நடப்பு
Published:Updated:

சுற்றுச்சூழல், சமூக அக்கறை, நல்ல நிர்வாகம்... லாபத்தை அதிகரிக்கும் ESG முதலீடு!

சுற்றுச்சூழல், சமூக அக்கறை, நல்ல நிர்வாகம்... லாபத்தை அதிகரிக்கும் ESG முதலீடு!
பிரீமியம் ஸ்டோரி
News
சுற்றுச்சூழல், சமூக அக்கறை, நல்ல நிர்வாகம்... லாபத்தை அதிகரிக்கும் ESG முதலீடு!

முதலீடு

ங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் நோக்கமே, நீண்ட காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பினால்தான். அப்படி முதலீடு செய்யும்போது நல்ல நிறுவனங்களைத் தேடி நாம் முதலீடு செய்யவேண்டும். மோசமான செயல்பாட்டினைக் கொண்ட நிறுவனத்தில் நாம் முதலீடு செய்யும்போது லாபம் மட்டுமல்ல, நம்முடைய முதலீடும் திரும்பக் கிடைக்காமல் போவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. 

சுற்றுச்சூழல், சமூக அக்கறை, நல்ல நிர்வாகம்... லாபத்தை அதிகரிக்கும் ESG முதலீடு!

ஆனால், முதலீட்டாளர்கள் பலரும் கேட்கும் கேள்வி, ஒரு நிறுவனத்தை நல்ல நிறுவனமா அல்லது கெட்ட நிறுவனமா  என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதுதான். ஒரு நிறுவனத்தை நல்ல நிறுவனமா என்று மதிப்பிட பல அளவுகோல்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது, இ.எஸ்.ஜி முறை.  இ.எஸ்.ஜி என்பது Environmental, Social and Governance என்பதன் சுருக்கம்தான். அதாவது, சுற்றுச்சூழல், சமூக அக்கறை, நல்ல நிர்வாகம் கொண்ட நிறுவனங்களை முதலீட்டுக்கேற்ற நல்ல நிறுவனங்களாக நாம் கருதலாம்.

சுற்றுச்சூழல், சமூக அக்கறை, நல்ல நிர்வாகம்... லாபத்தை அதிகரிக்கும் ESG முதலீடு!



  இந்த மூன்று விஷயங்களையும் முக்கியமாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்கள், நீண்டகாலம் சிறப்பாகச் செயல்பட வாய்ப்பிருக்கும் நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட பணம் நீண்டகாலத்தில் ஓரளவுக்கு நல்ல லாபத்தைத் தருமே தவிர, நஷ்டத்தைத் தர வாய்ப்பில்லை.

பங்குச் சந்தை முதலீட்டில் இந்த மூன்றும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன என்பது குறித்து யூனிஃபை கேப்பிட்டல் (Unifi Capital) நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஜி.மாறன் விளக்கினார்.

பங்கு விலை வீழ்ச்சி...

``சுற்றுச்சூழல் பிரச்னை காரண மாக வேதாந்தா நிறுவனத்தின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற் சாலை மூடப்பட்டதால், சுமார் 20 கோடி டாலர் (சுமார் ரூ.1,380 கோடி) அளவுக்கு லாப இழப்பு ஏற்பட்டது. இந்த நஷ்டம் பங்கு விலையில் எதிரொலித்ததால், அந்த நிறுவனப் பங்கு விலை 30% வரை வீழ்ச்சி கண்டது.

சூதாட்ட விடுதி நடத்த டாமன் யூனியன் பிரதேச அரசின் ஒப்புதல் கிடைக்கத் தாமதமானதால், டெல்டா கார்ப் நிறுவனத்தின் பங்கு விலை இந்தியாவில் 20% குறைந்தது.

நிர்வாகப் பிரச்னைகள் காரணமாக, குறிப்பாக நிறுவனத்தின் நிதியை வேறு விஷயங்களுக்குப் பயன்படுத்தியதால், சன் பார்மா நிறுவனத்தின் பங்கு விலை 40% வரை வீழ்ச்சி கண்டது. இதுபோன்ற பல செய்திகள், சமூகப் பொறுப்பற்ற நிறுவனங்களையும் தரமற்ற நிர்வாகத்தைக்கொண்ட நிறுவனங்களையும் முதலீட்டாளர்களுக்கு அடையாளம் காட்டி, எச்சரிக்கை செய்திருக்கின்றன.

