
முதலீடு
ஜானகிராமன்.ஆர், போர்ட்ஃபோலியோ மேலாளர், எமெர்ஜிங் மார்க்கெட் ஈக்விட்டி - இந்தியா, ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன்
புதிய ஆண்டில் உலக பங்குச் சந்தைகள், இந்தியப் பங்குச் சந்தையின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு முதலீட் டாளர்களிடையே பரவலாக இருக்கிறது. சர்வதேச மற்றும் இந்தியப் பங்குச் சந்தையில் 2022-ம் ஆண்டில் என்ன நடந்தது என்பது 2023-ம் ஆண்டின் சந்தை வருமானத்தில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, 2022-ம் ஆண்டு மிகவும் சிறந்த ஆண்டாக இருந்தது.

சென்செக்ஸ் இதுவரை இல்லாத அளவுக்குப் புதிய உச்சமாக 63000 புள்ளிகளைத் தாண்டி, 63583-க்கு உயர்ந்து புதிய சாதனை படைத்தது. 2022 டிசம்பர் 23-ம் தேதி நிலவரப்படி, கடந்த ஆறு மாதக் காலத்தில் சென்செக்ஸ் சுமார் 16% உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் 6% அதிரித்துள்ளது. 2022-ம் ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரைக்குமான காலத்தில் சென்செக்ஸ் புள்ளிகள் 4.29% உயர்ந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி சரிவு...
வரும் 2023-ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி சரிவடைய வாய்ப்புள்ளது. இந்தியா வுக்கும் மற்ற வளர்ந்துவரும் சந்தைகளுக்கும் (Emerging Markets) இடையிலான வளர்ச்சி வேறுபாடு சற்று குறைய வாய்ப்புள்ளது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, எங்களின் மதிப்பீடுகள் நீண்ட கால சராசரி அளவைவிட சற்று அதிகமாகவே உள்ளது.
2022 என்பது மற்ற பெரும்பாலான நாட்டு சந்தைகளுக்கு இயல்பான மதிப்பீட்டு நிலை யில் இருந்தபோதும், இந்தியாவுக்கு சாதகமான ஆண்டாக இருந்தது. ஆனால், 2023-ம் ஆண்டு இந்திய பங்குச் சந்தை ஓர் இறக்க நிலையில் செயல்படலாம். எனவே, குறுகிய காலத்தில் பங்குச் சந்தை மூலமான வருமானம் குறித்து நாம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதாவது, குறுகிய காலத்தில் அதிக வருமானத்தை எதிர்பார்க்கக் கூடாது.
இதற்கு நேர்மாறாக, நடுத்தரக் காலத்தில் பங்குச் சந்தையின் செயல்பாடு முற்றிலும் நேர்மறையாக இருக்கக்கூடும். விரிவாக்க சுழற்சி மீட்சி (Capex Cycle Recovery), ரியல் எஸ்டேட் மீட்சி, சீனா ப்ளஸ் ஒன் (China Plus One) வளர்ச்சி போன்ற தொழில் துறை அவுட்சோர்ஸிங் காரணிகள் அனைத்தும் தெளிவான கண்ணோட்டத்தை வழங்கி, மிகவும் நேர்மறையானதாக ஆக்குகின்றன.
ஆனால், குறுகிய காலத்தில் அதாவது, அடுத்த ஆறு முதல் 12 மாதங்கள் வரை பங்குச் சந்தை மூலமான வருமான எதிர்பார்ப்புகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இதிலிருந்து மிதமான வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

