேர்க்கலாமா?
கிருஷ்ணகுமார், தேவகோட்டை
என்.விஜயகுமார், நிதி ஆலோசகர், Vbuildwealth.com

“கடன் சார்ந்த ஃபண்ட் முதலீட்டில் பி.எஃப் முதலீட்டையும் சேர்க்கலாம். வீட்டு வருமானம், சொத்து வருமானம், வீட்டு வாடகை, டிவிடெண்ட், ஃபிக்ஸட் டெபாசிட், அஞ்சலக சேமிப்பு என எதெல்லாம் மாதாமாதம் நிரந்தரமாக உள்ளதோ, அவற்றையெல்லாம் கடன் சார்ந்த ஃபண்ட் பிரிவில் சேர்க்கலாம். பங்குச் சந்தை சார்ந்திருக்கும் ஈக்விட்டி முதலீடு ஈக்விட்டி ஃபண்டில் சேரும். இவை அனைத்தும் சேர்ந்தது தான் அஸெட் அலோகேஷன். அஸெட் அலோகேஷன், உங்களது வயதின் அடிப்படையில் முதலீட்டின் அளவைத் தீர்மானிக்கிறது.”
முடிந்த 2017-18-ம் நிதியாண்டில் பங்குகளை வாங்கி விற்றதில் எனக்குக் குறுகிய கால மூலதன ஆதாயம் ரூ.62,635 கிடைத்துள்ளது. நான் ஏற்கெனவே வருமான வரம்புக்குள் வருகிறேன். அதற்கான வரியை வேலை பார்க்கும் நிறுவனம் டி.டி.எஸ்-ஆகப் பிடித்துவிட்டது. குறுகிய கால மூலதன ஆதாயத்துக்கு எவ்வளவு வரி கட்ட வேண்டும், எந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும்?
கே.சரவணக்குமார், சென்னை
கே.ஆர்.சத்தியநாராயணன், ஆடிட்டர்.

“நீங்கள் ஏற்கெனவே வருமான வரி வரம்புக்குள் வருவதால், பங்குகளைக் குறுகிய காலத்தில் விற்று பெற்ற லாபத்துக்கு 15% மற்றும் 3% கல்வித் தீர்வை சேர்த்து மொத்தம் 15.45% வரி கட்ட வேண்டும். ரூ.62,635-க்கு ரூ.9,677 வரி கட்ட வேண்டும். இந்த வரியை சலான்-280 மூலம் வருமான வரித் துறையின் இ-ஃபைலிங் மூலம் கட்டலாம். வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது, ஐ.டி.ஆர் படிவம்-2 பயன்படுத்த வேண்டும்.”
என் வயது 25. இருபது ஆண்டுகளில் ரூ.2 கோடி வருமானம் என்கிற இலக்குடன் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடிவெடுத்திருக்கிறேன். நான் ஒரு கன்சர்வேட்டிவான முதலீட்டாளர். எனக்கேற்ற ஃபண்டுகள் மற்றும் முதலீட்டு முறையைப் பரிந்துரைக்கவும்.
ராஜேந்திரன், நாகர்கோவில்
எஸ்.ராமலிங்கம், நிதி ஆலோசகர்

‘‘ரூ.2 கோடி என்கிற இலக்கினை 20 வருடங்களில் அடைய, ஆண்டுக்குச் சராசரியாக 12% லாபம் கிடைக்கும் என்று வைத்துக்கொண்டால், மாதம் ரூ.22,000 என எஸ்.ஐ.பி மூலம் உங்கள் முதலீட்டைத் தொடங்கலாம்.
ரூ.5,500 வீதம் ரிலையன்ஸ் ரெகுலர் சேவிங்ஸ் பேலன்ஸ்டு ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு ஃபண்ட், எல்&டி இந்தியா புரூடன்ஸ், கோடக் பேலன்ஸ்டு ஃண்டுகளில் முதலீடு செய்துவந்தால் இலக்கை எட்ட வாய்ப்புள்ளது.’’
தொகுப்பு: தெ.சு.கவுதமன்
கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.