தேவை விழிப்பு உணர்வு...

மாசில்லா சுற்றுச்சூழல்,  சமூக - பொருளாதார மேம்பாடு மற்றும் தரமான நெறிமுறைகளைப் பங்கு நிறுவனங்கள் கடைப்பிடிக் கின்றனவா என்பது குறித்த விழிப்புஉணர்வு, முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதையடுத்து, அவர்கள் தங்களின் பங்கு முதலீட்டுக் கலவையை (Equity Portfolios) மாற்றியமைக்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.

சுற்றுச்சூழல், சமூக அக்கறை, நல்ல நிர்வாகம்... லாபத்தை அதிகரிக்கும் ESG முதலீடு!

உலகளவில் முதலீட்டாளர்களிடையே படிப்படியாகப் பிரபலமடைந்துள்ள  ஓர் உத்தி, சுற்றுச்சூழல், சமூக அக்கறை மற்றும் நல்ல நிர்வாகம் (ESG) அடிப்படையிலான முதலீடாகும். இ.எஸ்.ஜி முதலீட்டுக்குப் பங்குகளைத் தேர்வுசெய்யும்போது, ஒரு நிறுவனத்தின் வணிக அடிப்படையிலான நிலைத்தன்மை, சமூகப் பொறுப்பு, உயர்தர நிர்வாகம் ஆகியவற்றை அலசி ஆராயவேண்டும். 

சிறந்த முதலீட்டு உத்தி...

1960-ம் ஆண்டுகளிலேயே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இ.எஸ்.ஜி அடிப்படையிலான முதலீட்டு உத்தியானது உருவாகி, அதைப் பலரும் பின்பற்றத் தொடங்கினாலும், சமீபத்திய காலமாகத் தான் உலக அளவில்  ஏராளமான முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பல பெரிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்த முதலீட்டு முறையைப் பின்பற்றத் தொடங்குகிறார்கள்.

சுற்றுச்சூழல், சமூக அக்கறை மற்றும் நிர்வாகத் தரம் ஆகிய  மூன்று தூண்களில் ஏதேனும் ஒன்றில் தோல்வியைத் தழுவிய நிறுவனம் என்றாலும் அவற்றில் முதலீடு செய்வதைத் தவிர்க்கிறார்கள்.  க்ரைசில், இக்ரா, ஃபிட்ச் போன்ற கடன் தரக் குறியீட்டு நிறுவனங் களைப் போன்று, இந்தப் பெருநிறுவன முதலீட்டாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

நிறுவனங்களின் கடன் தரத்தை மதிப்பிடுவது போல், இ.எஸ்.ஜி மதிப்பீட்டுச் சேவை வழங்கும் நிறுவனங்களும் உள்ளன. உலகளவில் எம்.எஸ்.சி.ஐ (MSCI) மற்றும் நிறுவனங்களின் நிலைத்தன்மை பற்றி பகுப்பாய்வு செய்பவர்கள், இந்த இ.எஸ்.ஜி மதிப்பீட்டுச் சேவை வழங்குவதில் முன்னணியில் இருக்கிறார்கள். நம் நாட்டில் ஒரு பங்கு நிறுவனத் தின் இ.எஸ்.ஜி மதிப்பீட்டை எப்படிக் கண்டறிகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

நிஃப்டி இ.எஸ்.ஜி குறியீடு...

தேசிய பங்குச் சந்தையானது (என்.எஸ்.இ), பங்குச் சந்தை மதிப்பின் (மார்க்கெட் கேப்பிட் டலைசேஷன்) முதல் 100 நிறுவனப் பங்குகளைத் தேர்வுசெய்து, நிஃப்டி இ.எஸ்.ஜி குறியீட்டை (Nifty ESG Index) உருவாக்கியிருக்கிறது. இந்தப் பட்டியலில் புகையிலை (ஐ.டி.சி), மதுபானம் (யுனைடெட் ஸ்பிரிட்ஸ்), சூதாட்டம் (டெல்டா கார்ப்.) போன்ற நிறுவனங்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், சர்ச்சையில் சிக்கியிருக்கும் வேதாந்தா, சன் பார்மா போன்றவற்றையும் நீக்கியிருக்கிறார்கள். 

