ஃபண்ட் டேட்டா! - 24 - எல் & டி மணி மார்க்கெட் ஃபண்ட்... வங்கிக் கணக்கில் தூங்கும் பணத்தை கொஞ்சம் வளர்க்கலாம்!

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)
உலகளவில் கச்சா எண்ணெய்யின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. பல கமாடிட்டிகளின் விலையும் உயர்ந்துகொண்டே போகிறது. உலகெங்கிலும் பொருளாதார வளர்ச்சி இருப்பதால், விலைவாசி உயர்ந்து வருகிறது. இதனால் இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அமெரிக்காவில் வட்டி விகிதம் ஏற்கெனவே ஏறுமுகத்தில் உள்ளது.

இவை அனைத்தும், இந்தியாவில் வட்டி விகிதத்தின் உயர்வு வெகு தூரத்தில் இல்லை என்பதையே சொல்கிறது. கடந்த சில வாரங்களில் முன்னணி வங்கிகள் சில, டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை அதிகமாக்கி உள்ளன. நமது 10 வருட மத்திய அரசாங்கத்தின் பாண்ட் யீல்டு சந்தையில் ஏற்கெனவே அதிகரித்துவிட்டது.

ஆகவே, இப்போதைய நிலையில், மத்திய மற்றும் நீண்டகால டெபாசிட்டுகளில் லாக் செய்துகொள்வது முதலீட்டாளர்களுக்குப் புத்திசாலித்தனமல்ல. அதுபோலவே, கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் மெச்சூரிட்டி ஆக அதிக காலம் (duration) எடுக்கும் ஃபண்டுகளில் தற்சமயத்தில் முதலீடு செய்வது உகந்ததல்ல. குறைவான காலத்தில் மெச்சூரிட்டி ஆகும் ஃபண்டுகளில் முதலீட்டை வைத்துக் கொள்வதே சாலச் சிறந்தது. அப்போதுதான் வட்டி விகித ஏற்றத்தில் பங்கெடுத்துக்கொள்ள முடியும்.
மேலும், மெச்சூரிட்டி ஆக அதிக காலம் பிடிக்கும் ஃபண்டுகளில் முதலீட்டை வைத்திருக்கும்போது, சில சமயங்களில் மார்க் டு மார்க்கெட் வேல்யூவேஷன் (mark to market valuation) நடப்பதால், மிகக் குறுகிய காலத்தில், நெகட்டிவ் ரிட்டர்னும் வர வாய்ப்புள்ளது.

இச்சூழ்நிலைக்கேற்ற ஒரு ஃபண்டுதான் எல் அண்டு டி மணி மார்க்கெட் ஃபண்ட். புதிதாக அறிவிக்கப்பட்ட செபி கேட்டகிரிகளில், மணி மார்க்கெட் ஃபண்டும் ஒரு கேட்டகிரி ஆகும். இந்த வகை ஃபண்டுகள், ஓராண்டிற்குள் மெச்சூரிட்டியைக் கொண்ட டிரஷரி பில்ஸ், சர்ட்டிஃபிகேட் ஆஃப் டெபாசிட், கமர்ஷியல் பேப்பர்ஸ் போன்ற கடன் உபகரணங்களில் முதலீடு செய்யும். இந்த ஃபண்ட் முன்பு எல் அண்டு டி ஃப்ளோட்டிங் ரேட் ஃபண்ட் என்று அழைக்கப்பட்டது. இது தற்போது ரூ.774 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர்கள் ஜல்பன் ஷா மற்றும் விக்காஸ் கர்க் ஆவார்கள்.
இதன் போர்ட்ஃபோலியோவில் 90% A1+ ரேட்டிங் கொண்ட முதலீடு களில் உள்ளது. A1+ ரேட்டிங், நீண்டகால AAA ரேட்டிங்கிற்குச் சமமாகும். எஞ்சிய முதலீடுகள் கேஷிற்குச் சமமான முதலீடுகளில் உள்ளது. இந்த ஃபண்டின் முதலீடுகள் அதிகமாக கமர்ஷியல் பேப்பர்களிலும் மற்றும் சர்டிஃபிகேட் ஆஃப் டெபாசிட்டுகளிலும் உள்ளது.

