
கோல்டு இ.டி.எஃப்
குர்ஜித் சிங் கல்ரா, தலைவர், இ.டி.எஃப் விற்பனை, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஏஎம்சி
முதலீட்டுக்கான சரியான சொத்து ஒதுக்கீடு (Asset Allocation) என்று வரும்போது, தங்கம் முக்கியமான பங்கு வகிக்கிறது. தவிர, நம் நாட்டில் தங்கம் என்பது மிக முக்கியமான முதலீடாக இருக்கிறது. இது பெரும்பாலும் ஆபரண வடிவத்தில் உள்ளது.

சில மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் 27,000 டன் தங்கம் உள்ளது. ஆனால், இன்றைய வேகமான நிதிமயமாக்கலின் (Financialization) காரணமாக, முதலீட்டாளர்கள் மத்தியில் படிப்படியாக மாற்றம் ஏற்பட்டு வருகிறது. தங்கத்தை நகைகள், நாணயங்கள் அல்லது பார்கள் வடிவில் வாங்குவதற்குப் பதிலாக, டிஜிட்டல் வடிவில் தங்கப் பத்திரம், கோல்டு சேவிங்ஸ் மியூச்சுவல் ஃபண்ட், கோல்டு இ.டி.எஃப் (Gold ETF - Gold Exchange Traded Fund) திட்டங்கள் மூலம் வாங்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
கோல்டு இ.டி.எஃப் என்றால்..?
கோல்டு இ.டி.எஃப் என்பது பங்குச் சந்தையில் பங்குகள் போல் வர்த்தகமாகும் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகள் ஆகும். கோல்டு இ.டி.எஃப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வெளியிடுகின்றன. இதில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு அவசியம்.
இந்த கோல்டு இ.டி.எஃப் ஃபண்டின் யூனிட்டுகள் முதலில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுகின்றன. அதன் பிறகு, இந்த கோல்டு இ.டி.எஃப் யூனிட்டுகளை ஒருவர் எப்போது வேண்டுமானாலும் பங்குச் சந்தையின் வர்த்தக நேரத்தில் வாங்கலாம் அல்லது விற்கலாம். தங்கத்தின் விலை மாற்றத்துக்கேற்ப கோல்டு இ.டி.எஃப்பின் யூனிட் என்.ஏ.வி மதிப்பும் மாற்றத்துக்கு உள்ளாகும். அதாவது, தங்கத்தின் விலை ஏறினால் என்.ஏ.வி அதிகரிக்கும்; குறைந்தால் என்.ஏ.வி குறையும்.

50 ரூபாய்கூட முதலீடு...
இதற்குமுன் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு யூனிட்டின் மதிப்பானது, 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலைக்கு இணையாக இருந்தது. இப்போது தங்கத்தின் விலை மிகவும் உயர்ந்து ஒரு கிராம் 5,000 ரூபாயைத் தாண்டியுள்ளது. அனைவரும் கோல்டு இ.டி.எஃப்பில் முதலீடு செய்யும் வசதியாக ஒரு கிராமை 100 பகுதியாகப் பிரித்து அதை ஒரு யூனிட்டாகக் கணக்கிட்டு சுமாராக ரூ.50-ஆக விலை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். அதாவது, கோல்டு இ.டி.எஃப் ஒரு யூனிட் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.50-ஆக உள்ளது. அந்த வகையில் ஒருவரிடம் ரூ.50 இருந்தால் கூட அவர் கோல்டு இ.டி.எஃப்பில் முதலீடு செய்ய முடியும்.
கோல்டு இ.டி.எஃப் திட்டத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் தொகைக்கு இணையான தங்கத்தை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தங்கக் கட்டிகளாக வாங்கி, பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். செபி அமைப்பின் அதிகாரிகள் இதை அவ்வப்போது பரிசோதித்து உறுதிப் படுத்துவார்கள். அந்த வகையில், தங்கத்தைப் பாதுகாக்கும் பிரச்னை முதலீட்டாளர்களுக்குக் கிடையாது.
இ.டி.எஃப் ஏன் பெஸ்ட்..?
பாரம்பர்ய முறையில் ஆபரண நகைகளாகத் தங்கத் தில் முதலீடு செய்வதைவிட கோல்டு இ.டி.எஃப் மூலம் முதலீடு செய்வதில் 5 முக்கிய மான அம்சங்கள் உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்.
1. தூய்மை, தரம்...
தங்கத்தில் நகை வடிவில் முதலீடு செய்யும்போது மிகப் பெரிய கவலையாக இருப்பது, அதன் தரம் ஆகும். சில சமயங்களில், நகைக் கடைகள் குறிப்பிடும் தரத்தில் தங்கம் இருப்பதில்லை. கோல்டு இ.டி.எஃப் என்பது 99% சுத்தமான தங்கத்தின் விலையை எதிரொலிக்கிறது. அந்த வகை யில், முதலீட்டாளர்கள் தங்கத் தின் தரம் மற்றும் தூய்மை பற்றிக் கவலைப்படத் தேவை யில்லை.
24 காரட் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துக்கேற்ப கோல்டு இ.டி.எஃப் யூனிட்டுகளின் மதிப்பும் ஏறி இறங்கும். தங்க நகை தேவைப்படும்போது யூனிட்டுகளை விற்று, கிடைக் கும் பணத்தைக் கொண்டு நமக்குப் பிடித்த நகைகளை வாங்கிக்கொள்ளலாம்.
2. பாதுகாப்புச் செலவுகள்...
ஆபரண நகைகளாக வாங்கி வைக்கும்போது, அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க வங்கி லாக்கருக்கான வாடகை செலவு செய்ய வேண்டி யிருக்கிறது. மேலும், லாக்கர் ஒதுக்கீட்டுக்காக ஃபிக்ஸட் டெபாசிட் தொடங்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. கோல்டு இ.டி.எஃப் திட்டத்தில் இந்தப் பிரச்னை இல்லை.
மேலும், ஆபரண நகையாக வாங்கும்போது செய்கூலி, சேதாரம் இருக்கிறது. மேலும், இப்போது வாங்கி வைக்கும் நகை டிசைன் சிறிது காலத்தில் பழைய டிசைனாக மாறிவிடும். ஆபரண நகையை லேட்டஸ்ட் டிசைன் நகையாக மாற்ற மீண்டும் செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி கொடுக்க வேண்டி வரும். தங்க நகை என்கிறபோது திருட்டு பயம் இருக்கும். கோல்டு இ.டி.எஃப் டீமேட் கணக்கில் இருப்பதால், அந்த பயம் இல்லை.

