
ட்விட்டர் சர்வே: மத்திய பட்ஜெட் கடுமையாக இருக்குமா?
இந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று அதாவது, ஜூலை 5-ம் தேதி தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவிருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட் எப்படிப்பட்டதாக இருக்கும் என நாணயம் ட்விட்டர் சர்வேயில் (https://twitter.com/NaanayamVikatan) ஒரு கேள்வி கேட்டு, அதற்கு மூன்று பதில்களைத் தந்திருந்தோம்.

இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்களில் அதிகமானவர்கள் வரவிருக்கும் பட்ஜெட்டானது 43% பேர் கடுமையாக இருக்கும் என்று சொல்லி யிருக்கிறார்கள். கடந்த ஆட்சிக் காலத்திலேயே பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி போன்றவற்றைக் கொண்டுவந்தது பா.ஜ.க அரசாங்கம். கடந்தமுறை வெற்றி பெற்றதைவிட அதிக தொகுதிகளில் ஜெயித்து தற்போது ஆட்சிக்கு வந்திருப்பதால், இன்னும் கடுமையான நடைமுறைகளைக் கொண்டுவரக்கூடும் என்கிற கருத்து மக்களிடம் இருப்பதையே இந்தப் பதில் காட்டுகிறது.
இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்களில் 34% பேர் இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். பொருளாதார வளர்ச்சி குறைந்துவருவதாலும் வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருப்பதாலும் வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்ட வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசாங்கம் இருக்கிறது. எனவேதான், பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் இந்த பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். ஏறக்குறைய 23% பேர் இந்த பட்ஜெட் மூலம் சலுகைகள் கிடைக்கும் என்று சொல்லியிருக்கின்றனர். எஸ்.எம்.இ நிறுவனங்களுக்குக் கடன் சலுகை, சாதாரண மக்களுக்கு ரூ.5 லட்சம் வரிச் சலுகை எனப் பல சலுகைகள் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பும் இருக்கவே செய்கிறது.
இந்த பட்ஜெட் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது வரும் வெள்ளியன்று தெரிந்துவிடும்!
- ஆகாஷ்

பட்ஜெட் எப்படி இருக்கும்?
23% - சலுகைகள் இருக்கும்
43% - கடுமையாக இருக்கும்
34% - வளர்ச்சிக்கு வழிவகுக்கும்