
உங்கள் நெட்வொர்த் என்ன? - தூத்துக்குடி முதலீட்டாளர்கள் போட்ட கணக்கு!
நம்முடைய மதிப்பு (Networth) என்ன என்று நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. இதனால் நமது கடந்த கால முதலீடுகளில் எது லாபம் தந்தது, எந்தளவுக்கு லாபம் தந்தது என்பதை எல்லாம் நம்மால் கணக்கிட்டுப் பார்க்க முடிவதில்லை.

ஆனால், நாணயம் விகடனும், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் இணைந்து தூத்துக்குடியில் சமீபத்தில் நடத்திய ‘வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு’ என்கிற கூட்டத்தில் கலந்துகொண்ட முதலீட்டாளர்கள் தங்கள் நெட்வொர்த்தைக் கணக்கிட்டுச் சொல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பினைத் தந்தார் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் கேரளா பிராந்தியத்தின் தலைவர் ஹரீஷ்.

இந்தக் கணக்கினைப் போட்டுப் பார்த்த பலரும் தங்கள் மொத்த முதலீட்டில் 60-70% ரியல் எஸ்டேட்டிலும், 20 சதவிகிதத்தைத் தங்கத்திலும், வெறும் 10 சதவிகிதத்தை மட்டுமே பங்கு சார்ந்த முதலீடுகளிலும் முதலீடு செய்திருப்பதாகச் சொன்னார்கள். கடந்த காலத்தில் எஃப்.டி-யில் போட்ட பணம் 8.41%, தங்கம் 10.15%, பங்குச் சந்தை 16.9 சதவிகித வருமானத்தையும் தந்திருக்கிறது என்கிற புள்ளிவிவரத்தை ஹரீஷ் சொன்னபோது பலருக்கும் ஆச்சர்யம். இனி தங்கள் முதலீட்டுப் பாதையை மாற்றிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தனர்.

மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன் பேசியபோது, ‘‘மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எளிமையானது. நீண்ட காலத்தில் நல்ல லாபம் தரக் கூடியது. இதற்கு மிகக் குறைவான வரி மட்டுமே விதிக்கப்படும். இப்படிப் பல சாதகமான அம்சங்களைக் கொண்டது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு’’ என்று முடித்தார் அவர்.
முதலீடு பற்றி பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்ட திருப்தியுடன் சென்றனர் தூத்துக்குடி முதலீட்டாளர்கள்!
- ஆகாஷ்,
படங்கள்: ஏ.சிதம்பரம்