3. முதலீடு செய்வது சுலபம்...
கோல்டு இ.டி.எஃப் ஒரு யூனிட் கூட வாங்க முடியும் என்பதால் குறைவான வருமானம் கொண்ட வர்கள்கூட முதலீட்டை சுலபமாக ஆரம்பித்துவிடலாம். ஆனால், தங்க நகை, தங்க நாணயம் வாங்க வேண்டும் என்றால் சில ஆயிரங்கள் தேவைப்படும்.
4. சிறு தொகைகூட முதலீடு செய்யும் வசதி...
கோல்டு இ.டி.எஃப் முதலீட்டை ஆரம்பிக்க சுமார் ரூ.50 போதும் என்பது பாசிட்டிவ்வான அம்சம். இதற்கு டீமேட் கணக்கு அவசியம். டீமேட் இல்லாதவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கோல்டு சேவிங்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானில் (SIP) முதலீடு செய்ய நிறுவனத்தைப் பொறுத்து ரூ.100, ரூ,500, ரூ.1,000 போதும். இதற்கு பான், ஆதார் இருந்தால் போதும்.
5. வெளிப்படைத்தன்மை...
ஆபரண நகை, தங்க நாணயத் தின் விலை என்பது ஒவ்வொரு கடைக்கும் சிறிய அளவில் வேறுபாடு இருக்கும். இந்த விலை வேறுபாட்டுக்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது கடினம். ஆனால், கோல்டு இ.டி.எஃப்பில் அதன் யூனிட் விலை மிகவும் வெளிப்படையானது. தங்கத்தின் தேவை மற்றும் அளிப்புக்கு (Demand and supply) ஏற்ப கோல்டு இ.டி.எஃப் விலை மாற்றத்துக்கு உள்ளாகும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வாங்கும் அனைவருக்கும் ஒரே விலைதான். அந்த விலையானது காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
தங்க நகையை விற்கும்போது பழைய நகை, வேறு கடையில் வாங்கிய நகை என்பதற்காக எடைக் குறைப்பு மற்றும் விலைக் குறைப்பு செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருக்கும். ஆனால், கோல்டு இ.டி.எஃப் யூனிட்டுகளில் இந்த மாதிரியான குறைப்புகள் எல்லாம் இல்லை. பங்குச் சந்தையில் என்ன விலைக்கு விற்கப்பட்டு வருகிறதோ, அதே விலையில் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் கிடைக்கும்.
பொருளாதாரம் சிக்கலில் தங்கம் விலை...
உலக அளவில் நிச்சயமற்ற நிலை, நிதி நெருக்கடி, முக்கிய நாடுகளுக்கு இடையே போர், அதிக பணவீக்க விகிதம், பொருளாதார மந்தநிலை நிலவும் காலங்களில் தங்கத்தின் விலை ஏற்றம் காணப்படும். ஒருவரின் முதலீட்டுக் கலவையில், முதலீட்டாளரின் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் அஸெட் அலொகேஷன்படி தங்கம் கட்டாயம் இடம்பெற வேண்டும். மேலே குறிப்பிட்ட சாதகமான அம்சங்களைக் கவனிக்கும்போது தங்கத்தை முதலீடாக நினைத்து வாங்குபவர்களுக்கு கோல்டு இ.டி.எஃப் சிறந்த திட்டமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆதாயத்துக்கு வருமான வரி எப்படி..?
கோல்டு இ.டி.எஃப்கோல்டு இ.டி.எஃப் யூனிட்டுகளை மூன்றாண்டு களுக்குமேல் வைத்து விற்கும்போது லாபகரமாக இருக்கும். அதை மூன்றாண்டுகள் கழித்து விற்கும் போது நீண்ட கால மூலதன ஆதாய வரியைக் கட்ட வேண்டும். இந்த வரி பணவீக்க சரிக்கட்டலுக்குப் பிறகு 20% ஆகும்.
மூன்றாண்டுக்குள் யூனிட்டுகளை விற்று லாபம் பார்க்கும்போது, குறுகிய கால மூலதன ஆதாய வரியாக, ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கு வரி கட்ட வேண்டும்.