சுற்றுச்சூழல், சமூக அக்கறை, நல்ல நிர்வாகம்... லாபத்தை அதிகரிக்கும் ESG முதலீடு!

இந்த இ.எஸ்.ஜி அடிப்படையிலான குறியீடு நம் நாட்டில் 2018, மார்ச்சில்தான் அறிமுகமானது. இதன் வருமானம் தற்போதைய நிலையில், நிஃப்டி குறியீட்டை ஒட்டியே இருக்கிறது. எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் போன்ற சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் நிதி மேலாளர்கள்,  இ.எஸ்.ஜி கருத்து அடிப்படையில் முதலீட்டுக்குரிய நிறுவனப் பங்குகளைத் தேர்வு செய்துவருகிறார்கள்.

ஆனால், உலக அளவில் நீண்டகால வரலாற்றை இ.எஸ்.ஜி முதலீடுகள் கொண்டிருக்கின்றன. அவை பொதுவான பங்குச் சந்தை குறியீடுகளைவிட,  அதிக வருமானத்தை அளித்துள்ளன. இந்த நிலை இனிவரும் காலத்தில் இந்தியாவிலும் உருவாகும் என எதிர்பார்க்க லாம்.

இந்தியச் சூழலுக்கேற்ப  இ.எஸ்.ஜி  முதலீட்டுக்கான அளவீடுகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற  கோரிக்கையும் எழுந்துள்ளது. இருந்தாலும், சுற்றுச் சுழலை மாசுபடுத்துவதில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இருக்கிறது இந்தியா.

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புஉணர்வு அதிகரித்து வருவதால், சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பினை ஏற்படுத்தும் நிறுவனங்களுக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பும் நிலையே இருக்கிறது. வேலூரில் தோல் கழிவு, திருப்பூரில் சாயக் கழிவு பிரச்னை படிப்படியாகச் சரிசெய்யப் பட்டதை அடுத்து, அந்தத் துறையைச் சேர்ந்த நிறு வனங்கள் சிறப்பாகச் செயல்படத் தொடங்கிவிட்டன.

சீனாவின் பீஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களில் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பினை ஏற்படுத்திய நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் மூடப் பட்டுள்ளன. இதனால், இந்தியாவில் இந்தத் துறையில் சிறப்பாகச் செயல்பட்டுவரும் நிறுவனங் களின் தயாரிப்புகளுக்குத் தேவை ஏற்பட்டிருக்கிறது. 

இ.எஸ்.ஜி குறித்த அரசு விதிமுறைகள்

இந்தியாவில் இ.எஸ்.ஜி குறித்த அரசின் விதிமுறைகள் மாற்றப்பட்டுவருகின்றன. அது நடைமுறைக்கு வரும்போது சுற்றுச்சூழல், சமூக அக்கறை, நல்ல நிர்வாகம் கொண்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் விற்பனை அதிகரித்து, அவற்றின் லாபமும்  அதிகரிக்கும். இது அவற்றின் பங்கு விலை களிலும் பிரதிபலிக்கக்கூடும்.

இந்தியப் பங்குச் சந்தையில், உயர்தர நிர்வாகத்துடன் தொழில்ரீதியாக நிர்வகிக்கப் படும் நிறுவனங்களின் பங்குகள் சிறந்த மதிப்பீடுகளைப் பெறுகின்றன. உதாரணமாக,  ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் ஆகிய இரண்டும் முன்னணித் தனியார் வங்கிகள்தான். என்றாலும், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியைவிட ஹெச்.டி.எஃப்.சி வங்கி அதிகம் மதிப்பிடப்படுகிறது. காரணம், ஹெச்.டி.எஃப்.சி குழுமத்தில் அனைத்தும் தகுதியின் அடிப்படையில் நடக்கின்றன. அங்கு பரிந்துரைக்கு இடமில்லை.

எனவே, வலுவான இ.எஸ்.ஜி அளவீடு களைக் கொண்ட நிறுவனங்களே இனி   அதிக வருமானத்தை அளிக்கும் என்பதைப் புரிந்துகொண்டு, அந்தப் பங்குகளில் முதலீடு செய்யலாம்’’ என்றார் ஜி.மாறன்.

முதலீட்டாளர்கள் இந்த இ.எஸ்.ஜி முதலீட்டு முறை குறித்துப் பரிசீலனை செய்யலாமே!

