ஓய்வு @ 45
##~## |
நேரம், காலம் பார்க்காமல் வேலை பார்க்கவேண்டும்; நிறைய சம்பாதிக்கவேண்டும். 45 வயதில் ஓய்வு பெற்று விட்டு, நமக்குப் பிடித்த மாதிரி ரிலாக்ஸ்டு-ஆக ஒரு வேலையைச் செய்யவேண்டும் என்று நினைப்பது இன்றைய தலைமுறை..!
இன்றைய தலைமுறை, குறைந்தபட்சம் 45; அதிகபட்சம் 55 வயதில் ஓய்வுபெற்று தனக்குத் தானே பாஸ்-ஆக இருக்க நினைக்கிறது. வெளிநாடுவாழ் இந்தியர்களில் பலரும், 45 வயதுவரை வெளிநாட்டில் வேலை பார்த்தது போதும்; குறைந்த சம்பளம் கிடைத்தாலும் பரவாயில்லை என்று இந்தியாவில் வந்து செட்டில் ஆக விரும்புவதாகவே சொல்கிறார்கள்.
45 வயதிலேயே ரிட்டையர்ட்மென்ட்-ஆ? இந்த முடிவு சரியாக இருக்குமா? சாத்தியமா? என பல கேள்விகள் கேட்கலாம். இதெல்லாம் உங்களுடைய தனிப்பட்ட விருப்பம் மற்றும் சூழ்நிலையைப் பொறுத்த விஷயம். ஆனால், அந்த வயதில் ஓய்வுபெற விரும்புகிறவர்கள் என்னென்ன விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும் என்பதைச் சொல்கிறேன்.

சென்ற இருவாரங்களில் வெவ்வேறு ஓய்வூதியத் திட்டங்களைப் பற்றி சொன்னேன். அதன் தொடர்ச்சியாக சற்று இளமையாக இருக்கும்போதே ஓய்வுபெறுவதற்கான திட்டமிடலை எப்படி செய்யலாம் என்பது குறித்து இப்போது சொல்கிறேன்.
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை படிப்பு முடித்து, வேலை தேடி அலைந்து, வேலைக்குச் சேருவதற்குள் சில ஆண்டுகள் கழிந்துவிடும். ஆனால், இன்றோ பலருக்கு படிப்பு முடித்தவுடன் 20, 21 வயதிலேயே வேலை கிடைத்துவிடுகிறது. அவ்வாறு சீக்கிரமாக வேலைக்குச் சேருபவர்கள் 45 வயதைத் தொடும்போது, கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் வேலை பார்த்திருப்பார்கள்.
கேரியரை சீக்கிரமாக ஆரம்பித்துவிட்டதால், அலுப்பும் சீக்கிரமாகத் தட்டிவிடுகிறது. அவ்வாறு அலுப்புத்தட்டியவர்கள், தாங்கள் ஆக்டிவ்வாக இருந்த வேலையிலிருந்து விலகி வேறு முயற்சிகளில் ஈடுபட விரும்புகிறார்கள்.

அவ்வாறு புதிய முயற்சிகளில் இறங்கும்போது, அந்த முயற்சி தாங்கள் இதுவரை சம்பாதித்ததைப் போன்று பொருள் ஈட்டித் தராமல் இருக்கலாம். அல்லது அந்தப் புதிய முயற்சிக்குப் பணம் தேவைப்படலாம். குழந்தைகள் கல்லூரிக்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருப்பார்கள். இன்னும் சில ஆண்டுகளில் அவர்களின் திருமணச் செலவுகள் இருக்கும். முக்கியமாக, இன்னும் 15 ஆண்டுகளில் நமக்கு ஓய்வுகாலச் செலவுகளுக்காகப் பணம் தேவைப்படும். இவற்றையெல்லாம் கவனத்தில்கொண்டு ஒவ்வொருவரும் முடிவு செய்யவேண்டும்.
சீக்கிரமாக ஓய்வுபெறுவதற்கு முதல்தேவை, இளம் வயதிலேயே கேரியரை துவங்கியிருக்க வேண்டும். 30 அல்லது 35 வயதில் தனது கேரியரை துவக்கியவர்கள், 45 வயதில் ஓய்வுபெறுவது என்பது முடியாத காரியம். மேலும், சீக்கிரமாக ஓய்வுபெற விரும்புகிறவர்கள் தீவிரமாகப் பணத்தைச் சம்பாதிக்கவேண்டும். 45 வயதில் ரிட்டையர் ஆவது சாத்தியமா என்றால், அவரவர் தேவையைப் பொறுத்தும் அதற்கேற்ப சம்பாதிப்பதைப் பொறுத்தும், நிச்சயம் சாத்தியம்!
45 வயதில் ரிட்டையர் ஆவதற்குள் பொதுவாக என்னென்ன செய்து முடித்திருக்க வேண்டும்?
1. வசிப்பதற்கு ஒரு வீடு.
2. ஓய்வுகாலச் செலவு களுக்கான கார்பஸ் (சிஷீக்ஷீஜீus)
3. குழந்தைகளின் உயர்கல்விச் செலவு.

