ஃபண்ட் டேட்டா! - 25 - ஐ.சி.ஐ.சி.ஐ புரூ புளூசிப் ஃபண்ட்... புதிய முதலீட்டாளர்களுக்கு ஏற்ற ஃபண்ட்

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)
இன்றைய தினத்தில் பல்லாயிரக்கணக்கான புதிய முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிற்குள் அதிக வருமானத்திற்காக நுழைகிறார்கள். அவ்வாறு முதன்முறையாக நுழையும்போது, லார்ஜ்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சிறந்தது. அப்படியொரு முதலீட்டிற்கு உகந்த, தொடர்ச்சியாகத் தனது கேட்டகிரியில் நல்ல வருமானத்தை ஈட்டித் தந்துகொண்டிருக்கக்கூடிய ஒரு ஃபண்டைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப்போகிறோம்.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூ புளூசிப் ஃபண்ட் இதற்கு முன்னர் ஐ.சி.ஐ.சி.ஐ புரூ ஃபோக்கஸ்டு புளூசிப் ஈக்விட்டி ஃபண்ட் என அழைக்கப்பட்டது. பெயருக்கு ஏற்றாற்போல இது ஒரு ப்யூர் லார்ஜ்கேப் ஃபண்டாகும். லார்ஜ்கேப் பங்குகளை 90 சதவிகிதத்துக்கும் அதிகமாகத் தனது போர்ட்ஃபோலியோவில் வைத்துள்ளது. சந்தையில் பெரிய அளவில் சொத்துகளை நிர்வகிக்கும் ஃபண்டுகளில் இதுவும் ஒன்று. இந்த ஃபண்ட் தற்போது ரூ.17,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகளை நிர்வகித்து வருகிறது.

இதன் ஃபண்ட் மேனேஜர்கள் சங்கரன் நரேன் மற்றும் ரஜத் சந்தக் ஆவார்கள். சங்கரன் நரேன், சென்னைக்காரர். இவரே இந்த நிறுவனத்தின் சி.ஐ.ஓ-வும் (CIO – Chief Investment Officer) ஆவார். இது ஒரு ப்யூர் லார்ஜ்கேப் ஃபண்ட் என்பதால், இந்த வகை ஃபண்டுகளின் வருமானம், லார்ஜ் + மிட்கேப்/ மல்டிகேப்/ ஸ்மால் அண்டு மிட்கேப் ஃபண்டுகளைவிட குறைவாகத்தான் இருக்கும். அதே சமயத்தில் இந்த வகை ஃபண்டுகளில் உள்ள ரிஸ்க்கும் குறைவுதான். ஏனென்றால், இந்த ஃபண்ட் மிகவும் உயர்தரமான நிறுவனப் பங்குகளிலேயே முதலீடு செய்கிறது.

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், இன்ஃபோசிஸ், எஸ்.பி.ஐ, மதர்ஸன் சுமி போன்ற பங்குகள் இந்த ஃபண்டின் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. இதேபோல, ஃபைனான்ஸ், எனர்ஜி, ஆட்டோ, டெக்னாலஜி போன்ற துறைகளில் முறையே அதிகமான முதலீடுகளை இந்த ஃபண்ட் வைத்துள்ளது.
இந்த ஃபண்ட் பவர், ஆட்டோ, டிரான்ஸ் போர்ட் போன்ற துறைகளில் ஓவர்வெயிட்டாகவும், ஃபைனான்ஸ், எனர்ஜி, டெக்னாலஜி போன்ற துறைகளில் அண்டர்வெயிட்டாகவும் உள்ளது.

இந்த ஃபண்ட் பெஞ்ச்மார்க்கில் இருக்கும் துறை சார்ந்த வெயிட்டேஜை தனது போர்ட் ஃபோலியோவில் குளோஸாக ஃபாலோ செய்கிறது. பெஞ்ச்மார்க்கில் இருக்கும் வெயிட்டைவிட 5 சதவிகிதத்திற்கு மேலயோ அல்லது கீழோயோ செல்வதில்லை. ஆகவே, இந்த ஃபண்டில் ஆச்சர்யங்களும் அதிகமாக இருக்காது.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சங்கரன் நரேன், மிட் அண்டு ஸ்மால்கேப் ஃபண்டுகளைவிட லார்ஜ்கேப் ஃபண்டுகளில் முதலீடு சிறந்தது என்று கூறி வருகிறார். இதற்கு முக்கியக் காரணம் மிட் அண்டு ஸ்மால்கேப் ஃபங்குகளின் வேல்யூவேஷன், லார்ஜ்கேப் ஃபங்குகளைவிட அதிகமாக இருப்பதே.

இந்த ஃபண்டின் பீட்டா சந்தையைவிடக் குறைவாக 0.94 என்ற அளவில் உள்ளது. தொடர்ச்சியாகச் சந்தையைவிட அதிகமான வருவாயைத் கொடுத்துள்ளது இந்த ஃபண்ட்.
இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது (மே 23, 2008) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், தற்போது ரூ.4,01,100-ஆக உள்ளது. இது சி.ஏ.ஜி.ஆர் அடிப்படையில் 14.85% வருமானமாகும். லார்ஜ் கேப் ஃபண்டிற்கு இது ஒரு நல்ல வருமானமாகும்.

தற்சமயத்தில் பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், சிறந்த போர்ட் ஃபோலியோவை விரும்புபவர்கள், நடுத்தரக் காலத்திற்கு முதலீடு செய்ய விரும்புபவர்கள் போன்ற அனைவரும் இந்த ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையிலும், மொத்த முதலீட்டை எஸ்.டி.பி முறையிலும் தாராளமாக மேற்கொள்ளலாம்.

யாருக்கு உகந்தது?
சந்தையைவிட சற்று அதிக ரிஸ்க் எடுக்கக்கூடிய வர்கள், பங்கு சார்ந்த முதலீட்டில் மீடியம் ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதன்முறை நுழைபவர்கள், பணம் உடனடித் தேவை இல்லாதவர்கள்.
யார் முதலீடு செய்யக்கூடாது?
குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உறுதியான/ நிலையான வருமானத்தை விரும்பு பவர்கள், ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள், பங்குச் சந்தை ஏற்ற இறக்கம் குறித்துப் போதிய ஞானம் இல்லாதவர்கள்.
(நிறைந்தது)