தகவல் தொழில்நுட்பத் துறை...
தகவல் தொழில்நுட்பத் துறையின் எதிர்காலம் 2023-ம் ஆண்டில் எப்படி இருக்கும்? இந்த நேரத்தில் அமெரிக்காவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான அக்செஞ்சரின் (Accenture) 2022-23-ம் ஆண்டின் முதல் காலாண்டு நிதி நிலை முடிவுகள் கவனத்துக்குரியதாக மாறி இருக்கிறது. அது வெளி வந்தபிறகு, 2023-ம் ஆண்டில் ஐ.டி துறை எப்படி இருக்கும் என்கிற விவாதம் இன்னும் தீவிரமாகி இருக்கிறது. முதல் காலாண்டில் அக்செஞ்சர் நிறுவனத்தின் நிதிநிலை மிகவும் வலிமையாக இருக்கிறது.
அமெரிக்க தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் செப்டம்பர் முதல் ஆகஸ்ட் வரையிலான 12 மாத காலத்தை நிதி ஆண்டா கப் பராமரித்து வருகின்றன. முதல் காலாண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் 1,570 கோடி டாலராக உள்ளது. இது அமெரிக்க டாலர் மதிப்பில் 5% அதிகரிப்பாகும். இந்த அமெரிக்க நிறுவனத்தின் வருமான செயல்பாடு, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங் களின் செயல்பாட்டை அடிக்கடி சுட்டிக் காட்டுவதாக இருக்கும்.
அதாவது, இந்த நிறுவனத் தின் செயல்பாடு நன்றாக இருக்கும்பட்சத்தில், இந்தியா வின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாடும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
குறிப்பாக, இந்தியாவின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களான விப்ரோ, இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டிங் சர்வீசஸ், டெக் மஹிந்திரா மற்றும் ஹெச். சி.எல் டெக் நிறுவனத்தின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
கடந்த சில காலாண்டு களாக பங்குச் சந்தையில் சிறிய அளவில் நிச்சயமற்றதன்மை காணப்பட்டது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வருமானம் மிகவும் பலவீனமாக இருந்ததால், இந்த நிச்சயமற்ற தன்மை காணப்பட்டது. எனவே, அந்தச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு தகவல் தொழில்நுட்பப் பங்குகள் குறித்த முடிவை ஒருவர் எடுக்கலாம்.
இப்போதும்கூட ஐ.டி துறையின் மதிப்பீடு கோவிட்டுக்கு முந்தைய அளவைவிட அதிகமாக உள்ளது. காரணம், கோவிட் காலத்தில் ஐ.டி துறையின் மதிப்பீடு மிக அதிகமாக மறுபரிசீலனை செய்யப் பட்டுள்ளது. மேலும், கோவிட் பாதிப்பிலிருந்து இயல்பு நிலைமைக்கு இன்னும் முழுமையாகத் திரும்ப வில்லை. அதனால்தான், தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி எதிர் காலத்தில் சிறப்பாக இருக்கும் என இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது.
தற்போதைய நிலையில், இந்தியாவின் பங்குச் சந்தையில் கவனிக்க வேண்டிய துறைகள் எவை எனப் பார்ப்போம்.
மின்னணு உற்பத்தி...
எதிர்காலத்தில் சிறப்பாகச் செயல்படக்கூடிய ஒரு துறை, மின்னணு உற்பத்தி (Electronic Manufacturing) ஆகும். இது உலகளவில் மிகப் பெரிய வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்தத் துறை நிறுவனங்களில் தொழிலாளர் களுக்கான செலவும் குறை வாக இருப்பது உற்பத்தி செலவை வெகுவாகக் குறைக்க உதவியாக இருக்கிறது.
இந்தத் துறையில் சில குறைபாடுகள் இருந்த போதிலும், அவை இப்போது சரிசெய்யப்பட்டு விட்டன. ் இந்தத் துறையில் சில பட்டிய லிடப்பட்டுள்ள நல்ல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் மேலும் சில மின்னணு உற்பத்தி நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கலாம்.
இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் ஸ்மால்கேப் அல்லது மிட்கேப் நிறுவனப் பிரிவில் வருகின்றன. ஆனால், இந்த நிறுவனங்கள் அடுத்த மூன்று ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளில் மிகவும் நல்ல வளர்ச்சி பெற்று பெரிய நிறுவனங்களாக மாற வாய்ப்புண்டு. எனவே, அடுத்த ஓராண்டு காலத்தில் நன்றாகச் செயல்படப் போகிற துறைகளில் இதுவும் ஒன்றாகும்.

ரியல் எஸ்டேட் துறை...
நான் நேர்மறையாகப் பார்க்கும் மற்றொரு துறை, ரியல் எஸ்டேட் துறை. கோவிட் பாதிப்பு சொந்த வீடுகளுக்கான தேவையை அதிகரித்ததுடன், அது தொடர்ந்து உறுதியாக இருக்கிறது. கட்டி முடித்து விற்கப்படாமல் இருந்த வீடுகளின் எண்ணிக்கை குறைந்த எண்ணிக்கைக்கு வந்துள்ளன.
மேலும், நாடு முழுவதும் சொத்து விலை அதிகரித்து வருவதைக் காண்கிறோம். தேவை இன்னும் உயரக் கூடும். இது ஒட்டுமொத்த மேக்ரோ வளர்ச்சி மற்றும் கார்ப்பரேட் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவக்கூடியதாக இருக்கும்.
எனவே, மீண்டும் வளர்ச்சிக் காணக்கூடிய துறையாக ரியல் எஸ்டேட் இருக்கும். இந்தத் துறை அடுத்த இரண்டு ஆண்டுகளில் நியாயமான நல்ல செயல்திறனைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
புத்தாண்டில் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மின்னணு உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளை முதலீட்டுக்குக் கவனிக்கலாம்.
முதலீட்டாளர்கள் அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துகள்!