சி.சரவணன்

குவான்டம் இந்தியா இ.எஸ்.ஜி ஈக்விட்டி ஃபண்ட்!

இந்தியாவில் குவான்டம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், அண்மையில் இ.எஸ்.ஜி முதலீடு அடிப்படையிலான குவான்டம் இந்தியா இ.எஸ்.ஜி ஈக்விட்டி ஃபண்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த ஃபண்டை, சிராக் மேத்தா நிர்வகிக்கிறார். இவர் சொன்னதாவது... 

``நான்கைந்து ஆண்டுகளாக குவான்டம் முதலீட்டுக் குழு பகுப்பாய்வு மேற்கொண்டு, இந்த ஃபண்டில் முதலீடு செய்யக்கூடிய பங்குகளைத் தேர்வு செய்திருக்கிறது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிலக்கரி போன்றவற்றுக்கு மாற்றாகப் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியை உற்பத்தி செய்யும்படி, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் குறைந்த புகையை வெளியேற்றும் வாகனங்களைத் தயாரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்படி வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களின் பங்கு விலை மேம்படும் என எதிர்பார்க்கிறோம்.

இதுபோன்ற நிறுவனங்களுக்கு நேரில் சென்று அங்கு சுற்றுச்சூழல், சமூக அக்கறை, நல்ல நிர்வாகம் அமைந்துள்ளதா என்பதை ஆராய்கிறோம். மேலும், அந்த நிறுவனத்தின் மேலாண்மை அதிகாரிகள் சொல்லும் விஷயங்களை, அவர்களுக்கு உதிரிப்பாகங்களை அளிப்பவர்கள், அவர்களின் விநியோகஸ்தர்கள் மற்றும் நுகர்வோர்களைச் சந்தித்து உறுதிப்படுத்துகிறோம். இந்தியாவில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் 400-450 நிறுவனங்கள்தான் இ.எஸ்.ஜி பட்டியலில் வரும். அதில் 100 நிறுவனங்களைத் தேர்வுசெய்து அலசி ஆராய்ந்துள்ளோம். இதில் 40-50 நிறுவனப் பங்குகளில்தான் இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதியை முதலீடு செய்கிறோம். மாரிகோ இண்டஸ்ட்ரீஸ், பெர்ஜர் பெயின்ட்ஸ் போன்ற நிறுவனங்கள் இ.எஸ்.ஜி நெறிமுறைகளைப் பின்பற்றுவதாக உள்ளன. அந்த வகையில் இவை நல்ல வருமானத்தைக் கொடுத்துவருகின்றன” என்றார்.

குவான்டம் மியூச்சுவல் ஃபண்ட் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி,  நிஃப்டி 100 இ.எஸ்.ஜி குறியீடு, 2011 ஏப்ரல் முதல் 2019 ஜூன் வரையில் 13.4% வளர்ச்சி கண்டிருக்கிறது. இதே காலகட்டத்தில், நிஃப்டி 50 குறியீடு 10.8% வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், நிஃப்டி 100 இ.எஸ்.ஜி குறியீடு, அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் இருக்கிறது.

- சேனா சரவணன்

இ.எஸ்.ஜி குறியீடுகள் - ஒரு சிறிய விளக்கம்!

நிஃப்டி இ.எஸ்.ஜி குறியீடு - 2011 ஏப்ரல் 1-ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு, 2018 மார்ச் 27-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறியீட்டில் சுற்றுச்சூழல், சமூக அக்கறை, நல்ல நிர்வாகம் கொண்ட 100 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக, ரிலையன்ஸ், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஹெச்.டி.எஃப்.சி, இன்ஃபோசிஸ், ஆக்ஸிஸ் பேங்க், டி..சி.எஸ், கோட்டக் மஹிந்திரா பேங்க், எல் அண்டு டி போன்ற முன்னணி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

இதேபோல, எஸ் அண்டு பி பி.எஸ்.இ 100 இ.எஸ்.ஜி குறியீட்டில் ஏ.சி.சி, அதானி போர்ட்ஸ், அம்புஜா சிமென்ட்ஸ், அசோக் லேலாண்ட்ஸ், ஆசியன் பெயின்ட்ஸ், கோல் இந்தியா, டாபர் உள்ளிட்ட நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.