பொறுப்போடு செய்தால் பொல்லாப்பு இல்லை !செ.கார்த்திகேயன்,படங்கள்: பீரகா வெங்கடேஷ், ஸ்டீவ் சு.இராட்ரிக்ஸ்.
##~## |
வீட்டிலிருந்தே வேலை பார்க்க அனுமதித்த நிறுவனங்கள், இப்போது மீண்டும் அலுவலகத்துக்கு வந்து வேலை செய்யும்படி சொல்ல ஆரம்பித்திருக்கின்றன. இதற்கு லேட்டஸ்ட் உதாரணம், யாகூ. 'வீட்டில் இருந்து வேலை பார்க்கும்போது, ஊழியர்கள் இடையே 'இன்டராக்ஷன்’ குறைவதாக’ச் சொல்லி இருக்கிறார் யாகூவின் சி.இ.ஓ.வான மரிஸ்ஸா மேயர்.
வீட்டிலிருந்து வேலை பார்க்கிற வாய்ப்பை நிறுவனங்கள் ஏன் தருகின்றன? இதனால் நிறுவனத்துக்கும் ஊழியர்களுக்கும் இருக்கிற சாதக - பாதகங்கள் என்ன? வீட்டில் வேலை பார்க்கும்போது நிறுவனங்களும் ஊழியர்களும் எப்படி பொறுப்பாக நடந்துகொள்ளவேண்டும் என்பது பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் மனிதவள மேம்பாட்டு துறையைச் சேர்ந்த ந.பத்மலட்சுமி.
பாசிட்டிவ் அம்சங்கள்!

''வீட்டில் இருந்து வேலை பார்ப்பதால் ஊழியர்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கும். ஊழியர்கள் ஆபீஸ்-வீடு என்று அலையத் தேவையில்லை. இதனால் அலுவலகம் சென்றுவரும் நேரம் குறையும். பெட்ரோல் செலவு மிச்சமாகும். ஆபீஸ் போகவர செலவாகும் நேரத்தை வேலை செய்ய பயன்படுத்தலாம். இதனால் உற்பத்தி அதிகரிக்கும். நேரக் கட்டுப்பாடு என்பது கிடையாது. குடும்ப உறுப்பினர்களுடன் குதூகலமாக இருந்தபடி வேலை செய்யலாம். வீட்டில் சத்தான உணவைச் சாப்பிடலாம். பெண்களுக்கு, முக்கியமாகத் தாய்மார்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்வதன் மூலம் குழந்தைகளை கவனித்துக்கொண்டே அலுவலக வேலைகளையும் செய்துவிட முடியும்.
நெகட்டிவ் அம்சங்கள்!
வீட்டில் இருந்து வேலை பார்ப்பதால் குடும்ப உறுப்பினர்களின் தொந்தரவு வரலாம். இதனால் வேலையில் தவறு ஏற்படலாம். நிறுவனத்துடன் நெருக்கமான தொடர்பு இல்லாததால், அங்கு நடக்கும் முக்கியமான விஷயங்கள்கூட தெரியாமல் போகலாம். சகஊழியர்களுடன் பேசி நட்பு பாராட்ட முடியாது. சீனியர்களின் வழிகாட்டுதல் இருக்காது. இதனால் பணியில் சரியான தெளிவு இல்லாமல் குழப்பத்திற்கு ஆளாக நேரிடும்.
நிறுவனங்களுக்கு பாசிட்டிவ்!
நேரடி வாடிக்கையாளர்கள் தொடர்பு இல்லாத நிறுவனங்களுக்கு இம்முறை மிகவும் ஏற்றது. ஊழியர் களுக்குப் பிடித்த சூழலில் வேலை செய்ய அனுமதிப்பதால், அவர்கள் மனநிறைவுடன் வேலை செய்வார்கள். இதனால் நிறுவனத்தின் மீதான பிடிப்பு அதிகரிப்பதோடு, உற்பத்தித் திறனும் வெகுவாக அதிகரிக்கும். பேப்பர், மின்சாரம், பராமரிப்பு போன்ற செலவு குறையும்.
நெகட்டிவ் அம்சங்கள்!
ஊழியர்கள் முழு நேரமும் அலுவலக வேலையைத்தான் செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்கவேண்டும். அலுவலக வேலைகள் மற்றும் ரகசியங்கள் போட்டி நிறுவனத்துக்கு எளிதில் கிடைக்க வாய்ப்புண்டு. ஒவ்வொரு ஊழியருக்கும் தனியாக இன்டர்நெட் கட்டணம், மின்சாரக் கட்டணம் தருவதால் செலவு அதிகரிக்கலாம். இன்னோவேஷனுக்கு வாய்ப்பில்லாமல் போகலாம்.
ஊழியர்களின் பொறுப்பு!

நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்க அனுமதிக்கும் பட்சத்தில் தன்னொழுக்கத்துடனும், நிறுவனத்துக்கு நேர்மையாகவும் நடந்துகொள்வது அவசியம். நிறுவனம் தரும் வேலைகளை காலம் தாழ்த்தாமல் சொன்ன நேரத்திற்கு முன்னதாகவே முடித்துத் தருவது அவசியம். வீட்டில் இருந்து வேலை செய்யும்போது தனிப்பட்ட பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தராமல், நிறுவனம் தரும் வேலைகளை முடிப்பதில் கவனமாக இருக்கவேண்டும். தானுண்டு, தன் வேலையுண்டு என்றில்லாமல் தலைமை அலுவலகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கவேண்டும். செய்யும் வேலைகளையும் அதற்காக எடுக்கும் முயற்சிகளையும் உடனுக்குடன் தலைமைக்குத் தெரியப்படுத்துவது அவசியம்.
நிறுவனங்களின் பொறுப்பு!
வீட்டில் இருந்து வேலை செய்யும் ஊழியர்கள், தங்களுக்காக மட்டுமே வேலை செய்கிறார்களா என்று கண்காணிப்பது அவசியம். அவர்களுக்குத் தேவையான தகவல் பரிமாற்றத் தொழில்நுட்பங்களைக் கட்டாயம் அளிக்க வேண்டும். வேலைக்கான கால அவகாசத்தை சரிவர அமைத்துத் தரவேண்டும். நிறுவனங்களில் நடக்கும் முக்கியமான விஷயங்களை ஊழியர் களுக்கு அடிக்கடி தெரியப்படுத்துவது அவசியம்'' என்றார்.
வீட்டில் இருந்து வேலை பார்ப்பதில் இருக்கும் பாசிட்டிவ், நெகட்டிவ் விஷயங்களை சொல்லிவிட்டோம். இனி இதைப் பின்பற்ற வேண்டியது நீங்கள்தான்!