இதன் டாப் ஹோல்டிங்ஸ் வேதாந்தா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், இண்டோஸ்டார் கேப்பிட்டல் ஃபைனான்ஸ், யெஸ் பேங்க் போன்ற நிறுவனக் கடன் பத்திரங்களில் உள்ளது. இந்த ஃபண்ட் வைத்திருக்கும் முதலீடுகளின் ஆவரேஜ் மெச்சூரிட்டி 172 நாள்கள் ஆகும்.
இந்த ஃபண்டிலிருந்து தேவைப்படும்போது முழுவதுமாகவோ அல்லது ஒரு பகுதியையோ எப்போது வேண்டுமானாலும் முதலீட்டாளர்கள் வெளியில் எடுத்துக்கொள்ளலாம்.

மேலும், உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு மூலத்தில் வரிப்பிடித்தம் இல்லை. கேப்பிட்டல் கெயின்ஸ் வரும்போது, முதலீட்டாளர்கள் தங்களது வருமான வரி ஃபைலிங்கில் காண்பிக்க வேண்டும்.
ஃபிக்ஸட் டெப்பாசிட்களைப் போன்று, வட்டியைக் கையில் வாங்கினாலும் வாங்கா விட்டாலும், வட்டிக்கு வரி கட்ட வேண்டாம். எப்போது பணத்தை வெளியில் எடுக்கிறோமோ, அப்போது வரி கட்டினால் போதும். அதுவரை வரி ஏதும் செலுத்த வேண்டாம். மூன்று வருடங் களுக்கு மேல் முதலீட்டை வைத்திருக்கையில், பணவீக்கத்திற்கு அட்ஜஸ்ட் செய்தபிறகு மிகக் குறைவான வரியையே கட்ட வேண்டிவரும்.
இந்த ஃபண்டை நாம் பரிந்துரைக்கு எடுத்துக் கொண்டதற்கு முக்கியக் காரணம், இந்த ஃபண்டின் ஹை குவாலிட்டி போர்ட்ஃபோலி யோதான்.

மேலும், இதன் ஆவரேஜ் மெச்சூரிட்டி ஆறு மாதத்திற்கும் குறைவுதான். குறைவான மெச்சூரிட்டி, இதுபோன்ற வட்டி ஏறிக் கொண்டிருக்கும் சமயங்களில் நன்மை பயக்கும்.
இதன் உயர்ந்த தரத்தினால், சற்றுக் குறைவான கிரெடிட் ரேட்டிங் உடைய ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த ஃபண்டின் வருவாய் சிறிதளவு குறைவாகத்தான் இருக்கும். ஆகவே, நல்ல தரம் மற்றும் பாதுகாப்பை விரும்புபவர்களுக்கு இந்த ஃபண்ட் கச்சிதமாகப் பொருந்தும்.
இந்த ஃபண்டில், குறைந்தது ஆறு மாதத்திற்குத் தேவைப்படாத பணத்தை முதலீடு செய்து கொள்ளுங்கள். சில அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி வசதி இருக்காது. இந்த ஃபண்டில் குறைந்தபட்ச மொத்த முதலீடு ரூ.10,000 ஆகும்.

அதேபோல, குறைந்தபட்ச எஸ்.ஐ.பி முதலீடு ரூ.1,000 ஆகும். உங்களின் எமர்ஜென்சி ஃபண்டிற்கு, குழந்தைகள் கல்விச் செலவிற்கு, இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்டுவதற்கு, ஏறும் வட்டி விகிதத்தைச் சாதகமாக்கிக் கொள்வதற்கு மற்றும் தற்காலிகமாகப் பணத்தைப் போட்டு வைப்பதற்கு, இது ஒரு நல்ல ஃபண்டாகும்.
யாருக்கு உகந்தது?
சேமிப்புக் கணக்கில் தூங்கிக்கொண்டிருக்கும் பணத்திற்கு, ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு, சில நாள்களிலிருந்து சில மாதங்களுக்குள் பணம் தேவைப்படுபவர்களுக்கு, எமர்ஜென்சியில் பணம் தேவைப்படுபவர்களுக்கு, சேமிப்புக் கணக்கைவிட அதிக வருமானத்தை விரும்புபவர் களுக்கு, எப்போது வேண்டுமானாலும் பணம் தேவைப்படுபவர்களுக்கு, வட்டி விகிதம் ஏறிக் கொண்டிருக்கும்போது பணத்தை லாக் செய்ய விரும்பாதவர்களுக்கு.
யார் முதலீடு செய்யக்கூடாது?
அதிக வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்க முடிந்தவர்கள், உத்திரவாதமான வருமானத்தை விரும்புபவர்கள்.