
கடுகு டப்பா டு கரன்ட் அக்கவுன்ட் - 18 - குடும்பப் பிரிவினையைத் தடுக்கும் உயில்!

இன்றைக்குப் பல குடும்பங்களில் மிகப் பெரிய பிரச்னைகளுக்குக் காரணமாக இருப்பது சொத்துதான். சம்பாதிக்கும் காலத்தில் எதிர்காலத்துக்கு வேண்டும் என்று பல இடங்களில் மனைகளையும் வீடுகளையும், நகைகளையும் வாங்கிப் போட்டுவிடுகிறார்கள் வீட்டுப் பெரியவர்கள். அவர்கள் உயிருடன் இருக்கும்போது அந்தச் சொத்துகள் குறித்து யாரும் வாய் திறப்பதில்லை.
வீட்டின் பெரியவர் இறந்தபின், `இந்த சொத்தை இவர் எடுத்துக்கலாம்' என உயில் எதுவும் எழுதிவைக்காமல் போய்ச் சேர்ந்துவிட்டால், அந்தக் குடும்பத்தின் கதி, அதோகதிதான்.
மூன்று நான்கு மகன்கள், தங்கள் வாழ்க்கைத் துணைவிகளுடன் சேர்ந்து, ‘எங்களுக்கு இந்தச் சொத்துதான் வேண்டும்’ என்று சண்டை போடுவார்கள். 'இதுதான்டா நேரம்' என்று மகள்களும் மருமகன்களுடன் சேர்ந்து, ‘எங்களுக்குத் தரவேண்டியதை முதலில் பிரித்துக்கொடுத்துவிட்டு மறுவேலையைப் பாருங்கள்’ என்பார்கள்.

குடும்பத் தலைவர் அல்லது தலைவி உயிருடன் இருக்கும்போதே, ‘இந்தச் சொத்து இவருக்குத்தான்’ என்று ஓர் உயிலை எழுதி வைத்துவிட்டால், அவர் இறந்தபிறகு, குடும்பத்தினர் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.
ஒன்றுபட்டு வாழ்ந்த ஒரு குடும்பம், சிதைந்து சின்னாபின்னமாவதைத் தடுக்கும் ஓர் ஏற்பாடாகத்தான் இன்றைக்கு உயில் என்கிற விஷயம் பார்க்கப்படுகிறது.
தான் சேர்த்துவைத்த சொத்துகளுக்கு உயில் எழுத வேண்டும் எனப் பலருக்கும் தெரிந்திருந்தாலும், அதைச் செய்ய மறுப்பதற்குக் காரணம், குடும்ப உறுப்பினர்களின் கோபதாபத்துக்கு உள்ளாக வேண்டுமே என்கிற தயக்கம்தான். இந்தத் தயக்கத்துக்கு அடிபணிந்து, உயில் எழுதி வைக்காமலே போனால், அந்தக் குடும்ப உறுப்பினர்கள், வீட்டிலும் நீதிமன்றத்திலும் அடித்துக்கொள்வார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்தானே?
உயில் எழுதுவது என்பது ஒன்றும் பெரிய கம்பசூத்திரம் இல்லை. ஒரு வெள்ளைத்தாளில் நம் சொத்து விவரங்களைக் குறிப்பிட்டு, `இவருக்கு இது' என்று குறிப்பிட்டால் போதும். இதற்கு சாட்சி கையொப்பம் போட இருவர் தேவை. அந்த இருவருக்கும் உயிலின் விவரங்களைத் தெரிவிக்க வேண்டியதில்லை.

18 வயதுக்கு மேற்பட்ட புத்தி சுவாதீனம் உள்ள யார் வேண்டுமானாலும் உயில் எழுதலாம். சுயமாகச் சம்பாதித்த சொத்து களுக்கு மட்டுமே உயில் எழுத முடியும்.
ஒருவர் எழுதும் உயிலைப் பத்திரப்பதிவு அலுவலகத்துக்குச் சென்று பதிய வேண்டும் என்கிற கட்டாயமில்லை. உறவினர்களில் நம்பகமான ஒருவரிடம் கொடுத்து வைக்கலாம்; சொத்துப் பிரிவினைகள் குறித்த மேற்பார்வை செய்யும் பொறுப்பையும் அவரிடமே தரலாம்.
உயில் எழுதியவர் இறக்கும்முன்பே உயிலில் எழுதப்பட்டிருக்கும் விஷயத்தைத் தெரிந்துகொண்டு, எந்தச் சொத்துக்கும் உரிமை கொண்டாட முடியாது.
ஓர் உயில் எழுதி சில வருடங்களுக்குப் பிறகு ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமெனில், இன்னோர் உயில் எழுதலாம். இப்படி எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றி எழுதலாம். ஆனால், கடைசியாக எழுதிய உயில்தான் செல்லும். உயிலில் எல்லா சொத்து விவரங்களும் இருக்கும்படி எழுதுவது அவசியம்.
வங்கி எஃப்.டி, இன்ஷூரன்ஸ் பாலிசி, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் நாமினேஷன் கொடுத்திருந்தால், நாமினேஷன்தான் செல்லும்; அங்கே உயில் செயல்படாது.
உங்கள் குடும்ப உறுப்பினர்கள், இன்றுபோல என்றைக்கும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என நினைத்தால், இன்றே உயிலை எழுதிவைக்க நடவடிக்கை எடுங்கள்!
ப(ய)ணம் தொடரும் !
- சுந்தரி ஜகதீசன்
