
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)
ரிலையன்ஸ் பார்மா ஃபண்ட், அதன் பெயரில் உள்ளதுபோல, மருந்துத் துறை சார்ந்த ஃபண்டாகும். பொதுவாக, துறை சார்ந்த ஃபண்டுகளில் ரிஸ்க் அதிகம் என்பதால், சிறிய முதலீட்டாளர்கள் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதல்முறையாக முதலீடு செய்பவர்கள் இந்த ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டாம்.

ஏற்கெனவே மியூச்சுவல் ஃபண்டு களில் முதலீடு செய்து வருபவர்கள் தங்களது போர்ட்ஃபோலியோவை பரந்ததாக டைவர்ஸிஃபை செய்வதற்கு முதலீடு செய்யலாம். இந்தத் துறை பற்றி ஓரளவு நன்கு தெரிந்துவைத்திருப்பவர் களும் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
இந்த ஃபண்டை பரிந்துரை செய்வதற்கான காரணம் என்ன?
மருந்துத் துறைக்கான தேவை இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் வளர்ந்துகொண்டே வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், மக்களின் வாழ்நாள் அதிகரித்துக்கொண்டு செல்வதுதான். மேலும், இந்திய மக்களின் வாழ்க்கைத் தரம் நாளுக்குநாள் உயர்ந்து கொண்டு வருகிறது. இந்திய மருந்து நிறுவனங்கள் வெளிநாடுகளுக்குப் பெருவாரியாக ஏற்றுமதி செய்கின்றன. நம் நாடு பொருளாதாரத்தில் மேம்பட்டு வரும் இந்தக் காலகட்டத்தில், மருந்துத் துறையின் வளர்ச்சியும் அமோகமாக இருக்கும். ஏனென்றால், மக்களின் வருமானம் அதிகரிக்கும்போது, உடல் நலத்திற்காகச் செலவிடும் தொகையும் அதிகமாகும்.

மேலும், நம் இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்காக கான்ட்ராக்ட் அடிப்படையில் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி (CRAMS – Contract Research and Manufacturing Business) செய்துதரும் தொழிலும் பெருகி வருகிறது.
ஏற்றுமதி மற்றும் உள்நாட்டுச் சந்தை ஆகிய இரண்டு காரணங்களினால் இந்தத் துறை ஒரு எவர்கிரீன் என்று சொல்லலாம். குறுகிய காலத்தில் இந்த வகை ஃபண்டுகள் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தாலும், நீண்ட காலத்தில் நல்ல வருவாயைத் தரவல்லது. இந்த ஃபண்டில் செய்யப்போகும் முதலீட்டை மக்கள் எந்த காரணத்துக்காகவும் செய்யாமல், செல்வம் சேர்ப்பதற்காக (Wealth creation) செய்யலாம்.
பார்மாத் துறை கடந்த 2, 3 வருடங்களில் பெரிய வருமானத்தைத் தரவில்லை. பல முன்னணி பார்மாத் துறை பங்குகளின் விலையில் பல்வேறு காரணங்களால் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு மேலும் விலை குறையாது என்கிற உத்தரவாதம் ஏதும் இல்லை. என்றாலும், இப்போதிருக்கும் விலையிலிருந்து பெரிய வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புகள் குறைவுதான்.

மேலும், அடுத்த ஓரிரு வருடங்களில் இந்தத் துறை மேலெழுந்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆகவே, இது ஒரு கான்ட்ரா முதலீடாகும். ஆகஸ்ட் 2015-ல் 18,400-க்குமேல் சென்ற பி.எஸ்.இ ஹெல்த்கேர் குறியீடு, தற்போது (27-04-2018) 14,036 என்ற அளவில் 22% குறைவாக உள்ளது.
இந்த ஃபண்டின் மேனேஜர் சைலேஷ் ராஜ் பான் ஆவார். இவர் 2005-லிருந்து இந்த ஃபண்டை நிர்வகித்து வருகிறார். இந்த ஃபண்ட் தற்போது ரூ.1,876 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இந்த ஃபண்ட் ஆரம்பித்த போது (ஜூன் 05, 2004) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், தற்போது (செப்டம்பர் 26, 2014) ரூ.14,24,762-ஆக உள்ளது. இது கூட்டுவட்டி அடிப்படையில் ஆண்டிற்கு 21.06 சதவிகிதத்துக்குச் சமம். 2004-ம் ஆண்டில் முதலீட்டிற்காக வாங்கிய வீடோ, நிலமோ அல்லது தங்கமோ, இந்த அளவு (14 மடங்கிற்கும் மேலான) வருமானத்தைத் தந்திருக்குமா என்பது சந்தேகமே.

இந்த ஃபண்ட் கிட்டத்தட்ட 57 சதவிகிதத்தை லார்ஜ்கேப் பார்மா நிறுவனப் பங்குகளிலும், எஞ்சியதை மிட் அண்டு ஸ்மால்கேப் பார்மா நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளது. டிவிஸ் லேபாரட்டரீஸ், சனோஃபி இந்தியா, அபாட் இந்தியா, சன் பார்மா மற்றும் சிப்லா இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. மொத்தம் இந்த ஃபண்டில் உள்ள பங்குகள் 20 ஆகும்.

நீண்ட கால கண்ணோட்டத்தில் செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்கள், தங்களது மாதாந்திர முதலீட்டில் ஒருபகுதியை இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம். அபரிமிதமான லாபங்கள் வரும்போது வெளியேறுவதில் தவறேதுமில்லை. தற்போது எஸ்.ஐ.பி முறையிலும், மொத்தமாக எஸ்.டி.பி முறையிலும் முதலீடு செய்யலாம்.

யாருக்கு உகந்தது?
ஏற்கெனவே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ளவர்கள், போர்ட் ஃபோலியோவை பரவலாக்க விரும்புபவர்கள், இளம்வயதினர், பணம் அதிகம் உள்ளவர்கள், செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள், பணம் உடனடித் தேவை இல்லாதவர்கள்.
யார் முதலீடு செய்யக்கூடாது?
முதல்முறையாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள், சிறிய முதலீடு உள்ள வர்கள், குறுகிய காலத்தில் பணம் தேவைப்படு பவர்கள், உறுதியான/ நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள்.
அதிக ரிஸ்க்கும், அதிக ரிட்டர்னும் தர வாய்ப்புள்ள இந்த ஃபண்டினைத் தேவைப்படு கிறவர்கள் கவனிக்கலாமே!