4. குழந்தைகளின் திருமணச் செலவு.
5. இவைதவிர, அவரவரின் விருப்பத்திற்கான செலவுகள்.

உதாரணத்திற்கு, ஒருவர் 25 வயதிற்குள் வேலையில் செட்டிலாகிவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒரு சாதாரண மனிதனின் எதிர்காலத் தேவைகளுக்கான இன்றைய செலவுகளும், அத்தொகையின் ஆண்டிற்கு 7% பணவீக்கத்துடன் கூடிய எதிர்கால மதிப்பும், ஒவ்வொரு தேவைக்கும் சேமிக்க வேண்டிய மாதாந்திரத் தொகையை அட்டவணையாக அடுத்த பக்கத்தில் தந்திருக்கிறேன், பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்த அட்டவணையில் தரப்பட்டுள்ள விஷயங்கள் ஒரு வரைகோடுதான். சிலருக்கு நாம் மேற்குறிப்பிட்ட தேவைகள் முழுவதும் பொருந்தாது. சிலருக்கு இதைவிட தேவைகள் அதிகமாக இருக்கும். அவரவர் தேவைகளுக்கேற்ப மாதாந்திர முதலீட்டுத் தொகையைக் கூட்டி குறைத்துக்கொள்ளுங்கள்.
குழந்தைகள் கல்விச் செலவிற்காக லோன் எடுத்துக்கொள்ளலாம்; ஆனால், ஓய்வூதியத்திற்கு லோன் எடுக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்! ஆக, மொத்தத்தில் ஒருவர் சராசரியாக மாதத்திற்கு ரூ.73,000 அல்லது அதற்கு அதிகமாக 25 வயதில் சம்பாதிக்கும்பட்சத்தில் 45 வயதில் ரிட்டையர் ஆவது எளிதாக இருக்கும்.
மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்ட அளவு தேவைகள் இல்லாத பட்சத்தில், உங்களின் மாதச் சம்பளம் குறைவாக இருந்தால் போதும். இந்த
73, 200-ல் கிட்டத்தட்ட 41 சதவிகிதம் (ரூ.30,000) வீட்டிற்கே சென்றுவிடுகிறது என்பதைக் கவனத்தில்கொள்ளுங்கள். ஆகவே, சொந்தமாக ஒரு வீடு இருந்துவிட்டால், பாதி பளு குறைந்துவிடும். இன்றைய தினசரிச் செலவு ரூ.20,000-த்தை நீக்கிவிட்டால் நீங்கள் எதிர்காலத் தேவைகளுக்காகச் சேமிக்கவேண்டியது மாதத்திற்கு சுமார் ரூ.23,200 மட்டும்தான்.

45 வயதிற்கு மேல் நீங்கள் ஏதேனும் டென்ஷன் இல்லாத வேலையை எடுத்துக்கொண்டு செய்யலாம். அல்லது தொண்டு செய்யலாம். அல்லது சொந்தமாகத் தொழில்/ விவசாயம் செய்யலாம். வேலைக்குச் செல்லும்போது உங்களின் பணவரவு அதிகரிக்கும். தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும்போது அல்லது தொண்டு செய்யும்போது பணவரத்து குறைவாக அல்லது இல்லாமல் இருக்கலாம். அவ்வாறு உள்ள பணவரத்து உங்களுக்கு போனஸ் போன்றுதான்.
தொழில் அல்லது விவசாயம் செய்யும்போது முதல் சில ஆண்டுகளில் மொத்தமாகப் பணம் தேவைப்படலாம். அந்தத் தொகையை நாம் தந்துள்ள அட்டவணையில் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அவ்வாறு தொழில்/ விவசாயம் செய்வது உங்களது எண்ணத்தில் இருந்தால் அதற்கென்று ஒரு தொகையை ஆரம்ப காலத்திலிருந்தே சேமிக்கத் தொடங்குங்கள்.
ஆக, கொஞ்சம் திட்டமிட்டு வாழ்ந்தால் 45 வயதில் ஓய்வுபெற்று, உங்களுக்குப் பிடித்த மாதிரியான ஒரு வாழ்க்கையை வாழ்வது நூறு சதவிகிதம் சாத்தியமே!
பெஸ்ட் ஆஃப் லக்!